Sunday, November 30, 2008

இது என்னோட 75 வது பதிவு மழை, மும்பை,என் சந்தேகங்கள்.... இன்னும் பல

மறந்திடிச்சிப்பா இது என்னோட 75 வது பதிவு


போன வாரம் மழை, மும்பையின்னு ரொம்ப சூடாவே இருந்தது.

மும்பை தீவிரவாதம் பற்றி நமது பதிவர்கள் கொதித்து எழுதியிருந்தார்கள். அதில் பதிவர் அருவை பாஸ்கர் சொல்லியிருந்த கருத்து சற்று வித்தியாசமா இருந்துச்சி. கீழே படியுங்க

//மேலும் பல வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும் கொல்ல பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இனிமேல் எங்கள் நாட்டு அரசியல் வாதிகளை வெள்ளைக்காரர்கள் சும்மா விட மாட்டார்கள் . அதற்க்காகவாது எங்கள் நாட்டு அரசாங்கம் நிச்சயம் உங்களை ஒடுக்க பார்க்கும் .
நாங்களும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவோம் .வெள்ளைக்காரர்கள் உயிர் என்ன இந்தியனின் உயிரை போல கேட்பார் இல்லாதது என்று நினைத்தீர்களா ?//

இந்நேரத்தில் தேசியாபாதுகாப்பு படைவீரர்கள், ராணுவ வீரர்கள், மும்பை பொலீஸ்க்கு ஸ்பெஷலா வணக்கம் வைங்கப்பா.

இந்த விசயத்திலையும் அரசியல் பண்ணும் அரசியல்வியாதிகளை தூக்கிப்போட்டு மிதிக்கவும்.

மழையிலும் கட்டிங் பார்த்த பள்ளிக்கரணை பேரூராட்சி.

இந்த வாரம் ரொம்பவே படுத்திடிச்சிப்பா நிஷா.வியாழக்கிழமை காலையில் 27.11.08 பாலாஜி பல் மருத்துவமனை தாண்டி தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்தது.பஸ் எல்லாம் போய்ட்டுதான் இருந்தது.பக்கத்துல இருக்க பெட்ரோல் பல்க் சொல்லிச்சின்னு பேரூராட்சி நிர்வாகம் நல்லா இருந்த ரோட்டுல பள்ளம் தொண்டி குழாய பதிச்சு நாசம் பண்ணிட்டாங்க. அப்படியே விட்டிருந்தா கூட அன்னைக்கு நைட்டே தண்ணி வடிந்திருக்கும்.கட்டிங்க்கு ஆசைப்பட்டு,ரோட்டை நாசம் செஞ்சு இப்ப 3 நாளா பஸ் போக்குவரத்தே கிடையாது. ஆட்டோ, ஷேர் ஆட்டோ காட்டுல அடைமழை.வேளச்சேரி போகனும்னா மேடவாக்கம் கூட்ரோடுவரவேண்டியிருக்குப்பா. மாநகர போக்குவரத்து கழகமாவது பள்ளிக்கரணைக்கு ஒரு கட் சர்வீசாவது விடலாம்.அட போங்கப்பு

இந்தபதிவு எழுதிக்கிட்டேயிருக்கும் போது ஷிவ்ராஜ் பாட்டீல் ராஜிநாமானு நியுஸ்ல சொன்னாங்க. இப்பவாவது மனுசருக்கு ரோஷம் வந்துதே...

கேள்விக்கு பதில் சொல்லுங்கடே

1.அம்மாவை பற்றி நல்லா தெரிஞ்சும் கம்யுனிஸ்ட்காரவுக ஏன் இப்படி பண்றாக.
2.காடு வெட்டி குரு வுக்கு ஜாமீன் கிடைச்சிருச்சே எப்படிடே?
3.விசயகாந்து எங்கே இருக்கார்?

இந்த வார காமெடி

சுப்பிரமணிய சாமி சொன்னது
" கருணாநிதியை நீங்களெல்லாம் தமிழர் என்று தானே நினைத்துக்கொண்டிருக்கிறீகள்?அவருடைய அப்பா முத்து வேலருடைய மூதாதையர்கள் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.""

பதிவை படிச்சிட்டு பிடிக்குதோ இல்லையோ கருத்தை சொல்லிட்டு போங்கப்பா.

அப்படியே ஓட்டையும் குத்திட்டு போங்க.

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்றார் நன்னூல் ஆசிரியர் பவணந்தி. கால மாற்றத்துக்கேற்ப வாழ்க்கை முறை மாற்றங்களும் தவிர்க்கமுடியாதவை என்று பழந்தமிழருக்கு இருந்த அறிவு கூட இன்றைக்கு நமக்கு இல்லை. சில மாற்றங்களை துளியும் முணுமுணுப்பு இல்லாமல் ஏற்கிறோம். சிலவற்றைக் கடுமையாக எதிர்க்கிறோம். சிலவற்றை வெளியிலே எதிர்த்து ரகசியமாக ஆதரிக்கிறோம். சிலவற்றை பகிரங்கமாக ஆதரித்துவிட்டு ரகசியமாக எதிர்க்கிறோம்.

தமிழர்கள், இந்தியர்கள் வாழ்க்கையில் குடும்பம் என்ற அமைப்பின் பங்கு மிகவும் பெரிதாக எப்போதும் பேசப்படுகிறது. ஏதோ இந்தியாவுக்கு வெளியே யாருமே குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் தாறுமாறாக வாழ்வது போலவும் இங்கே மட்டும்தான் குடும்பம் என்ற அமைப்பு அதன் முழுப் புனிதத்துடனும் முழு வீச்சுடனும் நம் சமூகத்தையே காப்பாற்றிக் கொண்டிருப்பது போலவும், பல கலாசாரக் காவலர்கள் முழங்குவது உண்டு.

மூன்று செய்திகளை இந்த வாரம் படித்தேன். மூன்றும் ஒவ்வொரு விதத்தில் குடும்பம் என்ற அமைப்பு, ஆண்-பெண் உறவு எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகளை நம் மனதில் எழுப்பக்கூடியவை.

முதல் செய்தி மீரட்டிலிருந்து.

பிரியங்கா என்ற பாலிடெக்னிக் மாணவி தன் சிநேகிதி பிரியங்காவின் உதவியுடன், தன் அப்பா, அம்மா இருவரையும் கொலை செய்ததாகக் கைதாகியிருக்கிறாள். அம்மாவைக் கழுத்தை நெரித்தும் தடுக்க வந்த அப்பாவை கத்தியால் குத்தியும் கொன்றிருக்கிறார்கள். கைதான பெண்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு தெரிவித்ததாக சில காரணங்களை போலீஸ் பட்டியலிட்டிருக்கிறது.

பிரியங்காவும் அஞ்சுவும் இண்டீரியர் டிசைன் படிக்கும் மாணவிகள். பிரியங்கா மீரட்டில் முன்னர் அழகிப் போட்டியில் கலந்துகொண்டு ஜெயித்தவள். இப்போது இருவரின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறி. போலீசிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை இப்போது அவர்களுடையவழக்கறிஞர் மறுக்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட காரணங்கள் என்ன? இருவர் வீட்டிலும் இருவரையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். பிரியங்காவின் அப்பா அவளைத் தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்று தொடர்ந்து அவமானப்படுத்தியிருக்கிறார். தன் மனைவிக்குக் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சொல்லிவந்த அவர் ஓர் இன்ஜினீயர். அஞ்சுவின் வீட்டில் அவளுடைய மாமாவும் மறுசகோதரனும் அவளை அடித்து உதைத்து வந்திருக்கிறார்கள். பிரியங்கா, அஞ்சு இருவரையும் அடைத்து வைத்தும், குண்டர்களைக் கொண்டு தாக்கியும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் வந்ததாக ஆகஸ்ட் மாதத்திலேயே இரு பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக தங்கவைக்கப்பட்ட விடுதியிலிருந்து இருவரும் சில நாட்களில் சென்று விட்டனர். டெல்லியில் அறை எடுத்துத் தங்கியிருந்தனர். மீரட் திரும்பி வந்து பிரியங்கா வீட்டுக்குப் போய் பணம் கேட்டபோது தாய் தர மறுத்தார். அஞ்சுவுடன் பிரியங்காவுக்கு இருக்கும் சிநேகம் பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கோபத்தில் பிரியங்கா தாயைக் கழுத்தை நெரித்தாள். சத்தம் கேட்டு வந்த அப்பாவை அவளும் அஞ்சுவுமாக கத்தியால் குத்தினார்கள். வீட்டிலிருந்த பணம், நகைகள், அப்பாவின் உயில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு டெல்லிக்குப் போய்விட்டார்கள். சில தினங்களிலேயே போலீஸ் மோப்பம் பிடித்து வந்து கைது செய்துவிட்டது.

சிறுமிகளாக இருந்த நாட்களிலிருந்து அவரவர் குடும்ப ஆண்களால் சீண்டப்பட்டும் உபயோகிக்கப்பட்டும் மிரட்டப்பட்டும் வந்த இரு பெண்களுக்கும் பரஸ்பர நட்பு ஒன்றுதான் ஆறுதலாக இருந்திருக்கிறது. ஆனால் அவர்களிடையே இருந்த உறவே மற்றவர்களால் மேலும் இழிவுபடுத்தப்பட்டது. பெண்-பெண், ஆண்-ஆண் உறவை எந்தக் குடும்பத்தாலும் சகித்துக் கொள்ள முடிவதில்லை. போலீசிடம் இரு பெண்களின் உறவினர்களும் இப்போது `ரெண்டு பேரும் கெட்ட பெண்கள்', `தப்பான உறவுடைய பெண்கள்' என்று சொல்லுகிறார்கள்.

ஆண்-பெண் உறவானாலும் சரி, மாற்று உறவுமுறைகளானாலும் சரி, எதையும் ஆரோக்கியமாக அணுகும் மன நிலையில் நம் சமூகம் இல்லை. இங்கே ஆண்-பெண் உறவும் சிக்கலானதாகவே இருக்கிறது. மாற்று வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்கள், ஆண்கள் நிலை இன்னும் சிக்கலானது. பகிரங்கமாகக் கெட்டவை என்று சொல்வதையெல்லாம் ரகசியமாகச் செய்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதை குடும்பம், பண்பாடு என்ற போர்வையில் போர்த்தி மறைப்பதிலும் துளியும் வெட்கம் இல்லை. ஆனால் குடும்ப உறவுகள், மனித உறவுகள் பற்றிய எந்தப் பிரச்னையையும் பகிரங்கமாகப் பேசவும் விவாதிக்கவும் மட்டும் தயக்கமும் எதிர்ப்பும் இங்கிருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் தினசரி செய்தித்தாளில் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று கள்ளக் காதல்கள், அதனால் ஏற்பட்ட கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறேன். எல்லாம் குடும்பப் பெண்கள்; குடும்ப ஆண்கள்.

இப்படிப்பட்ட சூழலில் நேபாளத்திலிருந்து ஒரு செய்தியைப் படித்தேன். அதுதான் இந்த வாரத்தின் இரண்டாவது செய்தி. உலகத்திலே ஒரே இந்து நாடாக தன்னை அறிவித்துக் கொண்டு இருந்து வந்த நாடு நேபாளம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கே மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்தி மதச் சார்பற்ற பல கட்சி ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்தியதில் பயனடைந்திருப்பவர்களில் முக்கியமானவர்கள் சிறுபான்மையினரான ஓரின உறவாளர்கள். முதல்முறையாக அங்கே ஒரு ஹோமோசெக்ஸுவல் எனப்படும் ஆண்-ஆண்உறவாளர், தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி.யாகியிருக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறை இன்ஜினீயரான சுனில் பாபு பந்த் பல வருடங்களாக சுயபால் உறவாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். நேபாளத்தின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் தேர்தலில் நின்று ஜெயித்திருக்கிறார். (இங்கே இடதுசாரிக் கட்சிகள் செக்ஸுவாலிட்டி பற்றிய விவாதங்களில் கூட பகிரங்கமாகக் கலந்துகொள்வதில்லை. 1917ல் ருஷ்யப் புரட்சி நடந்தபிறகு லெனின் ஆட்சிக் காலத்தில், உலகத்திலேயே சுயபால் உறவை சட்டப்படி செல்லத்தக்கதாக ஆக்கிய முதல் நாடு சோவியத் யூனியன்தான்.)

நேபாளத்திலும் இந்தியாவைப் போலவே சுயபால் உறவு என்பது செயற்கையான செக்ஸ் உறவாகக் கருதப்படுகிறது. அதனால் அது சட்டப்படி குற்றம். மூன்றாம்பாலினர் 13 பேரை நேபாளம் நாடுகடத்தியிருக்கிறது. இருவர் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

இப்போது அந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் ஓரின உறவாளர்கள் மற்ற குடிமக்களைப் போல திருமணம் செய்துகொள்வது முதல் சொத்து, கல்வி, என்று எல்லாவற்றிலும் சம உரிமை உடையவர்கள் என்று அறிவித்திருக்கிறது. இதற்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் ஹோமோசெக்ஸுவாலிட்டியைக் குற்றமாகக் கருதும் 377ம் பிரிவை நீக்கிவிடலாம் என்று அமைச்சர் அன்புமணியும், நீக்கக்கூடாது என்று அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் ஒரே அரசின் சார்பில் நீதி மன்றத்தில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது செய்தி ஆண்-ஆண் உறவாளர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியது. நேபாளத்தைப் போலவே இன்னொரு பழமைவாத நாடு இஸ்ரேல். அங்கே ஓரின உறவாளர்கள் திருமணம் செய்ய உரிமையில்லை. ஆனால் குழந்தை பெற்றுக் கொண்டால், அதை இஸ்ரேல் பிரஜையாகப் பதிவு செய்யவும் சம உரிமை பெறவும் பாஸ்போர்ட் வாங்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த யோநாதன் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடும் கிரீன்பீஸ் இயக்கத்தின் பொதுஜனத்தொடர்பாளர். அவரும் ஓமர் என்ற ஓரின உறவாளர் உரிமை இயக்கப் போராளியும் தம்பதிகள். ஏழாண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வரும் இருவருக்கும் குழந்தை பெற ஆசை வந்தது.

அதற்கு உதவியது நம் இந்தியாதான்!
யோநாதனின் விந்துவிலிருந்து உயிரணுவை மும்பையில் இருக்கும் மருத்துவமனை மூலம் ஒரு இந்திய வாடகைத் தாய்க்குக் கொடுத்து அவர் கருவுற்றுக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொடுத்திருக்கிறார். குழந்தையின் பெயர் ஏவ்யதார். யூத மொழியில் `நிறைய அப்பாக்கள்' என்று அர்த்தமாம்.

இந்தியாவில் ஓரின உறவுதான் சட்ட விரோதமானது. வாடகைத் தாயாக குழந்தை பெற்றுக் கொடுப்பது சட்டப்பூர்வமானது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் வணிகரீதியிலான வாடகைத் தாய் முறையை அங்கீகரித்திருக்கிறது. அமெரிக்காவில் இதற்கு ஒரு லட்சம் டாலர் செலவாகும், இந்தியாவில் மொத்த செலவு 25 ஆயிரம் டாலர்கள்தான். உயிரணுவைத் தருவதற்கும், பின்னர் குழந்தையை வாங்கிச் செல்லவும் இரு முறை இந்தியாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், மருத்துவச் செலவு எல்லாமாக 17,500 டாலர். 7500 டாலர் வாடகைத் தாய்க்கு. தங்கள் குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ளவும் குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவுக்காகவும் ஏழைப் பெண்களே வாடகைத் தாயாகிறார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆண்டு தோறும் இப்படி மேட்டு ஆர்டர் தயாரிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. குழந்தையின் எந்த ரிக்கார்டிலும் வாடகைத் தாயின் பெயர் இடம் பெறாது. அவரும், குழந்தைக்கு ஆர்டர் கொடுத்தவர்களும் ஒருவரையொருவர் அறியவும் முடியாது.

யோநாதன்_ ஓமர் தம்பதி அடுத்த வருடமும் இந்தியாவுக்கு இரண்டாவது குழந்தைக்காக வர இருக்கிறார்கள். இம்முறை ஓமரின் உயிரணுவிலிருந்து. ஓரின உறவுத் தம்பதிகளால் குழந்தை வளர்க்க முடியாது; குடும்பம் நடத்த முடியாது என்று சொல்வதெல்லாம் உளறல். எங்களைப் போல பலர் அதைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் யோநாதன் - ஓமர் ஜோடி. எது குடும்பம்? குடும்பத்தின் அமைப்பு என்ன? அதன் மதிப்பீடுகள் என்ன? குடும்பத்தின் பெயரால் ரகசியமாக நடக்கும் வன்முறைகள் என்ன? மனித உறவுகளின் அர்த்தம் என்ன? என்று பல முக்கியமான கேள்விகளை இந்த மூன்று செய்திகளும் எழுப்புகின்றன. நாமோ பதில்களைத் தேடாமல் ஜாதிச் சேற்றில் தலை புதைத்துக் கொண்டிருக்கிறோம். எந்த ஜாதிப் பெண் தங்கள் குழந்தையைப் பெற்றுத் தருகிறாள் என்பதைப் பற்றிக் கவலைப்படாத யோநாதனும் ஓமரும் தலை நிமிர்ந்து நடக்கத் தகுதியானவர்கள். கத்தியும் கம்புமாக நம் பிள்ளைகளைத் திரிய விட்டிருக்கிற நாம்?.

நன்றி குமுதம்

Sunday, November 23, 2008

என் சந்தேகங்கள்... கவித... இன்னும்...........

முதன்முறையா மொக்கை போடபோறேன். ஆதரவு குடுங்கோ.

முதல்ல என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கடே.

1.கலைஞரும் ,மாறனும் மாத்தி மாத்தி அறிக்கை வுட்டு திட்டிக்கிறாங்க, ஆனா ஏன் இவரும் கட்சியவுட்டு தூக்கமாட்டுக்காரு, அவரும் வெளிய போமாட்டுக்காரே ஏன்??????


2.எதோ கச்சா எண்ணையாமே விலை ரொம்ப குறைஞ்சிச்சாம். ஏன் பெட்ரோல் விலையை குறைக்கல????


3. கம்யூனிஸ்ட் காரவுக அம்மா கூட கூட்டணி சேரப்போறாங்களாம். அப்போ விசயகாந்தும்,பிஜேபியும் என்னலே பண்ணுவாங்க??????


4.அதிமுககாரவுக இனிமே யாரையும் புகழ்ந்து பேசக்குடாதுன்னு அம்ம சொல்லிருச்சே, இனிமே அதிமுக காரவுக பேசுரதுக்கு என்ன பண்ணுவாங்க??

மேலே கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிடனும். சொன்னா திருநெல்வேலி அல்வா தருவேன்.


இல்லைனா திருநெல்வேலி அருவா வரும்... சொல்லிட்டேன்



கவித

உன்னைப் பார்த்த நாள் முதல்
உன் நட்புக்கு ஆசைப்பட்டேன்
பின்பு காதலிக்க ஆரம்பித்தேன்
உன்னை அல்ல
உன் நட்பை!!!!!!!!!!

( உபயம்: வெளச்சேரி டூ பீச் புகைவண்டி)


ஜோக்

கலைஞரும், ஜெயலலிதாவும் லவ் பண்ணினால் ஜெயா கலைஞரைப் பாத்து என்ன பாடல் பாடுவார்?????

.

." உன் தலை முடி உதிவதைக்கூட தாங்க முடியாது அன்பே."...........

Saturday, November 22, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

இணையதளத்தில் பல விஷயங்களை சுதந்திரமாக உடைத்து எழுதும் வசதி இன் னும் பத்திரிகையுலகுக்கு வந்து சேரவில்லை. அப்படிப்பட்ட விஷயங் களில் ஒன்று, சட்டக் கல்லூரி வன்முறை.


* மாணவர் மனங்களில் இப்படிப் பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது
இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலை முறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.

* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் மோதிக்கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?

ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவருக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்த மற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மனநிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ளத் துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.

* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?

நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.

* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?

ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிகச் சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கப்படுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள, பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது. நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி `அந்தஸ்து'க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத்தனமோ இயல்பாக்கப்படுகிறது.

இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ?

அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.

* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?

ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். வெவ்வேறு ஜாதிச் சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்குத் தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)

பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.

* பொறுப்பு தவறியதில், கலையின் பங்கு என்ன ?

இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண் மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.

* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?அருவருக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவது தான் மிக ஆபத்தானது.

* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?

ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங் கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் `இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம்' என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.

* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?

வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற `எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி` என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம், சமத்துவம் ஏற்படமுடியும்.

* கடைசியாக ?

கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள்.

ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சி யாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல..

வேதனைக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு

அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக் கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

Friday, November 21, 2008

கலைஞரின் அறிக்கையும் இன்ன பிற மேட்டர்களும்.

தமிழக முதல்வர் கலைஞர் நேற்று மாறன் சகோதரர்களை தாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் வழியே தன்னுடைய மனசாட்சியையும் கேள்வி குறியாக்கும் வகையில் அமந்துள்ளது. இந்த அறிக்கையை கலைஞ்ர் வெளியிட்டாரா? அல்லது அவர் பெயரை சொல்லி வேறு யாரும் வெயிட்டாற்களா?. இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.

கலைஞரின் அறிக்கையும் என்னுடைய சந்தேகங்களும்.

//மு.க. அழகிரிக்கு இரண்டு ‌விழு‌க்கா‌ட்டின‌ர் தான் தமிழகத்திலே ஆதரவு என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும், அதற்காக அழகிரி கோபமடையாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா? அதனால், அழகிரிக்கே தெரியாமல், அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையிலே ஈடுபட்டார்கள். அந்த வன்முறைச் செயலில் அழகிரிக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்றபோதிலும், அந்த வன்முறைச் சம்பவம் நடைபெறவும், அதனால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகவுமான நிலைமை ஏற்பட்டது//

பத்திரிக்கைகளில் கருத்துகணிப்பு என்பது பொதுவான விசயமாகும். கருத்துகணிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் செய்திகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை அற்றதாகவே இருக்கும். ஆனால் என்ன நடந்தது இதை ஒரு பெரிய விசயமாக கருதி உங்களுடைய கும்ப சண்டைக்காக 3 உயிகளை பலி வாங்கிய சம்பவத்திற்கு வக்காலத்து வாங்குவது போலுள்ளது இந்த அறிக்கை. தினகரன் சம்பவம் நட்க்கும் போதும் சரி, நடந்த பிறகும் சரி காவல்துறை வேடிக்கை பார்க்கும் துறையாகவே இருந்தது.இதற்கு சம்பவம் நடக்கு ம் போது இருந்த பத்திரிக்கையாளர்களே சாட்சி.மேலும் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டபொழுது எப் ஐ ஆர் பதிவு செய்ய எவ்வளவு யோசித்தார்கள் உங்கள் காவல்துறையினர்.


//இதனைத் தொடர்ந்து நாள் தவறாமல் அழகிரிக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சினைகளிலே எல்லாம் கூட அவர் மீது பழியைப் போட்டும்//

தா.கிருட்டினன் கொலைவழக்கில் ஒரே ஒரு சாட்சியை தவிர மற்ற் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சியாக மாறியதால்( மாற்றப்பட்டதால் ???) வெளியில் இருக்கிறார். அந்த சாட்சிகள் அனைத்தும் மாறாமல் இருந்திருந்தால்.................

 //அதேபோல் மத்தியிலே தயாநிதி மாறன் மந்திரியாக பொறுப்பேற்றிருந்த துறையின் அமைச்சராக தி.மு.க. சார்பில் மந்திரியாக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராகவும் - தமிழகத்திலே மின் துறை அமைச்சருக்கும், வேறு குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்த அளவிற்கு மோசமாக செய்தி வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.//

முன்னாள் அமைச்சர் என்.கே.பி.பி. ராசாவின் மீதான குற்றசாட்டையும், மின்வெட்டு பிரச்சினையையும் அவர்களுடை ய பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளியிட்டபோது நீங்கள் என்ன் சொன்னீர்கள் " காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்தியை திரித்து வெளியிடுகிறார்கள் " என்று சொன்னீகள். ஆனால் அதற்கு பிறகு நடந்தது என்ன வென்று உங்களூக்கே தெரியும் மின்வெட்டு பிரச்சினை இன்றளவும் முடியவில்லை. நவம்பர் மாதத்தில் மின்வெட்டு என்ற காரணத்தாலே உங்கள் பெயரும், ஆற்காட்டார் பெயரும் நிலைத்து நீடிக்கும்.ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை முதலில் வெளியிட்டது ஆங்கில பத்திரிக்கைகள்தான். அதன் பிறகுதான் அவர்களுடைய பத்திக்கைகளில் வெளி வந்தது. .அப்பவும் ஒரே
மாதிரியான அறிக்கையை வெளியிட்டீர்கள். அது பொய்யான செய்தி என்றால் செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகளின் மேல் வழக்கு போடவேண்டியதுதானே? ஏன் இன்னும் வழக்கு போடவில்லை.? ஒன்னு சொல்வாங்க குரைக்கிற நாய் கடிக்காது என்று?

அவர்களது தொழிக்கு போட்டியாகத்தான் அரசு கேபிளை கொண்டு வந்தீர்கள். இப்ப அரசு கேபிள் எந்த நிலைமையில் இருக்குது?. இதற்கும் சன்டீவிதான் காரணமென்று அறிக்கை வேறு வெளியிட்டீர்கள். எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்களா? இல்லை அவர்களா?. அரசு கேபிளுக்கு சன் டீவி மட்டுமா சேனல்களை கொடுக்கவில்லை, ஸ்டார் மற்றும் சோனி நிறுவனங்களும் கொடுக்கவில்லை? அதை ஏன் நீங்கள் சொல்லவில்லை?

ஒவ்வொரு பிரச்சினையிலிருந்தும் மக்களை திசை திருப்புவதற்கு தினசரி ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்களே ஏன்?

ஒரு வேளை நேற்று லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக்கணிப்பை திசை திருப்புவதற்கு கூட இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பீர்களோ?

இவ்வளவு நடந்தும் அவர்களும் கட்சியை விட்டு போகமாட்டுக்காங்க, நீங்களும் அவர்களை கட்சியை விட்டு நீக்கவுமாட்டுக்கீங்க.... ஏதாவது உள்குத்து வேலையா?என்ன மர்மமோ?

உங்கள் வயதுக்கும் அனுபவத்துக்கும் இந்த மாதிரியான அறிக்கையை வெளியிட்டு தங்களின் மனசாட்சியை சந்தேகங்கொள்ள செய்யாதீர்கள்.


அய்யா தங்கள் முன் எவ்வளவோ பணிகள் காத்து கிடக்கின்றன.



இப்படிக்கு


ஒன்னுமே தெரியாத அப்பாவி தமிழன்.

Thursday, November 20, 2008

தமிழக காவல்(கேலி)துறை + காங்கிரஸ் கேலிச்சித்திரம்

Sunday, November 16, 2008

அடைமழையிலும் சூடான சென்னை பதிவர் சந்திப்பு

போன பதிவர் சந்திப்பில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த சந்திப்பை தவறவிடக்கூடாது என்பதற்காக டுட்டியில் மாற்றம் செய்து, தங்க மணியிடம் அனுமதி வாங்கி சரியாக 5:50 மணியளவில் லைட் ஹவுஸ் வந்து. அங்கிருந்து காந்தி சிலைக்கு வந்து பார்த்தால் சந்திப்பு ஆரம்பம் ஆகிவிட்ட்டது. அதோடு மழையும் சேர்ந்துவிட்டது. முதல் சந்திப்பு என்பதால் ஒவ்வொருவரிடமும் அறிமுகபடுத்திக்கொண்டேன்.


கிட்டதட்ட 40க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டார்கள். பெயர்களை வரிசையிடுகிறேன். விடுபட்டால் மன்னிக்கவும்.


டோண்டு
ஜியாரோம் சுந்தர்
முரளிகண்ணன்
லக்கிலுக்( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
நர்சிம்(தமிழ் சினிமாஉலகம் ஒரு அழகான ஹீரோவை மிஸ் செய்கிறது.)
அதிஷா (( ஆள் ஒல்லியா இருந்தாலும் பேச்சில் கில்லி)
குப்பன் யாஹூ
பரிசல்காரன்( நேற்றைய கெஸ்ட்)
பாலபாரதி ( கமாண்டோ)
யோசிப்பவர்
அக்னிபார்வை
கார்க்கி( மூளைக்காரன்)
கென்
வளர்மதி
கும்கி
அகநாழிகை
குட்டிபிசாசு
சுரேஸ்கண்ணன்
கேபிள் சங்கர்

தாமிரா( தங்கமணி ரசிகர் மன்ற தலைவர்)
புதுகை அப்துல்லா
சுகுணா திவாகர்
வெண்பூ ( பெயருக்கு ஏற்ற மாதிரி வெண்மையாக இருந்தார்)
சிவஞானம்ஜி

போலீசார் கூட்டமாக நிற்க கூடாது எனக்கூறியதால் மரத்தடிக்கு நகர்ந்தோம். மழையும் கொஞ்சம் அதிகமாகியது. பின்னர் கடற்கரை மணலில் அனைவரும் உட்கார்ந்துகொண்டோம். போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து நீங்கள் மரத்தடியிலே வைத்து நடத்திக்கொள்ளலாம் என்றும், டிசிக்கு உங்களை பற்றி தெரியாது என்றும் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு விவாதம் ஆரம்பம் ஆகியது.

வளர்மதி சட்டக்கல்லூரி பிரச்சினை பற்றி பேச ஆரம்பித்தார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குக்கான காரணங்களை எடுத்துரைத்தார். நர்சிம் கேள்வியிலும்,அக்னி பார்வை கேள்வியிலும் அனல் பறந்தது.மழையும் அதிகமாகியது. இந்த சமயத்தில் ஒரு சிலர் எழுந்து தனியே சென்றனர். வளர்மதி சாதி பெயரை நேரடியாக சொன்னதால் பிடிக்கவில்லையோ என்னவோ?. இது மாதிரி விவாதங்களில் சாதிப்பெயர் சொல்லுவாதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

இதே மாதிரியான சாதிகலவரங்களை நான் டிப்ளமா படிக்கும்போதும், ஐடிஐ யில் வேலை பார்க்கும் போதும் நேரடியாக பார்த்தவான். அதுவும் 98ல் சாதிதலைவர்களின் பெயர்களை போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கவேண்டும் என்றும் சொல்லி கடையநல்லூரில் 20 பேருந்துகளை தீக்கிரையாக்கின சம்பவம் என் கண்ணில் இன்னும் நிற்கிறது.

சரி விசயத்துக்கு வருவோம்.வளர்மதி சொன்னதில் ஒரு விசயம் நமக்கு புதுசு. சித்திரை செல்வன் எனும் தலித் மாணவன் மதியம் 1 மணிக்கே தாக்கப்பட்டு ஜிஹெச்சில் அட்மிட் ஆகியிருப்பதாக சொன்னார். ஆனால் இதைப்பற்றி மீடியாவிலும் வரவில்லை. இவர் சொன்னது போல் அந்த மாணவனை ப்ற்றி எந்த செய்தியும் வெளியில் கசியவில்லை. எல்லாம் அரசின் வேலை.

விவாதம் மழைக்கு பிடிக்கவில்லையோ என்னாவோ இன்னும் அதிகமாகியதால் இத்துடன் முடிவுக்கு வந்தது. அனைவரும் சென்னை வானொலி நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் தேநீர் அருந்தினோம்.தாமிரா,கேபிள்சங்கர்,புதுகை அப்துல்லா ஆகியோர் வந்து கலந்து கொண்டார்கள்.

கேபிள்சங்கர்,லக்கிலுக்,முரளி கண்ணன் மூவரும் ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்கோ.என்னன்னு சொல்லுங்கப்பு. நேரம் அதிகமாகியதாலும் மழை விடைபெறாததாலும் நான் அனவரிடமும் விடை பெற்றேன்.டோண்டு சார் அலையை பார்ப்பதற்கு என்னை கூப்பிட்டிருந்தால் வந்திருப்பேன். கார்க்கி தமிழ்மணத்தில் ஏற்படும் சிரமங்களை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி பேசிக்கொண்டு வந்தார். நானும்,சுகுணா திவாகரும் ஒரே பேருந்தில் ஏறினோம். அவர் வேளச்சேரி. மின் வெட்டு பற்றீபேசும் பொழுது என் சீட்டிற்கு முன்னால் இருந்தவர் எங்கள் பேச்சினூடாக வந்தார்.அவர் மின் வாரியத்தில் துணை பொறியாளராக இருப்பதாக சொன்னார். இப்போதுள்ள மின்வெட்டுக்கு மின் வாரிய அதிகாரிகளே காரணம் என்றார்.

வீடு போய் சேர்வதற்கு 9:30 ஆகியது.



என்னை சொந்தமாக பதிவு எழுத ஊக்கப்படுத்திய முரளி

கண்ணன்,லக்கி,அதிஷா,தாமிராவுக்கு ஒரு ஓ போடுங்கோ.



அப்புறம் ஒரு முக்கியமான விசயம்


சகா நர்சிம் ஒரு பேச்சிலர். அனைவரும் மனதில் கொள்க




போதுமா சகா

Saturday, November 15, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

பாரக் ஹுசேன் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், இனி அமெரிக்காவும், உலகமும் அடியோடு மாறிவிடுமா ?


`மாற்றுவோம். நம்மால் முடியும்' என்ற கோஷத்தோடு ஒபாமா தேர்தலைச் சந்தித்து ஜெயித்ததால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. `அது ஒரு தேர்தல் கோஷம். அவ்வளவுதான்' என்ற யதார்த்த அறிவு இப்போதைக்கு பின்னே தள்ளப்பட்டு, உணர்ச்சி அலைமோதிக் கொண்டிருக்கிறது.

தலித் கே.ஆர்.நாராயணன் இந்திய ஜனாதிபதியானதால், தமிழ்நாட்டில் திண்ணியத்தில் தலித் வாயில் மலம் திணித்த கொடுமை நடக்காமல் போய்விடவில்லை. இஸ்லாமியர் அப்துல்கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோதுதான் குஜராத்தில், ஹிந்து பயங்கரவாதி மோடி தலைமையில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டது. ஒரே வித்தியாசம் - இந்திய ஜனாதிபதி பதவி பொம்மைப் பதவி. அமெரிக்க ஜனாதிபதி பதவி அதிகாரம் மிகுந்த பதவி.ஆப்ரிக்க நாடுகளிலிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகளின் உழைப்பில் வாஷிங்டனில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க ஒரு கறுப்பினத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 147 வருட நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் இது மிக முக்கியமான சாதனை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியானால் அமெரிக்காவில் நிறவெறி ஒழிந்துவிட்டதா? வெள்ளையர்கள் எல்லாரும் மனம் மாறிவிட்டார்களா? இந்தக் கேள்வி களுக்கு ஒற்றை வார்த்தையில் ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. நிற வெறி சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது. அது ஒரு குற்றம். ஆனால் இன்னும் குற்றவாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏராளமான வெள்ளையர்கள் நிறவெறிக்கு எதிராகக் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள்தான் ஒபாமாவை தங்கள் வேட்பாளராகவே ஆக்கியவர்கள். இன்னும் ஏராளமான வெள்ளையர்கள் மனம் மாறாதவர்களாகவே இருக்கிறார்கள்.இந்தத் தேர்தல் அந்த மன மாற்ற, சமூக மாற்றப் போராட்டத்தில் அடுத்த படி. ஒபாமாவின் வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன. முழு முதற் காரணம் - புஷ். எட்டாண்டுகள் புஷ் அரசின் பொருளாதாரக் கொள்கை, வெளி உறவுக் கொள்கை இரண்டும் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்து தீர்வு தேடித்தான் அமெரிக்கர்கள் ஒபாமா வைத்தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

அடுத்தபடியாக, ஒபாமாவின் வெற்றிக்கு அவர் கறுப்பர் என்பது உதவியது எவ்வளவு நிஜமோ அதே அளவு அவர் கலப்புப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதும் உதவியிருக்கிறது. தங்களில் ஒருவராக கறுப்பின அமெரிக்கர்கள் அவரோடு அடையாளப்படுத்திக் கொண்ட அதே வேளையில், ஒபாமாவின் தாய் வெள்ளையர் என்பதும், ஒபாமா தாய் வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டவர் என்பதும், வெள்ளையர்கள் மத்தியில் அவரை சற்றே லகுவாக ஏற்கச் செய்ய சாதகமான அம்சங்களாக விளங்கியிருக்கின்றன. ஒபாமாவும் எப்போதும் தன்னை முற்றிலும் கறுப்பினத்தவராக அடையாளப்படுத்திக் கொள்வதைத் தவிர்த்திருக்கிறார்.
அவருடைய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் ஒபாமா தன்னை சாதாரண மனிதர்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டதை விட, அதிகமாக மேட்டுக்குடியினருடனே ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். பணக்காரர்கள் ஆதரவுக் கட்சி என்று பெயரெடுத்திருக்கும் குடியரசுக் கட்சி திரட்டியதை விட, பல மடங்கு அதிக தேர்தல் நிதியை குவித்த முதல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாதான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒபாமாவின் தேர்தல் அணுகு முறையில் அவருக்கு வெற்றியைக் குவிக்க உதவிய மிக முக்கியமான அம்சம் இைளய தலைமுறையிடம் நம்பிக்கையை ஏற்படுத்திய பிரசார விஷயங்கள்தான். அமெரிக்காவில் 1972-ல்தான் வாக்காளர் தகுதி வயது 18 ஆக்கப்பட்டது. அதன் பின்னர் இப்போதுதான் முதல் முறையாக மிக அதிக அளவில் இளைஞர்கள் வாக்களித்திருக்கிறார்கள். எதிர் வேட்பாளரை விட மிக அதிக வித்தியாசத்தில் இளைஞர்கள் ஓட்டுகளை ஒபாமா அடைந்திருக்கிறார். சுமார் 66 சதவிகிதம் ! இந்த அளவு இளைஞர்கள் 2004லும் 2000-த்திலும் அல்கோருக்கோ, ஜான் கெரிக்கோ வாக்களித்திருந்தால், புஷ் ஜனாதிபதியாகியிருக்கவே முடியாது !

பல வெள்ளையர்கள் வீடுகளில் பழைய தலைமுறை இன்னும் நிறவெறி மனப்பான்மையிலிருந்து வெளிவரவில்லை. இன்றைய தலைமுறை வந்துவிட்டது. `நான் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன்' என்று மகள் சொன்னதும், `அந்த.............னுக்கா?' என்று தாத்தா எரிச்சலடைந்ததும் இருவரும் வாதிட்டதும் நடந்திருக்கின்றன. இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு வாதமே கூட வீட்டில் நடந்திருக்க முடியாது என்கிறார் மகள்.
இன்னொரு பக்கம் பல மூத்த வெள்ளையர்கள் வெளியே `நான் மெக்கெய்னுக்குத்தான் வாக்களிப்பேன்' என்று சொல்லிவிட்டு ரகசியமாக ஒபாமாவுக்கு வாக்களித்ததும் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

ஒபாமாவுக்கு வெற்றியைக் குவித்த முக்கியக் காரணம் அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சி அடிமட்டம் வரை அன்றாட வாழ்க்கையை பாதித்திருப்பதாகும். ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி குடும்ப பென்ஷன்களைக் கடுமையாக பாதித்திருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடிவு ஒபாமாவால் தரமுடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படக் காரணம், தான் ஆட்சிக்கு வந்தால், ஒளிவு மறைவற்ற ஆட்சி நடத்துவேன்; ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் முன்பு வைத்து விவாதித்துதான் முடிவு எடுப்பேன் என்று அவர் திரும்பத் திரும்பச் சொன்னதாகும். இதை எந்த அளவு செய்வார் என்பது போகப் போகத்தான் தெரியும்.

ஒபாமாவின் தேர்தல் உத்திகள், அணுகுமுறைகளிலிருந்து இங்கே நாம் கற்க நிறைய இருக்கிறது. முதல் விஷயம் புதிய வாக்காளர்கள், இைளஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களைத் திரட்ட முயற்சித்ததாகும். இரண்டாவது புதிய தகவல் தொழில்நுட்பத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்திய முறை. மின்னஞ்சல் வழியே மட்டும் ஒரு கோடிப் பேரை ஒபாமாவின் பிரசாரகர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கிறார்கள். (இந்த முயற்சியின் வெற்றி குடியரசுக் கட்சியை இப்போதே 2012 தேர்தலை மனதில் கொன்டு தாங்களும் ஈ மெயில் நெட் ஒர்க்கை கட்ட வேண்டுமென்று உந்தியதில், அவர்களும் ஆரம்பித்திருக்கிறார்கள்.)ஒபாமா மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட ஒரு கோடிப் பேரிடமும் பல்வேறு சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளில் அவர்களுடைய நிலை என்ன என்று கருத்துத் திரட்டியிருக்கிறார். அவர்களிடம் தேர்தல் நிதியும் கணிசமாக வசூலாகியிருக்கிறது.

`தேர்தல் முடிந்தபிறகு உங்களுடன் தொடர்பு முடிந்து விடாது. ஆட்சி நடத்தும்போதும் தொடர்ந்து கருத்துப் பரிமாறுவோம்' என்று ஒபாமா மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். அவருடைய இணையதளத்தில் இதற்கான வலைப்பூ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஏற்பாடுகள் ஒபாமாவின் அரசியலுக்குத் தொடர்ந்து பயன் தரக்கூடியவை. அமெரிக்க ஆட்சி முறையில் ஜனாதிபதி கொண்டு வரும் சட்டங்களைக் கூட நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் நிராக ரித்துவிடமுடியும். அவற்றின் உறுப்பினர்களை ஆதரவு தரும்படி நிர்ப்பந்திக்கும்படி நேரடியாக வாக்காளர்களிடம் ஒபாமா மின்னஞ்சல் நெட் ஒர்க் மூலம் அழுத்தம் தரமுடியும்.இதன் மறுபக்கம் - வாக்காளர்களுக்கும் உதவிகரமானது. ஒபாமா ஆட்சியின் நடவடிக்கைக்கு எதிராகத் தங்கள் கருத்தையும் வாக்காளர்கள் மின்னஞ்சல்கள் வாயிலாகத் தெரிவித்து எதிர் அழுத்தமும் கொடுக்க முடியும்.

ஒபாமாவின் தேர்தல் உத்தியில் இங்கே கற்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், ஓட்டுப்பதிவில் தில்லுமுல்லுகள் நடக்காமல் வெற்றிகரமாக தடுத்ததாகும். அல்கோருக்கு எதிராக புஷ் ஜெயித்த தேர்தல் தில்லுமுல்லுத் தேர்தல் என்பது பகிரங்க உண்மை. இந்த முறை புஷ் உத்திகள் எதையும் குடியரசுக் கட்சி செய்துவிடமுடியாமல் திறமையாக ஒபாமாவின் அணி கண்காணித்துக் கொண்டது. குறிப்பாக, மாணவர்களை ஓட்டுப் போட விடாமல் தடுக்க பல உத்திகளை குடியரசுக் கட்சியினர் கையாண்டார்கள். அவற்றையெல்லாம் ஒபாமா அணி முறியடித்தது.
எல்லா விஷயங்களைப் பற்றியும் நேர்மையாகக் கருத்துச் சொல்லக் கூடியவர் என்ற பிம்பத்தைக் கட்டமைத்தது முதல், பண பலம், ஆள் பலம், செயல் திறன் பலம் என்று பெரிய வியூகம் அமைத்து ஒபாமா வென்றிருக்கிறார்.இனிமேல்தான் அவர் மீதான ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கும் சோதனைகள் ஆரம்பம். புஷ் செய்துவைத்திருக்கும் பொருளாதார குழப்பத்தை 4 வருடத்துக்குள் தீர்க்க முடியாது என்று இப்போதே ஒபாமா சொல்லிவிட்டார்.

ஒபாமாவிடம் இந்தியா என்ன எதிர்பார்க்கலாம் ?

அமெரிக்காவுக்கு எது நல்லதோ அதையேதான் புஷ் முதல் ஒபாமா வரை எல்லாரும் செய்வார்கள் என்பதை மறக்கவேண்டாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு வேலை தேடிப் போவோரின் எண்ணிக்கையை ஒபாமா அதிகரிக்கவும் மாட்டார்; இப்போது வழங்கும் விசா எண்ணிக்கையை குறைக்கவும் மாட்டார். அணு ஒப்பந்தத்தைப் பொறுத்த மட்டில், என்னைப் போன்ற அணு எதிர்ப்பாளர்களுக்கு ஒபாமா சாதகமாக இருப்பார். முற்றாகக் கைவிடப்படாவிட்டாலும் புஷ் ஆட்சியில் போன வேகத்தில் அது இனி நகராது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஒபாமா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிரானவையாக இராது என்று எதிர்பார்க்கலாம். காஷ்மீர் பிரச்னையில் இந்திய அரசுக்கு (மக்களுக்கு அல்ல) ஒபாமா கொஞ்சம் தலைவலி தரலாம்.உலகத்தைப் பொறுத்தமட்டில் ஒபாமா இராக் ஆக்ரமிப்பை நிறுத்திக் கொண்டு படைகளைத் திரும்பப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மெய்யாகும் வாய்ப்பு வரவேற்கக்கூடிய விஷயம். இரானில் யுத்தத்தை ஆரம்பிக்க மாட்டார் என்பது இன்னொரு ஆறுதல். மற்றபடி இஸ்ரேல் ஆதரவு பாலஸ்தீன எதிர்ப்பு என்பதில் அவர் புஷ்ஷிலிருந்து வேறுபட்டவர் அல்ல. ஒபாமாவின் வெற்றியில் மிக முக்கியமான அம்சம் நிறவெறிக்கு எதிரான மனித சமத்துவப் போராட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல அவருடைய வெற்றி உதவுகிறது என்பதுதான்.

இதிலிருந்து இங்கே நம் சூழலுக்குப் பொருத்தமாக நாம் செய்ய வேண்டியது என்ன ?

குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ; டெல்லியில் ஒரு முஸ்லிம் பிரதமர். (நிச்சயம் ராசா, கலாம் போன்ற பொம்மைப் பிரதிநிதிகள் அல்ல.) அதை நோக்கி நம் அரசியலை நம் மன நிலையை வளர்ப்பதுதான் நாம் செய்ய வேண்டியது..

இந்த வார ஆச்சரியம்

டெல்லி மாநில முதலமைச்சராக பத்தாண்டுகளாக இருந்து வரும் காங்கிரஸ் பிரமுகர் ஷீலா தீட்சித் இப்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது கொடுத்த சொத்துக் கணக்கின்படி, அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஒரு கோடி 25 லட்சம்தானாம் ! அவருக்குச் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை !

இந்த வாரக் கேள்வி

முதல் முயற்சியிலேயே நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப ஆற்றலும் உடைய இந்தியாவில் ஏன் இன்னமும் மலக் கழிவுகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கான தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட வில்லை? இந்த வாரம் கூட சென்னை தாம்பரத்தில் இரு தொழிலாளர்கள் கழிவுத் தொட்டியை சுத்தப்படுத்து கையில் விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். அணுக்கதிர்க் கழிவுகளையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறோம் என்று சொல்லும் விஞ்ஞானிகள் உள்ள தேசத்தில் மலக்கழிவுகளால் மனிதர்கள் சாவது ஒரு தேசிய அவமானம் இல்லையா?

நன்றி குமுதம்

Friday, November 14, 2008

தமிழக காவல்துறை--- தமிழக கட்சிகளின் போலி..?--கார்ட்டூன்

Thursday, November 13, 2008

மானங்கெட்ட அரசியல்--கேலிச்சித்திரம்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா.......ஹி ஹி ஹி

நன்றி குமுதம்.காம்

Monday, November 10, 2008

தமிழக அரசின் அலட்சியம் -ரெயில்வே திட்டங்கள் அம்போ???????

ரெயில்வே அணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட தமிழ்நாட்டின் ஐந்து புதிய ரெயில்வே திட்டங்கள் தமிழக அரசின் அலட்சியத்தால் கேள்விகுறியாயிருக்கின்றன.காரணம் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என தமிழக அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது.

திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம், தேனி வழியாக லோயர் கேம்ப் வரை
திருவண்ணாமலையிலிருந்து செங்கம் வழியாக ஜோலார்ப்பேட்டை வரை
நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை
மொரப்பூரிலிருந்து தருமபுரி வரை
அரியலூரிலிருந்து திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரை.

மேற்சொன்ன புதிய வழித்தடங்களுக்குத்தான் ரெயில்வே ஆணையம் ஒப்புதல் அளித்து மொத்தச் செலவான 1500 கோடி ரூபாயில் பாதியை அதாவது 750கோடியை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் உடனடியாக வேலை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு ரெயில்வே ஆணையம் பல முறை கடிதங்கள் அனுப்பபட்டபோதிலும் பதில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி த்மிழக அரசின் தலைமைச்செயலரிடம் இருந்து ரெயில்வே ஆணையத்திற்கு அனுப்பிய கடித்ததில் "ஏற்கனவே சென்னை பறக்கும் ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி அளித்துள்ளது. இனியும் ரெயில்வே திட்டங்களுக்கு நிதி அளித்தால் மாநில அரசின் நிதி நிலைமை மோசமாகிவிடும் என்றும், இந்த ஐந்து திட்டங்களும் போதிய வருமானத்தை ஈட்டக்கூடியவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேயில் அதிக வருமானம் கிடைப்பதால் அந்த நிதியை வைத்து இந்த திட்டங்களை நிறைவேற்றலாம் என்ச் யோசனை வேறு கூறப்பட்டுள்ளது.

மற்ற மாநில அரசுகள் ரெயில்வே ஆணையம் சொன்ன பலத்திட்டங்களை அதன் பாதி நிதியை கொடுத்து பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் ரெயில்வே திட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு வந்தால் போதும் என்று போட்டி போடுகின்றன.

ஆனால் தமிழக அரசு தங்கள் மாநிலத்திற்கு வரும் ரெயில்வே திட்டங்களுகு நிதி ஒதுக்குவதற்கே தயக்கம் காட்டுகிறது.


தமிழ்நாட்டு அரசுக்கு இதைவிட பல முக்கிய வேலைகள் இருப்பதால்??????இதை தவிர்த்து விட்டதோ என்னவோ. முக்கிய வேலைகள் என்னவென்று உங்களுக்கு தெரியாதா என்ன?


இந்த திட்டங்களை பற்றி சம்பந்தப்பட்ட தொகுதி எம்பி,எம் எல் ஏ க்கு தெரியுமா??????


நன்றி தினமலர்

Sunday, November 9, 2008

உத்தப்புரம்-- திக்கி திணறும் தென் மாவட்டங்கள்

உத்தபுரத்தை மையமாக வைத்து அதன் சுற்றுப்புறங்கள் இன்று `யுத்தபுரமாகி' வருகின்றன. அப்பாவி மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஆத்திரக் கனல் அணைந்து விடக்கூடாது என்பதில் சிலர் காண்பித்த கரிசனம் இன்றைக்கு துப்பாக்கிச் சூட்டில் போய் முடிந்திருக்கிறது. சாதிப்பாம்பின் விஷப்பல் தெற்கே மீண்டும் பதிய ஆரம்பித்திருப்பதால் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பதற்றம் சிக்கென பரவி வருகிறது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தபுரத்தில், `தீண்டாமைச் சுவரின் ஒருபகுதியை மாவட்ட நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் உடைத்தெறிந்து பாதையை ஏற்படுத்தித் தந்தது. அதன்பின் மாவட்ட நிர்வாகம் அந்தப் பகுதியை மறந்துபோனதால் தலித்துகளுக்கும், பிள்ளைமார்களுக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. கடந்த மாதத் தொடக்கத்தில், கோயில் சுவர் ஒன்றில் வெள்ளையடிப்பது தொடர்பாக இருதரப்பினரும் மீண்டும் கோதாவில் இறங்கி வெடிகுண்டு வீசி தாக்கிக் கொண்டனர். அது தொடர்பாக ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவானது. இப்போது உத்தரபுரத் தீ ஓரிரண்டு கிலோமீட்டர் முன்னேறி இ.கோட்டைப்பட்டியில் கலவரமாக மையம் கொண்டு, தலித் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞரை துப்பாக்கிச் சூடு மூலம் காவு வாங்கியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``இம்மாதம் 2-ம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உத்தபுரத்தில் தலித் மக்களைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள எழுமலை என்ற ஊரின் வழியாகச் சென்றபோது அவர் கார் மீது கல்வீசப்பட்டது. 4_ம் தேதி காலை பத்தரை மணியளவில் எழுமலை தெற்குத் தெருவைச் சேர்ந்த சிலர் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் வெடிகுண்டு வீசினர். இதில் இரண்டு பேருக்குக் காயம். அதன்பின் கல், பாட்டில் வீச்சு நடக்க, போலீஸார் ரப்பர் குண்டுகளைச் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

அதன்பின் டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் எழுமலைக்குச் சென்றனர். உத்தபுரத்துக்கு இரண்டு கி.மீ.க்கு முன்னதாக உள்ள இ.கோட்டைப்பட்டி அருகே இவர்களது வாகனங்கள் வந்தபோது ரோட்டின் குறுக்கே கற்களும், முள்ளுச்செடிகளும் போடப்பட்டிருந்தன. போலீஸார் அவற்றை அகற்றப்போனபோது பெண்களை முன்னிறுத்தி அவர்களின் பின்னால் நின்று அந்தக் கிராம ஆண்கள் கல்வீச்சு நடத்தினார்கள். அந்தக் கல்வீச்சில் இருந்து டி.ஐ.ஜி.யும் தப்பவில்லை. பல போலீஸார் காயமடைந்தனர்.

போலீஸார் வானத்தை நோக்கிக் சுட்டும், மூன்று முறை கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகித்தும் கல்வீச்சு நிற்கவில்லை. அதன்பின்பு போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ள ஐந்து ரவுண்ட் சுட்டதில்தான் சுரேஷ் என்ற 25 வயது இளைஞர் இறந்து போனார். துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் போலீஸ் தரப்பில் பலர் இறந்திருப்பார்கள்'' என திகிலுடன் சொன்னது போலீஸ் தரப்பு.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் உடனடியாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இ.கோட்டைப்பட்டி கிராமத்தைப் பார்வையிட்டிருக்கிறார்.

நாம் துப்பாக்கிச்சூட்டுக்கு மறுநாள் இ.கோட்டைப்பட்டிக்குச் சென்றோம். புயலுக்குப் பின் அமைதி என்பது போல சத்தமின்றி இருந்தது அந்த ஊர். கடைகளில் பூட்டுகள் நம்மை வரவேற்றன. பஸ் போக்குவரத்து இல்லை என்பதுடன் கிராமத்தில் ஆண்வாடையும் இல்லை. காக்கிச் சட்டைகள் மட்டுமே ரோந்தில் இருந்தனர். அந்த ஊர்ப் பெண் ஒருவரிடம் பேசினோம்.

"செவ்வாய்க்கிழமை (4-ம்தேதி), சாதி இந்துக்கள் இரண்டு லாரிகளில் வெடிகுண்டு, அரிவாள்களோடு எங்களைத் தாக்க வருவதாக ஒரு மர்ம போன் வந்தது. உடனே பள்ளப்பட்டி, இ.பெருமாள்பட்டி, வடக்கத்தியார்பட்டி பகுதிகளைச் சேர்ந்த தலித் மக்கள் எங்கள் கிராமத்தில் கூடிவிட்டார்கள். சாதி இந்துக்களின் தாக்குதலைச் சமாளிக்க என்ன செய்யலாம் என யோசித்து, பாதையின் குறுக்கே மரத்தை வெட்டிப் போட முடிவு செய்து அப்படியே செய்தார்கள்.பதினொன்றரை மணியளவில் போலீஸார் வந்து சாலைத்தடையை அகற்றச் சொன்னார்கள். `முதலில் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள். பிறகு தடையை அகற்றுகிறோம்' என நாங்கள் சொன்னோம். பெண்களை முன்னால் நிறுத்தி ஆண்கள் பின்னால் நின்றால் போலீஸார் தடியடி நடத்த மாட்டார்கள் என ஊர் ஆண்கள் நினைத்தார்கள். ஆனால் அந்தக் கணக்குப் பொய்யாகி விட்டது. போலீஸார் தடியடி நடத்தியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கல் வீசினார்கள். எந்த எச்சரிக்கையும் செய்யாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுரேஷ் இறந்து போனார். பத்து தலித் பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது'' என்றார் அந்தப் பெண்.

அதே கிராமத்தைச் சேர்ந்த தலைமறைவாக இருக்கும் இளைஞர் ஒருவரிடம் பேசினோம்.

"நாங்கள் வன்முறையில் ஈடுபட வேண்டும் என நினைத்திருந்தால் கிருஷ்ணசாமி மீது கல்வீசப்பட்ட அன்றே வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியும்.. ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லையே? போலீஸார் எங்கள் கிராமத்துப் பெண்களை அருவருப்பாகப் பேசி தடியடி நடத்தியதுதான் எங்களைக் கல்லெறியத் தூண்டியது. அப்போது வெறும் பதினைந்து போலீஸார்தான் இருந்தனர். நாங்களோ முந்நூறு பேர் இருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால் நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும். ஆனால் நாங்கள் பொறுமை காத்தோம். அதனால் இன்று ஒருவரை இழந்து நிற்கிறோம்'' என்றார் அவர் சோகமாக.
``திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் சுரேஷ் விடுமுறைக்காக ஊருக்கு வந்த இடத்தில் இப்படி போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி விட்டானே?'' என்று கதறியழுதார்கள் சுரேஷின் தாய் முருகதேவியும் தந்தை கருப்பையாவும்.

அருகிலுள்ள உத்தபுரம் சென்று அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேசினோம்..

"2-ம்தேதி உத்தபுரத்துக்கு வந்த டாக்டர் கிருஷ்ணசாமி தலித் பகுதிகளுக்குச் சென்றார். `வன்முறை வேண்டாம். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது' எனத் தெளிவாகப் பேசினார். பிறகு அங்கிருந்து செல்லாயிபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு அவர் புறப்பட்டார். அவருடன் வந்த சிலர் எழுமலைக்குள் நுழைந்தவுடன் வேன்மேல் இருந்தபடி குறிப்பிட்ட ஒரு சாதியாரைப் பார்த்து கோஷம் போட்டிருக்கிறார்கள். அங்கிருந்து செருப்புகள் வர, பதிலுக்கு இவர்கள் கல் வீசியிருக்கிறார்கள். ஊரின் மேற்குப் பகுதியில் தேவர் சிலை இருந்த இடத்துக்கு வந்தபோது தேவர் குறித்தும் வேனில் இருந்தவர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அந்த நேரம் கிருஷ்ணசாமியின் காரும் அங்குவந்து சேர, அவர் கார் மீது கல்வீச்சு நடந்திருக்கிறது. எழுமலை சம்பவம் கிருஷ்ணசாமிக்குத் தெரியாமல் நடந்த ஒன்று. இப்போது எழுமலையில் தேவர், பிள்ளைமார், மணியக்காரர் என எல்லா சாதியினரும் தலித்துகளுக்கு எதிராகிவிட்டனர்.

தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த கோட்டைப்பட்டி மிகவும் சென்சிட்டிவான ஊர். இது தலித்துகள் மெஜாரிட்டியாக வாழும் பகுதி. ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் மீது கல்வீச்சு நடத்திய கிராமம் இது. உத்தபுரம் உள்ளிட்ட இந்தப் பகுதி கிராமங்களுக்கு வருவதை அரசியல் கட்சிகள் தவிர்த்தால் கொஞ்ச நாட்களில் இங்கே அமைதி திரும்ப வாய்ப்பிருக்கிறது. கிருஷ்ணசாமி ஆதரவாளர்கள் நிறைந்த உத்தபுரம், மெல்லமெல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறிவருவதைத் தாங்க முடியாமல், அவரது கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணசாமியை இங்கே கூட்டி வந்தார்கள். அதனால் வந்த வினை இது. இங்கே அரசியல் ஆதாயம் தேடி யார் வருவதையும் அனுமதிக்கக் கூடாது.உத்தபுரம் பிரச்னைக்குப் பிறகு இங்கே தலித் மற்றும் பிள்ளைமார் சமூக ஆண்கள் ஊரிலேயே இருக்க முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாத நிலை உருவாகிவிட்டது. குழந்தைகள் பள்ளி செல்ல முடியவில்லை. அடிக்கடி பஸ் போக்குவரத்தும் தடைபடுகிறது. இதனால் இந்தப் பகுதியே வெளிஉலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கே அமைதி திரும்புவதற்கான உடனடி நடவடிக்கைதான் தேவை'' என்றார் அவர்.

கிருஷ்ணசாமியின் கார் தாக்கப்பட்ட நாளிலிருந்தே தென் மாவட்டங்களில் பஸ்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகியிருக்கிறது. துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நிலைமை இன்னும் மோசம். மதுரை பஸ் நிலையத்திலேயே ஒரு பஸ்ஸின் உட்புறம் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. தென்மாவட்டங்களில் இதுவரை நாற்பது பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு பஸ்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. மதுரை, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் சில பகுதிகளில் நான்கு நாட்களாக பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்குள்ளும் கலவரம் மெதுவாக கால்பதித்து வருகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிருடன் பேசினோம்.

"`கலவரத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இந்த ஆண்டில் இதுவரை தமிழக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விழுப்புரம் அருகே எரையூர் என்ற இடத்தில் இருவரும், இப்போது இ.கோட்டைப்பட்டியில் சுரேஷும் இறந்திருக்கிறார்கள். இரட்டனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் காயமடைந்திருக்கிறார். சுரேஷ் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் தர வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமே சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரடியாக வந்து விசாரித்து அவற்றின் அடிப்படையில் அரசுக்கு முறையான பரிந்துரை வழங்க வேண்டும்'' என்றார் கதிர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சுரேஷின் உடல் புதன்கிழமை (5-ம் தேதி) மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார். அன்று மாலை அவரது உடல் கோட்டைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. `சுரேஷின் உடலை சுடுகாட்டில் எரிக்கக் கூடாது. பட்டா நிலத்தில் புதைக்க வேண்டும்' என ஊர்மக்கள் கோரிக்கை விடுக்க, போலீஸார் மறுக்க, கிராம மக்கள் பிணத்தை சுடுகாட்டில் போட்டுவிட்டுத் திரும்ப, போலீஸார் திகைத்துப் போனார்கள். அதன்பின் சமரசம் ஏற்பட்டு புதன்கிழமை இரவு எட்டு மணியளவில் சுரேஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர், விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இறந்தவர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கியுள்ளது அரசு.

உத்தபுரத்தை மையமாக வைத்துத் தொடங்கியுள்ள இந்தக் கலவரத்திற்குப் பின் உத்தபுரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது. கோட்டைப்பட்டியில் வலுக்கட்டாயமாக அமைதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. எழுமலை, சீழ்நாயக்கன்பட்டி, செல்லாயிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, டி.பாறைப்பட்டி போன்ற கிராமங்களில் பதற்றம் நீடிக்கிறது. ``இங்கே கிராமத் தலைவர்களை ஒன்றாக உட்காரவைத்துப் பேச்சு நடத்தினால்தான் இந்தப் பகுதியில் மீண்டும் அமைதி தலைகாட்டும். அதை விட்டுவிட்டு போலீஸ் பாதுகாப்பு, துப்பாக்கிச் சூடு என்று போவதில் துளியும் பலனில்லை'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு யோசிக்கலாமே?

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, November 8, 2008

நானும் எழுதிட்டேன்ல புத்தக தொடர் பதிவு

மறுபடியும் என்னை மாட்டிவிட்டுட்டாங்க. ஏற்கனவே சினிமா தொடர் பதிவு எழுதி ,அதை நம்ம மக்களெல்லாம் சந்தோசமா படிச்சிருப்பீங்கன்னு நம்பி ???? எழுதுறேன். பாபு நேத்து ரொம்ப மிரட்டினதால விசயத்துக்குள்ள போகலாம்.


புத்தகம் -- ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போதுதான் சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகியது.என் ஊர் சிறிய கிராமம் என்பதால் காலை 8 மணிக்கு மேல்தான் செய்தித்தாள் கிடைக்கும். அதுவும் இரு இடங்களில் 1. டீக்கடை 2. பஞ்சாயத்து ஆபிஸ்.

டீக்கடையில் தினத்தந்தி, பஞ்சாயத்தில் தினமலர். அதுவும் வெள்ளிக்கிழமைனா 9 மணி வரைக்கும் காத்திருந்து சிறுவர்மலரை பார்த்த பிறகு தான் அடுத்த வேலை. அதில் வரும் உயிரைத்தேடி எனும் தொடர்தான் ஹாட் டாபிக். அதே போல் ஞாயிறு என்றால் வாரமலர். ஒரு பக்கம் விடாமல் படிச்சதுக்கப்புறம் தான் சோறு தண்ணி எல்லாம்.இதே லீவு நாளில் அம்மாவிடம் அடி வாங்கியதும் ( பீடி மடக்க சொல்லுவார்கள்) அப்படியே எஸ்கேப் ஆகி வாரமலர் முழுவதும் படித்துவிட்டு வீட்டுக்கு போனா அடி வாங்கிட்டுதான் வேலை நடக்கும்.

அடுத்த ஸ்டேஜில் அறிமுகமாகியது காமிக்ஸ்புத்தகங்கள். இந்த மாதிரி புக் வாங்கனும்னா அம்பை இல்லைனா தென்காசி போய் தான் வாங்கனும். ஒரு புக் வாங்கி 3 மாதமானாலும் படிப்பேன். அப்போது மாயாவி தான் நம்மளோட சூப்பர் ஸ்டார். கிருஷ்னகிரியிலுள்ள என் மதினி வீட்டிற்கு மே மாத விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது புத்தகங்களுக்கென்றே தனி அறை வைத்திருந்தார்கள். கடல் புறாவில் இருந்து க்ரைம் நாவல் வரைக்கும் அனைத்தும் இருந்தது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் அந்த அறையிலதான் எப்பவுமே. கடல் புறா அப்போதைக்கு படிக்கும் போது புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆழ்வார்குறிச்சியில் படிக்கும் பொழுது அங்குள்ள நூலகத்திற்கு சென்று அனைத்து செய்திதாள்களையும் படித்துவிடுவேன் . கையேடுகள் எனப்ப்டும் வாசகர் வட்ட புத்தகங்களை முழுவதும் படிப்பது ( லோக்கல் நியூஸ் அதிகமா இருக்கும்+ கவிதைகள்)

டிப்ளமா தாழையூத்தில் படிக்கும் போதுதான் விகடன், குமுதம், பாக்யா, ஜெமினி சினிமா,ராஜேஸ்குமார்,சுபான்னு புத்தகங்களை தேடி அலையும் பழக்கம் ஆரம்பமாகியது. அதிலும் ஜெமினி சினிமா புக் படிக்கலைனா அந்தவாரம் சோகமாத்தான் இருக்கும். சினிமா நியூஸ் படிக்கலைனா தல வெடிச்சிரும். பாக்யாவில் வரும் தகவல்கள் பூமி அழிந்துவிடும்,நட்சத்திரம் தாக்கப்போகுது போன்ற பரபரப்பான நியூஸ்க்காகவே அதை படிப்பேன்.டிப்ளமா முடித்துவிட்டு கடையநல்லூரில் வேலை பார்க்கும் பொழுது விகடன் தான் என்னோட விருப்பம். இன்டெர்நெட்னா என்ன என்பது விகடன் மூலம் தான் அறிந்து கொண்டேன் ( 1996ல் இதைப்பற்றி தொடர் வந்தது.)சுஜாதாவின் கதைகள், மதன் கார்ட்டுன், வசகர் கவிதைகள்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கலாம். அந்த மாதிரி புக்கும் தான் ( ஓசியில தான் படிப்பேன்)

சென்னையிலும் விகடன் தான் என்னுடைய தோழனாய் இருந்தான். வைரமுத்துவின் கருவாச்சி காவியம், ராமகிருஷ்ணனின் தொடர், மதன் கேள்வி பதில்களெ என போய்கிட்டேயிருந்தது.பெரிய எழுத்தாளர்களின் புத்தகமெல்லாம் வாங்கி படிக்கும் பழக்கம் கிடையாது.

இப்பவெல்லாம் எந்த புத்தகமும் அவ்வளவாக வாங்குறதும் கிடையாது, படிக்கிறதும் கிடையாது.நெட்ல எல்லாத்தையும் ஓசியிலே படிப்பதுதான்

இப்ப உள்ள நிலைமைக்கு வீட்டில் ஒரு நியூஸ் பேப்பர் கூட படிக்க முடியாது. அப்படியே படிச்சாலும் பேப்பர் மேல் இரண்டு கால்கள் நிற்கும் "அப்ப்ப்ப்பா தண்ணீ ......... ஒரு சத்தம் கேட்கும். எடுத்துக்கொடுப்பேன். " டீவீஈஈஈ .... ஆன் பண்ணுவேன். பாட்டூஊஊஊஊஉ>>.> சன் மியூசிக்கோ, இசை அருவியோ ஓடும். திடீர்ன்னு ரென்டு அடி முதுகிலோ முகத்திலோ விழும். அமைதியாக எழுந்து நானும் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன் ( டான்ஸ்தான்).பையனின் அன்புத்தொல்லை.???!!!!!!

நான் அழைப்பது.



1. நர்சிம்
2.முரளி கண்ணன்
3.தமிழ் பிரியன்
4.தூயா
5.கடையம் ஆனந்த்


பெரிய ஆளுங்களை கூப்பிட்டதனால நானும் பெரிய ஆளாயிட்டேன்

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

தி.மு.க, அ.தி.மு.க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றார் காமராஜர். இதேபோல அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக்கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று கருதுபவர்கள் அங்கேயும் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட மூன்றாம் அணியினர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்ற செய்தியைக் கூட இங்கே தமிழ்ப் பத்திரிகைகள் கண்டுகொள்வதில்லை. இந்த இதழ் அச்சாகி வெளிவருவதற்குள் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பாரக் ஒபாமா அமையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். எதிர்பாராத திருப்பமாக அவர் தோற்றும் இருக்கலாம். ஆனால் இன்னொரு கறுப்பின அமெரிக்கர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டது பற்றிய விவரங்கள் தமிழ் வாசகர்களுக்கு சென்று சேர்க்கப்படவில்லை.

அவர்தான் 53 வயதாகும் சிந்தியா மெக்கின்னே. அமெரிக்க மக்களவையில் ஜார்ஜியா பகுதியின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக சுமார் 15 வருடங்களாக இருந்து வரும் சிந்தியா இந்த ஜனாதிபதி தேர்தலில் பசுமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.சிந்தியா தொடர்ந்து பல பரபரப்பான அரசியல் சர்ச்சைகளை எழுப்பி வருபவர். செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் பற்றி புஷ் அரசுக்கு முன்பே தெரியும் என்று அவர் குற்றம் சாட்டினார். ஒசாமா பின்லேடன் விமானிப் பயிற்சிக்காக ஆட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருப்பது உளவுத்துறைக்குத் தெரிந்திருந்தது என்றார். பின் லேடனின் கம்பெனியில் புஷ்ஷின் அப்பா முதலீடு செய்திருப்பதாக சிந்தியா தெரிவித்தார்.

அமெரிக்காவைத் தாக்கிய கத்ரீனா சூறாவளி சேதங்களின்போது அரசின் மெத்தனம், காவல் துறையின் அராஜகங்கள் முதலியவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பினார். கத்ரீனா சூறாவளியைப் பயன்படுத்திக் கொண்டு, ராணுவம், 5000 கைதிகளை சுட்டுக் கொன்று ஆற்றில் போட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இராக்கில் யுத்தம் நடத்தக்கூடாது என்ற சிந்தியா, அதற்காக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
உலகில் ஜனநாயகம் இல்லாத எந்த நாட்டுக்கும் அமெரிக்கா ஆயுதம் விற்கக்கூடாது என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.அதிபர் புஷ், துணை அதிபர் டிக் சேனி இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டுமென்ற தீர்மானத்தையும் அவையில் சிந்தியா தாக்கல் செய்திருக்கிறார்.

கறுப்பினத்தவரின் உரிமைக்காகப் போராடி கொல்லப்பட்ட மார்ட்டின் லூதர்கிங்கின் கொலை விசாரணை விவரங்களை ரகசிய ஆவணங்களாக அரசு வைத்திருப்பதை பகிரங்கப்படுத்த வேன்டுமென்று சிந்தியா போராடி வருகிறார். சிந்தியாவின் அரசியல் நுழைவுக்குக் காரணம் அவர் அப்பா பில்லி. போலீஸ் அதிகாரியாக இருந்த பில்லி, கறுப்பு அதிகாரிகளை வெள்ளை அதிகாரிகள் பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து காவல் நிலைய வாசலிலேயே போராட்டம் நடத்தியவர். அவர் பதவியை உதறிவிட்டு அரசியலில் குதித்து, ஜார்ஜியா மாநில சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஜெயித்தார். அடுத்து மகளையும் அரசியலுக்குக் கொன்டு வந்தார்.
சிந்தியா தொடர்ந்து மனித உரிமைப் பிரச்னைகள், கறுப்பின சம உரிமைகள், சுற்றுச்சூழல் அக்கறைகள் முதலியவற்றில் ஆர்வம் காட்டுபவர். அமெரிக்காவின் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் 32 மாநிலங்களில் போட்டியிட்டிருக்கிறார்.

பசுமைக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக 1996லும் 2000லும் போட்டியிட்ட வேட்பாளர் ரால்ஃப் நாடர் இந்த முறையும் போட்டியிட்டார். 2004ஐப் போலவே இம்முறையும் அவர் சுயேச்சை வேட்பாளர்.நாடரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கேய்னைப் போல எழுபது வயதைக் கடந்தவர் என்றாலும் அமெரிக்க சமூகத்தின் சிந்தனையை மாற்றியமைக்கப் போராடி வரும் சிந்தனையாளர். குடியரசுக் கட்சி, ஜனநாயகக்கட்சி இரண்டுமே பெரிய வர்த்தக நிறுவனங்களின் பிடியில் இருக்கும் அரசியலையே செய்துவருபவை என்ற கருத்தை முதன்முதலில் அமெரிக்க மக்களிடையே பரப்பத் தொடங்கியவர் நாடர்தான்.

பெரு முதலாளிகளின் பிடியில் இருந்து அரசியலை விடுவித்தாலொழிய, அமெரிக்காவில் எந்தப் பெரிய மாற்றமும் சாத்தியமில்லை என்று சொல்லிவரும் நாடர், நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்ற புகழுக்குரியவர். ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்கும் கார்கள் ஆபத்தானவை, பாதுகாப்பற்றவை என்பதை நாடர் நிரூபித்துக் காட்டியபிறகுதான், அமெரிக்காவில் கார்களில் சீட் பெல்ட் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டாயமாக்கப்பட்டது.

தனி மனிதராக வாழ்ந்து வரும் நாடரின் பெற்றோர் பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய அரபிய - லெபனீஸ் கத்தோலிக்க கிறித்துவர்கள். நான்கு தேர்தல்களாகத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டுவரும் ரால்ஃப் நாடர், குடியரசு, ஜனநாயகக்கட்சிகளுக்கு மாற்று அரசியலை அமெரிக்கர்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிட்டு வருகிறார். ஐந்து சதவிகிதத்துக்கு மேல் ஓட்டு வாங்கினால், தேர்தல் நிதியை அரசாங்கத்திடமிருந்து பெறலாம் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது. பசுமைக்கட்சி அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்காக அதன் வேட்பாளராக நாடர் போட்டியிட்டபோதும் ஐந்தை எட்ட முடியவில்லை.நாடர், சிந்தியா போன்றவர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கும் தேர்தல் நிதிகள் 5 மில்லியன் டாலர்களைக் கூட தாண்டுவதில்லை. ஆனால் ஒபாமா, மெக்கெய்ன் போன்ற பெரிய கட்சி வேட்பாளர்கள் திரட்டும் நிதிகள் பில்லியன் கணக்கை எட்டி விட்டன. அதுவும் இந்த முறை ஒபாமா, தனக்கு அரசு தரும் தேர்தல் நிதி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தேசம் முழுவதும் எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் 30 நிமிட நேரம் வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு ஒபாமாவின் பண பலம் இருந்தது.

அமெரிக்க அரசியலில் பண பலம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காக இதை அப்படியே விட்டுவிடுவதா என்ற கேள்வி பல அமெரிக்கர்கள் மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எதிரொலிக்கும் விதமாகத்தான் ரால்ஃப் நாடர் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். நாடர் கூட ஒரு வகையில் ஒரு பிரபலம்தான். நீண்ட காலமாக பல்வேறு நுகர்வோர் இயக்கங்களை நடத்திப் பிரபலமாக இருக்கக் கூடியவர். உண்மையிலேயே ஒரு சாமான்யர் அமெரிக்க தேர்தல் அரசியலில் பங்கேற்க முடியுமா ?
இந்தக் கேள்வி ஒரு பள்ளிக்கூட ஆசிரியைக்கு ஏற்பட்டது. சரியாகச் சொல்வதானால், அவரை நோக்கி வீசப்பட்டது. அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் ரெனோ என்ற ஊரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் டியர்னி காஹில். ஜனநாயகம், தேர்தல், அரசு, நிர்வாகம் பற்றியெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் டியர்னி.

தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் மில்லியனராக இருக்க வேண்டும்; அல்லது நிறைய மில்லியனர் நண்பர்கள் இருக்க வேண்டும். என்று ஒரு மாணவி கமெண்ட் அடித்தாள். டியர்னிக்கு அதிர்ச்சியாக இருந்தது, இந்த வயதிலேயே இந்தக் கருத்துக்கு வந்துவிட்டார்களே என்று. அப்படி இல்லை. அமெரிக்க அரசியல் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சம உரிமையைக் கொடுத்திருக்கிறது என்றெல்லாம் விளக்கினார் டியர்னி.
அப்படியானால் நீங்கள் போட்டியிட்டுக் காட்டுங்கள் பார்க்கலாம் என்றார்கள் மாணவர்கள். டியர்னி சவாலை ஏற்றுக் கொண்டார். என் பிரசார வேலையை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றார். எல்லாருமாக களத்தில் குதித்தார்கள். ஜனநாயகக்கட்சியில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்குப் போட்டியிட்ட டியர்னியால் திரட்ட முடிந்த தேர்தல் நிதி வெறும் ஏழாயிரம் டாலர்கள்.

ஆனால் அவரை எதிர்த்த சக வேட்பாளரிடம் இருந்தது ஏழு லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள். ஆனால் மாணவர்களின் பிரசார பலத்தில் டியர்னி ஜனநாயகக்கட்சி வேட்பாளரானார். செனட் தேர்தலில் அவர் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், பெரும் ஆச்சரியம். மொத்தம் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் அவருக்குக் கிட்டியது. எட்டு வருடங்கள் முன்பு இந்தப் பரிசோதனையில் ஈடுபட்ட டியர்னி இப்போதும் ஆசிரியையாகவே வேலை பார்க்கிறார். அவருடைய அனுபவம் காஹில் ஃபார் காங்கிரஸ் என்ற தலைப்பில் இப்போது புத்தகமாக வந்திருக்கிறது. அடுத்த வருடம் இது `க்ளாஸ் ஆக்ட்' என்ற தலைப்பில் திரைப்படமாக வரவிருக்கிறது. டியர்னிக்கு இருக்கும் நம்பிக்கையில் பாதி கூட இங்கே நம் இடதுசாரித் தலைவர்களுக்கு இல்லை என்பதுதான் வருத்தம்.

அமெரிக்கத் தேர்தல் ஜனநாயகத்தை எனக்கு சுவாரசியமாக்குபவர்கள் நாடர், சிந்தியா, டியர்னி போன்ற மூன்றாம் அணியினர்தான். மற்றபடி அங்கே தேர்தல் பிரசாரப் பரபரப்பு இருக்கும் அளவுக்கு வாக்குப்பதிவு கிடையாது. 50 சதவிகிதத்துக்குக் கீழேதான் பெரும்பாலும் வாக்குப்பதிவு இருக்கிறது. இந்தியாவில் 70, 75 வரை நடக்கிறது. தேர்தலில் பணம் விளையாடுவதில் நம்மை விஞ்சியவர்கள். வாக்காளர் பட்டியல் ஊழல்களிலும் நம்மை விஞ்சியவர்கள். என்னென்ன மாதிரியெல்லாம் வாக்காளர் பட்டியல் ஊழல்கள் நடக்கின்றன என்பது தனிக் கட்டுரைக்கான விஷயம்.ஆனால் எல்லாமே அங்கே எப்படியும் அம்பலத்துக்கு வந்துவிடுகின்றன என்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம். போஃபர்ஸ் பீரங்கியிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிலும் யாருக்குப் பணம் போயிற்று என்பது எங்கே எந்தக் காலத்தில் தெரியப்போகிறது? ம்ஹூம்..

இந்த வார தமிழ் வளர்ச்சி செய்தி

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பேரன் உதயநிதி `ரெட் சன்' என்று தன் பட நிறுவனத்துக்கு `தூய தமிழில்' பெயர் சூட்டியதையடுத்து, இன்னொரு பேரனாகிய தயாநிதிஅழகிரி புதிதாகத் தொடங்கியிருக்கும் பட நிறுவனத்துக்கு `க்ளவுட் நைன்' என்று `தூய தமிழில்' பெயர் சூட்டியுள்ளார். படத் தலைப்புகள் `டமிலில்' இருந்தால் மட்டுமே வரி விலக்கு என்று `கிராண்ட்பா' உத்தரவிட்டிருப்பதால், படத் தலைப்புகள் கொச்சைத்தமிழில் குருவி, வாரணம் ஆயிரம் என்று வைக்கப்பட்டன.

இந்த வார ஆறுதல்

இலங்கையில் போர் நிறுத்தம் உடனே ஏற்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை கருணாநிதி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் எல்லாருமாக திசை திருப்பி, நிவாரண நிதி வசூலாக மாற்றிய நிலையில், மீண்டும் போர் நிறுத்தக் கோரிக்கையை நோக்கி கவனத்தைத் திருப்ப தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எட்டு மணி நேர உண்ணாவிரதக் கூட்டம் பயன்பட்டது இந்த வார ஆறுதல்.

நன்றி. குமுதம்

Friday, November 7, 2008

காங்கிரஸ் கூத்தாடி கலைஞர்- கார்ட்டூன்

நன்றி குமுதம்

Thursday, November 6, 2008

புலி வாலை பிடித்த கலைஞர்!!!!

கலைஞரை பற்றி ரிப்போர்ட்டரில் எழுதியதை கீழே கொடுத்துள்ளேன்.

புலி வால் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறதே இலங்கைத் தமிழர் பிரச்னை...''
நம்மால் ஆகுமா அதெல்லாம். தி.மு.க.வின் மூத்த தலைவர்கள்தான் அப்படி நினைக்கிறார்களாம். அனைத்துக் கட்சிக் கூட்டம், எம்.பி.க்கள் ராஜிநாமா என்றெல்லாம் எச்சரித்துவிட்ட நிலையில், இந்தப் பிரச்னையை விடவும் முடியாமல், அதன் பின்னால் ஓடவும் முடியாமல் சங்கடப்படுகிறார்களாம்.''

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் `எம்.பி.க்கள் ராஜிநாமா எச்சரிக்கை' போன்ற கடினமான நிலையெடுக்க வேண்டும் என்பதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி போன்றவர்கள்தான் முனைப்பாக இருந்தார்களாம். ஆனால், மத்திய அரசோ எதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை. டெல்லியில் இலங்கை அதிபரின் சகோதரர் பாசில் ராஜபக்ஷேவுடன் பேசிய பிறகு சென்னை வந்து முதல்வர் கலைஞரை வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துச் சென்றதுடன், மத்திய அரசு கைகழுவிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்தம் பற்றி ஒருவரும் பேசவில்லையே என்று, இப்போது அனைத்துத் தரப்பினருமே அங்கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.''

எப்படியாவது இந்தப் பிரச்னையில் தொடர்ந்து முனைப்பாக இருக்கிறோம் எனக் காட்ட வேண்டிய நிலையில் நிதி வசூலைத் தொடங்கினார் கலைஞர். ஆனால், நிதியெல்லாம் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையுமா? என்ற ஐயத்தை இந்த முறை அனைவரும் எழுப்பத் தொடங்கிவிட்டனர். எம்.பி.க்களின் ராஜிநாமா எச்சரிக்கையும் பட்டிமன்றம் போல விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.''

சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கலைஞர் கூட்டப் போகிறாராம். கூட்டத்தைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், பிரதமர், சோனியா காந்தி ஆகியோரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறதாம்.

நன்றி ரிப்போர்ட்டர்

இப்படி இலங்கைப் பிரச்சினை நீண்டு கொண்டே போவதால் அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் கலைஞர். இதன் விளைவால் உத்தப்புரத்தில் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தால் தென் மாவட்டங்கள் முழுவதிலும் இயல்பான நிலை இன்னும் திரும்பவில்லை.

Wednesday, November 5, 2008

திருந்துவார்களா?" தென் தமிழக தொண்டர்கள்.!!????

உத்தப்புரத்தில் புதிய தமிழக கட்சித்தலைவரின் கார் தாக்கப்பட்ட சம்பவத்தின் விளைவாக தென் மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிப்பு.கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து கிடையாது .

திருந்தவே மாட்டார்களா? தொண்டர்கள் என சொல்லிக்கொள்ளும் மக்கள்.பொருளாதார ரீதியாகவும் சரி, வளர்ச்சியிலும் சரி வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது.காரணம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களால் தொடங்கப்படும் புதிய தொழில் வளர்ச்சிகள் சென்னையை சுற்றியுள்ள 100 கிலோமீட்டருக்குள்முடிந்துவிடும். அதை தாண்டி அவர்கள் வரவே மாட்டார்கள்.

எந்த தலைவர் தாக்கப்பட்டாலும் முதலில் அவர்கள் கை வைப்பது பேருந்துகளைத்தான். கடந்த இரு நாட்களாக தென்காசி,சங்கரன்கோயில்,சிவகிரி,ராஜபாளையம்,மதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்தே கிடையாது. கலவரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு அதப்பற்றி என்ன கவலை?. அதன் தலைவரும் இந்த சம்பவங்களை பற்றி மூச்சு விட மாட்டார். ஏனென்றால் இதன் மூலம் அவர்களின் திறமை ??? ஆளுங்கட்சிக்கு தெரியவேண்டுமாம்.

இப்படி ஒன்னுமில்லாத காரணத்திற்கெல்லாம் மக்களின் சாதி உணர்வை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் அரசியல் வாதிகளால் இன்னும் தென் மாவட்டங்கள் 10 வருடம் பின்னோக்கிதான் இருக்கின்றன.

Saturday, November 1, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.

ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை. காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.

காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'!

சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர். மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.

விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.

ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன. 2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.

ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள். சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.

தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான். தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.

மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.

இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.

இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு. எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..


இந்த வாரப் பூச்செண்டு

தாய், மனைவி, மகள் என்று எல்லா கட்டத்திலும் நம் குடும்பப் பெண்களை எவ்வளவு கொடூரமாக நடத்துகிறோம் என்று அப்படி நடத்தும் ஆண்கள் சார்பாக மன்னிப்பு வாக்குமூலத்தை அளித்த நடிகர்&எழுத்தாளர் சிவகுமாருக்கும், அதை ஒளிபரப்பிய விஜய்.டிவிக்கும் இ.வா.பூச்செண்டு.

இந்த வார வருத்தம்

தென் மாவட்டங்களில் கடந்த 4 வருடங்களில் 300 பெண் குழந்தைகளைத் தங்களுக்கு வேண்டாம் என்று பெற்றோர் நிராகரித்து அரசுத் தொட்டிலில் போட்டுவிட்ட செய்தி அறிய வருத்தம்.

இந்த வாரக் குட்டு

ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் தமிழக அரசின் சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகத்துக்கு பார்ப்பன புரோகிதர்களைக் கொண்டு வைதிக முறைப்படி பூமி பூஜை நடத்தியிருக்கும் மஞ்சள் துண்டு, பெரியார் விருது புகழ் முதலமைச்சருக்கும், அவர் சகா துரைமுருகனுக்கும், இதைச் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் இ.வா.குட்டு. அரசு என்பது அனைத்து மத நம்பிக்கையினருக்கும் நம்பிக்கையற்றோருக்கும் பொதுவான அமைப்பு. அதன் நிகழ்ச்சிகளில் எந்த மதச் சடங்கும் நிகழ்த்தப்படக் கூடாது.

இந்த வார சிறந்த நடிகர் விருது

அடுத்த சில மணி நேரங்களில் தன் காவல் துறையால் கைது செய்யப்பட இருக்கும் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரை மனிதச் சங்கிலி அணி வகுப்பில் பார்த்துக் கையசைத்துவிட்டுச் சென்ற முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு.

நன்றி. குமுதம்