Monday, September 22, 2008

திமுகவின் போலி முகம்- ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளிடம்

பதினெட்டு ஆண்டு சிறைவாசம். அதிலும், தனிமைச் சிறைச்சாலை. அதனினும் கொடியதாக எந்தவித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம். சாவின் நிழலில்தான் வாழ்வையே நகர்த்த வேண்டும் என்ற துன்பத்தின் எல்லை. நான் மொழி, இனப் பற்றாளன். ஈழத் தமிழரின் நிலைகண்டு நொந்தவன். இதுவே, என்னைக் கொலைக்களத்தில் நிறுத்தப் போதுமான காரணங்களாக இருந்தன. நான் செய்த தவறுதான் என்ன?' -தண்டனைக் குறைப்பு வேண்டி தமிழக முதல்வருக்கு தூக்குத் தண்டனைக் கைதி பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்தான் இவை.


முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அவரது கொடூர மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று சி.பி.ஐ.யால் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குத் தண்டனைக் கைதிகள். மற்றவர்கள் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக் கைதிகளில் சாந்தன், முருகன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள். பேரறிவாளன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்தான் ராஜிவ் படுகொலைக்குக் காரணமான `பெல்ட் பாம்' தயாரித்தவர் என சி.பி.ஐ.யால் குற்றம்சாட்டப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசின் கருணைப் பார்வைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள் பேரறிவாளன் உள்ளிட்ட கைதிகள். அதிலும், கடந்த 15-ம் தேதி நடந்து முடிந்த அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு தண்டனையைக் குறைக்கும் என்ற நம்பிக்கையோடு, பேரறிவாளன் எழுதிய கடிதத்தின் பல பகுதிகள் மிக உருக்கமாக எழுதப்பட்டிருந்தன.

ஆனால், அவரது தண்டனைக் குறைப்பு பற்றிய எந்தவித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. பேரறிவாளனின் நிறைவேறாத அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் இதோ...

`நிலையற்ற இவ்வுலகில் தனது இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் ஒரு மனிதனின் விண்ணப்பம். அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன். கொலையாளன் அல்ல. `தடா' சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கை விரித்து வந்த கயவர்கள் எம்மைக் கொலையாளியாக்கிய உண்மையை உணராதவர் அல்ல தாங்கள். எனக்கு கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர, அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் செய்த `பெரும் பிழைகள்'. கடைசி நம்பிக்கைத் துளிகளும் அற்றுப் போன மனிதனாக, மெல்ல மெல்ல சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இதனை எழுதுகிறேன்.

`நெஞ்சுக்கு நீதி'யின் நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள், `இருபது ஆண்டுகள் சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால், வனப்பும், வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. ஆயுள் தண்டனையைவிட, மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்' என எழுதியுள்ளீர்கள். ஆம். உள்ளபடியே, பிழைபட்டுப் போன நீதியின் விளைவால், 18 ஆண்டு வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன். உண்மைக்கு `கருணை' வேண்டி நான் எழுதவில்லை. `கனிவு' வேண்டி எழுதுகிறேன்.

அய்யா.. `யாருக்கும் தூக்குத் தண்டனை வேண்டாம்' என்கிறீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது, `ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களைக் கிழித்துவிடாதீர்கள்' எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். `மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்குக் கூடாது' என்றீர்கள். வியந்திருக்கிறேன்.

ஆனால், அய்யா... வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், பிறகேன் எமது தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? `நால்வரையும் தூக்கிலிடுவதில் எனக்கோ, எனது புதல்வர்களுக்கோ விருப்பமில்லை' என திருமதி சோனியா அம்மையார் கூறிய பின்னர், நளினியின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள். மகிழ்ச்சி. அதேநேரம், அவருக்கு தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால், அதைவிட கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏனெனில், இதேநிலை முடிவற்று நீடிப்பதால் தொலைந்துபோகும் எனது வாழ்வைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. மாறாக, கடந்த 18 ஆண்டுகளாகவே தமது வாழ்வே என்னை மீட்பதுதான் என சலிக்காது போராடிவரும் எனது பெற்றோரின் முதுமை தரும் அச்சம்தான் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக எனது கடமையைச் செய்யத் தவறியிருந்தாலும், எனது நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வு காண ஆசை கொள்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டிருந்தால், எனது பெற்றோர் தமது பேரப்பிள்ளைகளோடு இனிமையைக் கண்டிருப்பர். என்னைப் பற்றிய துன்பம் எனது பெற்றோரையும், உற்றாரையும் ஆட்கொண்டிருக்காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை. எனது பெற்றோருக்கு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை.

பிரியங்கா, நளினி சந்திப்பு அதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. திரு தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்கள் எமது துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளன. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடுதலை கிட்டவில்லையானால், இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை. வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ தற்போதே இறுதி செய்யப்பட்டாக வேண்டும். அல்லது இன, மொழிப் பற்றுக்காக குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என்று வரலாறு குறிக்கட்டும். முடிவுரை எழுதி புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கி வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை நிறைவு செய்கிறேன்' என ஏழு பக்கங்களுக்கு தனது கோரிக்கையைப் பதிவு செய்திருக்கிறார் பேரறிவாளன்.



நாம் இந்தக் கோரிக்கை கடிதம் பற்றி பேரறிவாளனின் தாய் அற்புதத்திடம் பேசினோம். "அண்ணா நூற்றாண்டு விழாவில் கட்டாயம் அறிவிப்பு வரும் என நம்பிக்கையோடு என் மகன் முதல்வருக்குக் கடிதம் எழுதினான். எதுவும் நடக்கவில்லை'' என குமுறலோடு பேசியவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு, "எங்களுக்கு ஒரு பையன். இரண்டு பெண் குழந்தைகள். அறிவு சிறைக்குப் போகும்போது, அவனுக்கு 19 வயசு. அவன் அக்காவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இப்போது பேரன் ப்ளஸ்டூ படிக்கிறான். பேத்தி ஒன்பதாவது படிக்கிறாள். கடந்தமுறை சிறையில் அவனைச் சந்தித்துப் பேசும்போது, `செப்டம்பர் 15_ம் தேதிக்குள் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால், `தயவு செய்து என்னைத் தூக்கில் போடுங்கள்' என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதப் போகிறேன்' என என்னிடம் அழுதான்'' என்றபடியே அழ ஆரம்பித்துவிட்டார் அற்புதம்.

`இன்றில்லாவிட்டாலும், நாளை, நாளை மறுநாள்.. என்றாவது ஒருநாள் தன் மகனின் விடுதலை தீர்மானிக்கப்படும்' என்ற நம்பிக்கைதான் அற்புதத்தின் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

லீலாவதி கொலைக்குற்றவளிகளை வெளியிடுவதில் காட்டிய அக்கறையை இந்த விசயத்தில் கொஞ்சமாவது காட்டுவார்களா?. முடியாது ஏனெனில் காங்கிரஸ் அதரவை வாபஸ் வாங்கிவிட்டால் திமுகவின் நிலை?.