Friday, October 31, 2008

ஈழம்- தேவை அரசியல் ஒற்றுமை

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் முதலில் மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்தது. அந்த அணிவகுப்பில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் கலந்து கொள்ள இயலாத காரணம் அதன் அரசியல் உறவுகள்தான்.அதே சமயத்தில் ஈழப் பிரச்னையில் எவருக்கும் சளைத்தது அல்ல என்பதனைக் காட்டியாக வேண்டும். எனவே மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்த அதே தினத்தில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தது. அந்தக் கருத்தரங்கில் பேசிய அதன் தலைவர்கள் `தனித்தமிழ்நாடு _ ஆயுதம் ஏந்தவும் தயார் _ இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தி ஈழம் செல்வோம்' என்றெல்லாம் பேசினர்.

`இலங்கைத் தமிழர்களுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் எந்த அம்சத்தில் நாம் இணைந்து நிற்க முடியுமோ அந்த சந்திப்பில் இணைந்து நிற்போம்' என்று முதல்வர் அறிவித்தார். இதுதான் இன்றைய அவசரத்தேவை. அதற்காக அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.ஈழத் தமிழர்களுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கும் அய்யா நெடுமாறன்கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனாலேயே அந்தக் கூட்டம் எடுக்கும் முயற்சிகள், முடிவுகள் வெற்றி மகுடம் சூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

தி.மு.கழகத்தோடு அய்யா நெடுமாறன் அவர்களுக்கு நீண்டகாலமாகவே கருத்து வேறுபாடு உண்டு. ஈழ மக்களுக்கு இன்றைய தேவை தமிழகத்தின் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதுதான். ஆகவேதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அய்யா கலந்து கொண்டார். உட்பகை ஒற்றுமையைச் சிதறடிக்க ஜெயலலிதா என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? `விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நான்தான் போராடி வெற்றி பெற்றேன்' என்கிறார். இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் இழுத்து வர வேண்டும் என்று முன்னர் சொன்னார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காகவே வைகோவை பொடா சட்டத்தில் கைது செய்து காராக்கிருகத்தில் அடைத்தார். ஆனால் இன்றைக்கு வைகோ எங்கே நிற்கிறார்? அ.தி.மு.க.வோடு கரம் கோத்துக்கொண்டு ஈழ மக்களுக்காகத்தான் இன்னும் போராடுகிறேன் என்கிறார். அதனை மக்கள் நம்புவார்களா?
அ.தி.மு.க.வைப் போல அவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கருத்தரங்கம் என்று அவர் தனி ஆவர்த்தனம் செய்தது பற்றி செல்வி ஜெயலலிதா என்ன சொல்கிறார்?

`தனித்தமிழ்நாடு என்ற அளவிற்குத் துணிச்சலாகப் பேசுகிறார்கள். ஆயுதம் ஏந்துவோம் என்ற அளவிற்குப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சிப் பீடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருப்பேன்' என்கிறார்.ஈழப்பிரச்னையை இப்போது உள்நாட்டு அரசியலின் லாவணிக் கச்சேரி ஆக்கிவிட்டார்கள். ஈழ மக்களுக்கு இதுதான் நாம் செய்யும் உதவியா?

அங்கே வன்னிக்காடுகளில் வனவிலங்குகளோடு வாழும் இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்களின் கண்ணீரில் லட்சிய தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.எத்தனையோ சோதனைகளைத் தாங்கி பட்டினி கிடக்கும் அவர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி செய்கிறது. அதனை நடு வழியிலேயே சிங்கள ராணுவம் பறித்துக் கொள்கிறது. சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்த பின்னர்தான் முதன்முதலாக 750 டன் உணவுப் பொருள்கள் ஈழ மக்களின் கரங்களை எட்டியிருக்கிறது.சோவியத் யூனியனைத் தாக்கிய ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போராடிய செஞ்சேனை வீரர்களுக்குக் கிடைத்தது ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு. இன்றைக்கு சிங்கள ராணுவத்தின் முப்படைத் தாக்குதலை எதிர்கொள்ளும் ஈழப் போராளிகளுக்குக் கிடைப்பது ஒரு நாைளக்கு ஒரே ஒரு இளநீர். இதுதான் உணவு. உணர்வுகள்தான் அவர்களுடைய நாடி நரம்புகளை - இதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் இன அழிப்பில் அனைத்து சிங்களக் கட்சிகளும் ராஜபட்சேக்களுக்குப் பின்னே அணிவகுத்து நிற்கின்றன. அதனால் வன்னிக்காடுகளில் ஈழத் தமிழர்களை வேட்டையாடுவதும் வங்கக் கடலில் மீனவத் தமிழர்களை வேட்டையாடுவதும் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது பாசிச சிங்கள அரசிற்குத்தான் தெரியும்.

`அங்கே காட்டிலும் மேட்டிலும் கண்ணீரில் மிதக்கும் ரத்த உறவுகளுக்காகக் காலத்தோடு உதவுவோம். அதற்கு மத்திய அரசை அசைய வைப்போம்' என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அறைகூவல் விடுத்தது. அதனைக் களத்தில் நிற்கும் போராளிகள் இரு கரம் விரித்து வரவேற்கிறார்கள். அதனால் இன்றைக்கு அவர்கள் ஆயிரம் யானை பலம் கொண்டு முன்னேறுகிறார்கள். ஆனால் அதற்குப் பாதகம் செய்யும் முறையில் இங்கே தனித் தமிழ்நாடு, ஈழத்திற்குப் படையோடு செல்வோம் என்று வாய் வீரம் பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதற்கு இதுவா நேரம்?

சிங்களவன் பூமி இலங்கை என்று அந்த நாட்டு ராணுவத் தளபதி கொக்கரிக்கிறார். இதன் பொருள் என்ன? ஈழத் தமிழனாயிருந்தாலும் இலங்கைத் தமிழனாக இருந்தாலும் அவர்கள் பொட்டுப்பூச்சிகள், அவர்கள் அடிமைகள் என்பதுதானே பொருள்?இந்தச் சூழலில் ஈழ மக்களுக்கு உடனடித் தேவை என்ன என்பதனை அனைத்துக் கட்சிக் கூட்டம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நல்ல அறிவிப்பினைச் செய்தார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் சமரசத்திற்கு இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னல்படும் ஈழ மக்களுக்கு உதவுவோம் என்று ஜப்பான் செல்லும் வழியில் பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார். இவர்கள் அறிவித்ததை செயல்படுத்தினாலே போதும். அதன் பின்னர்; அடுத்த அடி வையுங்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்தும். அதற்கு இங்கே நம்மிடையே ஒற்றுமை தேவை.தம்முடைய மைந்தனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிய விஜயகாந்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அங்கம் பெற்றிருக்க வேண்டும் என்பது நமது கருத்து. தம்முடைய உணர்வுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டாமா?1980_களில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எத்தகைய எழுச்சி ஏற்பட்டதோ அத்தகைய எழுச்சியின் அடித்தள நீரோட்டம் சூடேறிச் சுழன்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் உள்ளங்களில் எழுந்துள்ள எரிமலை பிரசவிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது பஞ்சபாண்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவமைந்தர்கள். ஆனால் தங்கள் அன்னை சிங்களத் துப்பாக்கி முனையில் துகிலுரிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் ஈழத்து மனித குமாரர்கள்.ஈழத்து மக்களுக்காக வில் அம்பு ஏந்தி வருகிறோம் என்று நாம் வீரவசனம் பேசத் தேவையில்லை. ஏனெனில் இன்று வரை ஈழப்போராளிகள் எவருடைய உதவியையும் கோரியதில்லை. நாடியதில்லை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஒன்றுபட்டுத் தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் போதும் என்றுதான் கூறுகிறார்கள்.
தமிழ் இன அழிப்பு நிறுத்தப்படவில்லையென்றால் ஈழம் என்று நாம் குரல் கொடுக்கத் தேவையில்லை. சிங்களப் பேரினவாதமே அதனை பெற்றெடுத்துத் தரும்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Sunday, October 26, 2008

தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை

இலங்கைத் தமிழர்களுக்காக இத்தனை கரிசனம் காட்டும் நம்மூர்த் தலைவர்கள், உள்ளூரில் ஏற்கெனவே அகதிகளாக வந்து தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை மறந்து விட்டார்கள் போலும். இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழகக் கட்சிகள் காட்டும் திடீர் முனைப்பு, இங்குள்ள அகதிகளை உற்சாகமடைய வைத்துள்ள அதே நேரத்தில், `எங்களையும் கொஞ்சம் கவனத்தில் வைத்து உதவுங்களேன்' என ஏங்குகிறார்கள் அவர்கள்.


தமிழகத்தில் மொத்தம் சுமார் 120 இடங்களில் அகதி முகாம்கள் இருக்கின்றன. அதில் மதுரை அருகேயுள்ள உச்சப்பட்டி முகாமும் ஒன்று. அங்குள்ள அகதிகளின் நிலையை நேரில் பார்த்து வர நாம் அங்கு சென்றோம். குண்டும் குழியுமான பாதை. கனமழை பெய்தால் கரைந்து விடும் மண்குடிசைகள். இங்கேதான் அகதிகள் தங்கியிருக்கிறார்கள். முகாமில் போலீஸார் நடமாட்டத்தை நம்மால் பார்க்க முடிந்தது. ``போட்டோ, பெயர் எதுவும் வேண்டாம். பிரச்னையாகி விடும். கியூ பிராஞ்ச் போலீஸார் வந்து எங்களைத் துளைத்தெடுத்து வேறு முகாமுக்கு மாற்றி விடுவார்கள்'' என்ற பீடிகை கலந்த பயத்துடன் பேசத் தொடங்கினார்கள் அகதிகள்.``நாங்கள் பதினெட்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்தோம். காடாய்‌க் கிடந்த இந்த இடத்தை அதிகாரிகள் காண்பித்தார்கள். நாங்கள்தான் வீடுகளைக் கட்டிக் கொண்டோம். இங்கே மின்வசதி கிடையாது. அதிகாரிகளிடம் கேட்டபோது, `பிழைக்க வந்த உங்களுக்கு எதற்கு மின்சாரம்?' என்று நக்கலாகக் கேட்டார்கள். மற்ற முகாம்களில் அரசு செலவில் மின்வசதி கிடைக்கிறது. இந்தநிலையில் நாங்கள் தற்போது சொந்தச் செலவில் மின்சாரம் பெற்று இங்கே ஜீவித்து வருகிறோம்.

மற்ற முகாம்களில் அரசு வீடு கட்டிக் கொடுக்கிறது.. இங்கு அதுவும் இல்லை. தொண்டு நிறுவனங்கள்தான் ஏதோ உதவிகளைச் செய்கிறார்கள். அகதிகளாக வந்த புதிதில் பலரிடம் நாங்கள் ஏமாந்தோம். இலங்கையில் சொத்துக்களை விற்று நகைகளாக மாற்றி எடுத்து வந்த எங்களிடம் இங்கே நகை பாலீஷ் செய்வதாகக் கூறி பலர் தங்கம் திருடினார்கள். அதுபோல குறைந்த விலைப் பொருளை எங்களிடம் அதிகவிலைக்கு விற்கும் கொடுமையும் நடந்தது. எங்கே கலவரம், வன்முறை நடந்தாலும் போலீஸார் உடனே முகாம் ஆட்களைப் பிடித்துப் போவது வழக்கமாகி விட்டது.நாங்கள் எங்கே போனாலும் மாலை ஆறு மணிக்குள் முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். அப்படி வராவிட்டால் இரண்டு நாட்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருக்கும். அரசு அதன் உதவித் தொகையை நிறுத்திவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் ஆறுமணிக்குள் முடியும் வேலையை மட்டுமே நாங்கள் பார்க்க முடிகிறது. வேறு முகாமில் உள்ள உறவினரைப் பார்க்க நாம் போவதாக இருந்தாலும் சரி, வேறு முகாம்காரர் இங்கே நம்மைப் பார்க்க வருவதாக இருந்தாலும் சரி, கியூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாக வேண்டும்.
சுமார் ஐநூறு வீடுகள் உள்ள இந்த முகாமில் ஒரேயொரு குடிநீர்க் குழாய்தான் இருக்கிறது. முன்பு மாதமொருமுறை வரும் அரசு டாக்டரும் இப்போது வருவதில்லை. எங்கள் ஆண்கள் வெளியே போய் கட்டட வேலை, பெயிண்ட் வேலை செய்து சம்பாதிக்கும் நிலையில், நாங்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று அரசு எச்சரித்து வைத்திருக்கிறது.

இலங்கையில் எங்களது உறவினர்கள் யாராவது இறந்தால் கூட இங்கே நாங்கள் கறுப்புக்கொடி கட்ட முடியாது. கறுப்பு பாட்ஜ் அணிய முடியாது. இலங்கை அரசைக் கண்டித்து இங்கே நாங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூட உரிமையில்லை. தமிழக கிராமப்புறங்களில் உள்ள `நூறு நாள் வேலைத் திட்டத்தின்படி' எங்களுக்கும் வேலை தந்தால் நன்றாக இருக்கும். அதுபோல அங்கன்வாடி, ஊட்டச்சத்து மையம், இலவச கேஸ் இணைப்பு போன்ற பயன்களை எங்களுக்கும் கிடைக்கச் செய்யலாமே.வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்களுக்கு ஆறுமாதம் அல்லது ஓராண்டில் ஓட்டுரிமை கிடைக்கிறது. ஆனால் நாங்கள் இங்கு வந்து பதினெட்டு வருடமாகியும் ஓட்டுரிமை கிடையாது!'' என்று பொருமினர் அவர்கள்.

பெரம்பலூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒருவரிடம் பேசினோம்.

``நாங்கள் இங்கே வந்து இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொண்ணூறு குடும்பங்கள் இந்த முகாமில் இருக்கிறோம். அரசு சலுகை விலையில் தரும் மண்ணெண்ணெய், அரிசி போன்றவற்றை இங்குள்ள ரேஷன் கடைக்காரர்கள் சரியான அளவில் தருவதில்லை. அரிசியும் தரமானதாக இல்லை. கேட்டால், `அகதியாக வந்த உங்களுக்கு இது போதாதா?' என்பார்கள். நாம் யார்மேல் கோபப்பட முடியும்?குடிநீர்தான் இங்கே முக்கிய பிரச்னை. பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வரும். ஒரு குடும்பத்துக்கு ஐந்து குடம். அவை தீர்ந்து விட்டால் வெளியே ஒரு குடம் தண்ணீரை மூன்று ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இங்கே அகதிகள் சிலர் தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். அங்கு சாப்பிடும் குடிகாரர்கள் சிலர் காசு கொடுப்பதே இல்லை. கேட்டால் வண்டியைக் கவிழ்த்துப் போட்டுவிடுவார்கள். அதோடு போலீஸ் தொல்லையை வேறு சமாளிக்க வேண்டியிருக்கிறது!'' என்றார் அவர்.

இலங்கை அகதிகள் மத்தியில் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றிய `போர்டு' தொண்டு நிறுவனத்தின் இயக்குனரும், வக்கீலுமான எஸ். சையதுவிடம் பேசினோம்.

``இங்குள்ள அரசியல்வாதிகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறார்களே தவிர, இங்கு அகதிகளாக இருப்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. அந்தத் தலைவர்கள் அகதிகள் முகாமுக்குச் சென்று பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தொண்டு நிறுவனங்களுக்கு இன்னும் சட்டரீதியாக அனுமதியளித்தால் அவர்களாவது தங்களால் முடிந்த உதவிகளை அகதிகளுக்குச் செய்வார்கள்.

அகதிகள் முகாம்களை அந்தந்தப் பகுதி பஞ்சாயத்தோடு இணைக்கலாம். அப்படிச் செய்தால் பஞ்சாயத்து மூலம் சில நன்மைகள் அகதிகளுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழகம் வந்து இருபதாண்டுகள் ஆன அகதிகளுக்கு வங்கிகள் தாராளமாகக் கடன் வழங்க வேண்டும். அவர்கள் வங்கிக் கடனைக் கட்டாமல் திடீரென இலங்கைக்குப் போய்விடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை. காரணம், `இலங்கையில் போர் முடிந்தாலும் அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றவே ஆறு ஆண்டுகள் ஆகும்' என்கிறார்கள். அதுவரை அகதிகள் அங்கு போக முடியாத நிலையில் அவர்களுக்கு இங்கே நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளைச் செய்யலாமே?'' என்றார் சையது. சரிதானே?

இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலைமையை வெளிக்கொண்டு வந்த ரிப்போர்ட்டருக்கு எனது நன்றி

Saturday, October 25, 2008

கலைஞர் டிவியின் டுபாக்கூர் அறிவிப்பு !!!!!!!!!

அஜீத்தின் பில்லா திரைப்படம் தீப ஒளித்திருநாளில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.!!!!!!!!???.



இப்படத்திற்கான அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது.

""தமிழ்த்திரையுலகில் பெரும் திருப்பத்தை???!!!! ஏற்படுத்திய திரைப்படம்""

இதில்தான் எனது சந்தேகம் பெரும் திருப்பத்தை???!!!! எந்த திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை கொஞம் சொல்லுங்க.!!!!!!!!

சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தை ஏன் சொல்லலை?????

Friday, October 24, 2008

இவ்வார ஞாநியின் பார்வையில்

21 வருடங்களுக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்னைக்காக இன்னொரு மனிதச் சங்கிலி! 1987ல் நடந்தது `போராட்டம்'. இப்போது நடப்பது `அணிவகுப்பு'! அன்று நடத்தியது கட்சி அரசியல்களுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு. இப்போது ஆளும் கட்சியான தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு.! அன்றைய பிரதான கோரிக்கை: `இந்திய அரசே, தலையிடாதே!'. இன்றைய பிரதான கோரிக்கை: `இந்திய அரசே தலையிடு!' மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் சிங்கள ஆட்சியின் பேரினவாத வெறிதான்.

1987ல் கூட்டமைப்பில் முக்கியப் பங்காற்றியவர்கள் மறைந்த பேராசிரியர் சாலை இளந்திரையன், இயக்குநர் வி.சி.குகநாதன், கவிஞர் மு.மேத்தா, பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர். இவர்களுடன் சேர்ந்து பணிபுரிந்த நான் செயற்குழுவில் இருந்தேன். எழுத்தாளர்பத்திரிகையாளர் நாகார்ஜுனனும் நானும் அப்போது தினசரி என் வீட்டில் சந்தித்து விவாதிக்கும் நண்பர்களாக இருந்தோம். உலகளாவிய புரட்சி இயக்கங்கள், மாற்று கலாசார இயக்கங்கள் பற்றிய தகவல்களை பரிமாறுவதும் பேசுவதும் அவற்றுடன் உள்ளூர் அரசியலை ஒப்பிட்டு அலசுவதும் எங்கள் வாடிக்கையான விவாதங்கள். ஐரோப்பாவில் அடிக்கடி நடைபெறும் பிரும்மாண்டமான மனிதச் சங்கிலிகள் எங்கள் கவனத்தை ஈர்த்தன.

எதிர்ப்பு, போராட்டம் என்பதையே ஒரு கலாசார திருவிழா தொனியில் அங்கே கையாளுவதைப் பற்றிப் பல முறை பேசியிருக்கிறோம். இந்தியாவில் முதல்முறையாக மனிதச் சங்கிலி என்ற வடிவத்தை கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மத நல்லிணக்கத்துக்காக நடத்தியிருந்தது.
இந்தப் பின்னணியில்தான் ராஜீவ்ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்தும் இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறக் கோரியும் எப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவது என்ற விவாதத்தின்போது நான் கூட்டமைப்புத் தோழர்களிடம் மனிதச் சங்கிலி நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தேன். எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். போராட்டத்துக்கு எல்லா கட்சிகளின் ஆதரவையும் கோருவதற்காக பல்வேறு குழுக்களாகச் சென்றோம். தி.மு.க தலைமையைச் சந்தித்த குழுவில் நானும் இருந்தேன்.

கலைஞரை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தோம். உடன் இருந்தவர்கள் முரசொலி மாறன், வைகோ.

மனிதச் சங்கிலி என்ற வடிவம் அப்போது கலைஞருக்கும் மாறனுக்கும் பிடிபடவில்லை. வைகோதான் விடாமல் அதன் உலகளாவிய சிறப்புகளை விளக்கினார். வடகிழக்கு இந்தியாவில் போராடி வந்த `போடோ' அமைப்பினர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவரவர் வீட்டு வாயிலில் வந்து நின்று (தட்டு, தாம்பாளம் போன்று) கிடைத்த பொருளில் ஒலி எழுப்பி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வினோதமான போராட்டம் நடத்தியதை நான் தெரிவித்தேன். உடனே முரசொலி மாறன் சொன்னார் - `போடோக்கள் ஆதிவாசிகள். இன்னும் ஆதிவாசிப் பழக்க வழக்கங்களை கைவிடாதவர்கள். வில், அம்பு, மேளம் எல்லாம் பயன்படுத்துபவர்கள். தமிழ்நாட்டில் தமிழன் எங்கே இருக்கிறான்? அவனை முதலில் தேட வேண்டும் . நடைமுறைக்கு ஏற்ற மாதிரி போராட்ட வடிவமாகச் சொல்லுங்கள்' என்றார். கடைசியில் வைகோவின் பரிந்துரைக்குப் பின் மனிதச் சங்கிலிக்கு தி.மு.க ஆதரவை அறிவிக்க கலைஞர் சம்மதித்தார்.அப்போது இடதுசாரிகள் மனிதச் சங்கிலியை ஆதரிக்கவில்லை. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஆதரித்தார்கள். அமைதிப் படையைத் திரும்பப் பெறக் கோரியதை ஆதரிக்கவில்லை. மிகப் பெரும் எழுச்சியுடன் தமிழகம் முழுவதும் நடந்த பிரும்மாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் என்னுடன் கை கோத்து அண்ணா சாலையில் நின்ற என் நண்பரான ஒரு மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞரை கட்சி விரோத நடவடிக்கை செய்ததாக கட்சியிலிருந்து நீக்கியது மார்க்சிஸ்ட் கட்சி.

ஒரு விதத்தில் இடதுசாரிகள் இன்றும் அதே போன்ற நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். இந்தியா தலையிட்டது சரி; ஒப்பந்தம் சரி; அமைதிப்படையை அனுப்பியது சரி என்பது அன்றைய நிலை. தலையிட வேண்டும் என்பதுதானே இன்றைக்கும் நிலை. தமிழ்த் தேசியவாதிகளும் ஒரு அம்சத்தில் தொடர்ந்து ஒரே நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். இந்தியா அன்று படையை அனுப்பியது தவறு; ஒப்பந்தத்தைத் திணித்தது தவறு. இன்று இலங்கை அரசுக்கு படைக்கு பதில் ஆயுதமும் பயிற்சியும் கொடுப்பது தவறு என்பதும் சீரான நிலைதானே?

எப்படிப் பார்த்தாலும் இந்தியா இலங்கையில் தலையிட வேண்டும் என்ற விருப்பம் ஒரு சிலரைத் தவிர பலருக்கும் அப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. எப்படிப்பட்ட தலையீடாக இருக்கவேண்டும் என்பதில்தான் வேறுபாடுகள். வங்க தேசத்தில் ராணுவத்தோடு தலையிட்டது போல ஈழத்தில் இந்தியா தலையிடவே இடாது. மத அடிப்படையில் நாட்டைப் பிரிவினை செய்தது தவறு என்ற இந்திய அரசின் கருத்தை உலக அரங்கில் உரக்கச் சொல்ல வங்க தேசம் பயன்பட்டது. பாகிஸ்தானைப் போல, இந்தியாவின் எதிரி நாடாக இலங்கை இருந்ததில்லை. வங்க தேச முஸ்லிம் வங்காளிகளும் மேற்கு வங்க ஹிந்து வங்காளிகளும் இணைந்து மொழி அடிப்படையில் தனி நாடு கேட்கமாட்டார்கள் என்பது இந்திய அரசுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தனி ஈழம் அமைந்துவிட்டால், தனித் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளும் வலுவடையும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு இன்றும் இருக்கிறது.இந்தியாவை இந்த வட்டாரத்தின் வல்லரசாக, இலங்கை அரசு ஏற்கச் செய்வதைத் தாண்டி வேறு நோக்கங்கள் எதுவும் இந்திரா காந்திக்கோ ராஜீவ் காந்திக்கோ இல்லை. இலங்கை அரசைத் தங்களுக்கு இணக்கமாக இருக்கச் செய்ய, ஈழத் தமிழ்ப் போராளிகளைப் பயன்படுத்த முயற்சித்தார்கள். கைக்கடக்கமாக இருப்பார்கள் என்று கருதப்பட்ட ஈழப் போராளிகள், `நாங்கள் ஒன்றும் இந்தியாவின் அடியாட்கள் அல்ல' என்ற நிலை எடுத்தபோது, எல்லாமே சிக்கலாகிவிட்டது. தனக்கு எதிராக முற்றிலும் பாகிஸ்தான், சீன அரசுகளின் ஆதரவு சக்தியாக இலங்கை அரசு மாறிவிடாமல் இருந்தால் போதும் என்ற குறைந்த அளவுத் திட்டத்தை மட்டுமே இன்றைய மன்மோகன் அரசு செயல்படுத்துகிறது. இதுதான் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் புலிகளுக்குப் பாதகமாகவும் இருக்கிறது.

யுத்தம் செய்யும் இரு தரப்பையும் பேசவைக்க இந்திய அரசால் முடியும். செய்ய வேண்டும். அதைச் செய்யவைப்பதற்காக, இங்குள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் குற்ற உணர்ச்சியையோ, விரோத உணர்ச்சியையோ எழுப்புவது எனக்கு உடன்பாடில்லை. ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து, மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் ஷேவ் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு, ஏ.சி. காரில்தான் வந்து இறங்குகிறார்கள். மேற்கே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உலவும் ஏடுகளில், பூசம், கார்த்திகை முதலிய சைவச் சடங்குகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், தீபாவளிக்கு புது டிஸைன் நகை, பட்டு வகைகள், வாஸ்து, ஜோதிட விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளில் குண்டு வீச்சு செய்திகளை விட அதிகமாக `டாக்சி டாக்சி'தான் ஒலிக்கிறது. எட்டு மணி நேரம் கியூவில் நின்று 15 ஆயிரம் இலங்கைப் பணம் கொடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அண்மையில் பார்த்தேன் என்று ஒரு இலங்கைத் தமிழர் வலைப்பூவில் எழுதியதைப் படிக்கும்போது, குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது எழும் வேதனைக்கு நிகரான வேதனை எனக்கு உண்டாகிறது. நேரடி யுத்த களத்தில் இருப்பவர்களைத் தவிர, அவர்களுக்காக அனுதாபப்படும் யாரும் எங்கேயும் தங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வதே இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் மேலும் மேலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைப்பது அர்த்தமற்றது. சிந்திக்க வைப்பதுதான் தேவை. பகுத்தறிவு ஒன்றுதான் தீர்வு.

யுத்தம் எந்தப் பிரச்னையையும் தீர்க்காது.பரஸ்பர வெறுப்பையும் விரோதத்தையும் மட்டுமே அதிகரிக் கும். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய காந்தி, ஒருபோதும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பை நம் மனங்களில் விதைக்கவில்லை. அதனால்தான் இன்று ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நம்மவர்களால் உலகம் முழுதும் வெற்றி அடைய முடிகிறது. வெறுமே உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன், தமிழச்சிகள் அங்கே கற்பழிக்கப்படுகிறார்களே என்று இங்கே பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நடிகனெல்லாம், மேடையில் குமுறுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது..எத்தனை குறைகள் இருந்தாலும் ஜனநாயகத்துக்கு விஞ்சிய மாற்று இப்போதைக்கு கண்ணெதிரே இல்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், மன்மோகன், சோனியா, லாலு, மாயாவதி வகையறாக்களை விட பிரபாகரன் பல மடங்கு சிறந்த சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய ராணுவ அரசியல் மக்களுக்கு உதவியதை விட, கருணாநிதியின் ஊழல் அரசியல் அதிகம் உதவியிருக்கிறது என்பதே நிஜம். ஊழல் ஜனநாயக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், திருமாவளவன், வைகோ, இல.கணேசன், விஜய்காந்த் முதல் என் போன்ற குரல்கள் வரை ஒலிக்கமுடியும். நிர்மலா நித்யானந்தன், செல்வி, பத்மநாபா, பாலகுமாரன், ஷோபாசக்தி, சேரன் குரல்களுக்கு இடம் கொடுக்கும் பிரபாகரனின் அரசியலைத்தான் என் மனம் அவாவுகிறது.

யுத்தத்தின் நடுவே சிக்கி சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அனுதாபக் குரல்களை எழுப்பியவர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் ஒருசில மணி நேரங்களில், அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில் அவரவர் சுகதுக்கங்களுக்குப் போய்விடுவார்கள். பிரபாகரனும் பொடியன்களும் மட்டும் ஏன் சபிக்கப்பட்டவர்களாக வருடக்கணக்கில் காடுகளில் மரணத்தோடு வாதம் புரிகிற வாழ்க்கையில் கிடக்க வேண்டும்?

ஈழ அரசு, நிர்வாக வேலைகளுக்கு நடுவே, மகாபலிபுரம் கடற்கரையில் புலிக் குகையில் குடும்பத்தினருடன் வந்திருந்து கலாகே்ஷத்ராவின் நாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முதலமைச்சராக பிரபாகரன் இளைப்பாறும் நாளை எதிர்நோக்குகிறேன். சிங்கள இயக்குநர் பிரசன்னாவுக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை பிரபாகரன் வழங்கும் நிகழ்ச்சியில் பார்வையாளனாக அமர்ந்திருக்க ஆசைப்படுகிறேன்.இவையெல்லாம் நிறைவேறுவதற்கான நிர்ப்பந்தங்களை யார் செய்தாலும் ஆதரிப்பேன். உண்மையான மனிதச் சங்கிலி என்பது கைகளை மட்டும் கோப்பது அல்ல; மனங்களை இணைப்பதுதான். இரண்டாவது மனிதச் சங்கிலியில் நான் நிற்கும்போது என் மனதில் இந்த எண்ணமே நிறைந்திருக்கும்..

இந்த வாரக் குட்டு


கிராமங்களில் தினசரி 14 மணி நேரமும் நகரங்களில் தினசரி 4 மணி நேரமும் மின்வெட்டை அறிவித்துவிட்டு இன்னும் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெட்கங்கெட்ட ஆற்காடு வீராசாமிக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இ.வா.குட்டு. ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்க்கும்போதும் தலையைத் தடவும்போதும், தமிழக மக்கள் குட்டிய இடம் வலிக்கும் உணர்ச்சி ஏற்படும்.

இந்த வார (அஞ்சலி) பூச்செண்டு

இயக்குநர்களே சினிமாவின் உண்மையான படைப்பாளிகள் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் முதலில் விதைப்பதில் வெற்றி கண்ட இயக்குநர் (எங்கள் பள்ளிக்கூட சீனியர்) மறைந்த ஸ்ரீதர் அவர்களுக்கு இ.வா. பூச்செண்டு.

நன்றி குமுதம்

FLASH NEWS:


சீமானை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை

கைப்புள்ளயின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-கைப்புள்ள
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

சினிமா,சினிமா,சினிமா,சினிமா

இந்த சினிமாத் தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தாமிராவுக்கு நன்றி. ஈழப்பிரச்சினை பதிவுலகில் சூடாக உலவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இது தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது. இருந்தாலும் சொந்தமாக பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.கேள்விகளுக்கு போகிறேன்.

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது ஞாபகமில்லை. சின்ன வயதில் சினிமாதியேட்டர் செலவது என்றால் கொஞ்சம் கடினம். காரணம் ஊரில் பஸ் வசதி கிடையாது. அப்ப்டியே சென்றாலும் அம்பாசமுத்திரம்,கடையம்,தென்காசின்னு ரொம்ப தூரம் போகனும். கடையம்தான் பக்கத்தில். முதலில் பார்த்த சினிமா உறவைக் காத்த கிளி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் எங்க ஊர்ல ஒரே ஒருத்தர் வீட்டில்தான் டிவி உண்டு.அதுக்கப்புறம் காது கேளாதோர் பள்ளியில் ஒரு டிவி உண்டு. இந்தப் பள்ளியில் வாரம் ஒரு படம் டெக்கில் போடுவார்கள். அங்குதான் இந்தப்படம் பார்த்தேன். அடங்கொப்ப மவனே என்ற பாடல் மட்டும் நினைவில் உள்ளது.

என்ன உணர்ந்தீர்கள்?

படம் எப்ப முடியும் போய் துங்கனும்னு ஞாபகத்திலே துங்கிவிட்டேன்.
நன்றாக நினைவு தெரிந்து பார்த்த திரைப்படம் என்றால் அம்பை கல்யாணி தியேட்டரில் அக்னி நட்சத்திரம் பார்த்ததுதான். கார்த்திக், பிரபு நடிப்பு நல்லாவே இருந்திச்சி.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் தாமிர பரணி சென்ற வருடம் பார்த்தது. சண்டக்கோழி மாதிரி இருக்கும்னு நம்பிப் போய் கடசியில மெகா சீரியல பார்த்த திருப்தியுடன் வெளியே வந்தேன் ?????!!!!

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

டிவிடியின் புண்ணியத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் & குருவி. சந்தோஷ் சுப்ரமணியம் நல்ல படம். ஹாசினி கதாப்பாத்திரம் நல்ல கற்பனை. குருவி மசாலா படம்னு எல்லாத்தையும் அதிகமா அரைத்து தலையில தடவிட்டாங்க கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அன்பே சிவம், முதல் மரியாதை.
நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பு, பாடல்கள் என அசரடித்தப் படம். வெட்டி வேரு வாசம் இன்னும் மனதில் நிற்கிறது. கம்யூனிசத்தை புதுமையாக சொன்னது அன்பே சிவம். ஆம்புலென்ஸில் மாதவன் சிறுவனிடம் பேசுமிடம், மாதவன், கமல் கிளைமாஸில் பேசுமிடம், நானும் கடவுள் என மாதவனிடம் விவாதம் செய்யுமிடம் என படம் முழுமைக்கும் ஒரு தாக்கதை ஏற்படுத்தியது

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

நேற்று வந்த விசயகாந்த் முதல் இன்று முளைத்த ரித்தீஸ் வரைக்கும் முதலமைச்சர் கனவில் மிதப்பதுதான் செம காமெடி.

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலர், குமுதம் ,விகடன். தற்போது முரளி கண்ணன்


தமிழ் சினிமா இசை?

இசையென்றால் இளையராஜாதான். பூங்கதவே தாள் திறவாய் இன்னும் இப்பாடலுக்கு அடிமையாயிருக்கிறேன் படிக்கும் வயதில் கேசட்டில் பாடல் பதியனும்னா 5 கிலோமீட்டர் தூரமுள்ள பொட்டல் புதூருக்கு சென்று வரவேண்டும். முதல் நாள் கொடுத்தால் மறு நாள் தான் கேசட் தருவார்கள். அனைத்து பாடல்களுமே மெலோடி பாடல்கள்தான். இதற்காக வீட்டில் நிறைய அடியும் வாங்கியிருக்கேன். தற்போது உதடு முனுமுனுக்கும் பாடல் கண்கள் இரண்டால், இதில் வரும் காட்சிகள் பல என்னுடைய செமஸ்டர் விடுமுறை காலத்தை நினைக்க வைக்கிறது.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தாழையூத்தில் பாலிடெக்னிக் படிக்கும் போதுதான் ஆங்கில மற்றும் ஹிந்தி படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் பார்த்த ஆங்கில படம் தி ரிபெல். ஜெட்லி நடித்தது என்பதை விட அவர் அடித்தது என்று சொல்லலாம். ஈவில் டெட் படம் பாத்துட்டு ஒரு வாரம் இரவில் தனியாக பாத் ரூம் செல்லவே பயந்தேன். ஹாஸ்டல் கலாட்டா அப்படி இருந்தது. முதலில் பார்த்த ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹெயின் கோன்.பாடல்களுக்காகவே பலமுறை நெல்லை சென்ட்ரல் தியேட்டரில் பாத்து தாக்கிய படம்.
ஹிந்தியில் பிடித்த ப்டம் என்றால் சக்தே இந்தியா. ஆங்கிலத்தில் ரொம்ப பிடித்தப்படம் தி பீஸ்ட் ஆப்கானை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவத்தை பற்றிய படம். திறமை குறைவான ராணுவ வீரனை பற்றிய படம்.
சமீபத்தில் ரசித்த மங்கோலிய படம் தி பிளையிங் வாரியர்ஸ். ( உபயம் வேல்டு மூவிஸ் சேனல்) இப்படத்திலிருந்து ஒரு காட்சியை அப்படியே குசேலனில் காப்பி அடித்திருந்தார்கள் .

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எதுவுமே கிடையாது. அப்படி ஒரு நல்ல காரியம் நடக்கலை....!!!!!

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தாமிரா :சிறப்பாக ஒன்றுமில்லை. இப்போது போலவே பத்து பேரரசுவும், ஒற்றை அமீரும் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.// ரிப்பீட்டு

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா கிடையாதா ? தமிழர்களின் மூச்சு கொஞ்சம் கஷ்டப்பட்டு சுவாசிக்கும். டப்பிங் ப்டங்கள் அதிகமாக வெளியாகும். தொலைக்காட்சிகள்தான் பாவம். இப்போதைக்கு பதிவுலகில் இருப்பதால் ஒரு வருடம் ஓடிவிடும்.

இந்த தொடருக்கு நான் அழைப்பது

1. கடையம் ஆனந்த்
2. சுரேஸ் கண்ணன்
3. பாபு
4. தமிழ் பறவை

Wednesday, October 22, 2008

மின்சார கட்டுப்பாடு விழி பிதுங்கப்போகும் வாடகைதாரர்கள்

அக்டோபர் மாதத்தில் மின் வெட்டு, மின்சார
பயன் அளவு கட்டுப்பாடுஎன்று தமிழ்நாட்டின் வரலாற்றுப்பக்கங்களில் ஆற்காட்டாரின் பெயர்
நிரந்தரமாகிவிட்டது.

Monday, October 20, 2008

எனது 50 வது பதிவு & இவ்வாரம் ஞாநியின் பார்வையில்

இது எனது 50வது பதிவு. என்னையும் ஒரு பதிவராக மதித்து ??!!!! ( மகாநடிகன் காமெடி) 50 வது பதிவு எழுதவைத்த நல்ல உள்ள்ங்களுக்கு !!!!!!!!!???? நன்றி.ஹிட்ஸ் 6000த்தை தாண்டிவிட்டது. எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் முக்கியமாக சுரேஸ் ஜீவானந்தம்,தமிழ் பறவை, கோவி கண்ணன் பாபு,தாமிரா, முரளி கண்ணன், பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் நன்றி நன்றி நன்றி.





சினிமா தொடர் பதிவுக்கு என்னை அழைத்த  தாமிராவுக்கு நன்றி.


காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துவிட்ட தமிழ் சினிமா துறையினர் இப்போது அடுத்தபடியாக ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்னையைத் தீர்த்து வைக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். எதுவானாலும் முதலமைச்சர் பஞ்சாயத்துக்கு ஓடுகிறவர்கள் ஈழத் தமிழருக்காக ராமேஸ்வரத்தில், வருகிற 19-ம்தேதி ஊர்வல ஷோ காட்டப்போகிறார்களாம். சினிமாக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை இதுவல்ல. அது என்ன என்று கடைசியில் பார்ப்போம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் எல்லாம் இதில் ஒன்று சேர-வேண்டும் என்று சொல்லப்படுவது அபத்தத்தின் உச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னை ஓர் அரசியல் பிரச்னை. அதை எப்படி அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக முடியும் ? இலங்கையில் இருக்கும் சிங்களவர்கள், இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள், இலங்கையின் பூர்விகக் குடிகளான வடக்கு - கிழக்கு மாகாணத்து ஈழத் தமிழர்கள் மூவருக்கிடையிலேயும் அரசியல் வேறுபாடுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அவற்றை ஊக்குவித்ததிலும் வளர்த்ததிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பங்கு முக்கியமானது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பல ஜாதி, மத, இன முரண்பாடுகளை ஊக்குவித்து வளர்த்ததும் அதே ஏகாதிபத்தியம்தான்.அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற கோரிக்கை இலங்கையிலேயே நிறைவேறியது கிடையாது. இந்திய வம்சாவழியினரான மலையகத்தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோதோ, அவர்களுக்கு இந்தியாவிலும் குடியுரிமை இல்லை, இலங்கையிலும் இல்லை என்ற சிக்கல் ஏற்பட்டபோதோ, யாழ்ப்பாணத்து, மட்டக்களப்பு ஈழத்தமிழர்கள் திரண்டு வந்து ஆதரவுப் போராட்டம் எதுவும் நடத்தி விடவில்லை. அதே போல இன்றைக்கு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் அகதிகளாக்கப்படும்போதும், மலையகத் தமிழர்கள் கூக்குரல் எழுப்புவதில்லை.தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும், ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை. ப்ளாட், டெலோ, ஈராஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., எல்.டி.டி.ஈ. என்று தனித்தனிக் குழுக்களாகவே இருந்தார்கள் - இயங்கினார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு குழுவுக்கும் இருந்த வேறுபட்ட அரசியல் பார்வைதான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் இயங்கியிருந்தால், வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தைப் பெற்றிருப்பார்கள். அப்படிப் பெற்ற தமிழ் ஈழத்தில் தேர்தல் ஜனநாயக முறை இருந்திருந்தால், நம் தமிழ்நாட்டைப் போல தி.மு.க., அதி.மு.க. பாணி கட்சிகளுடன் இருந்திருக்கும். ஜனநாயகம் இருந்திராவிட்டால், எப்படியும் உட்சண்டைகளால் சின்னாபின்னமாகியிருக்கும்.

எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு என்று எதுவும் கிடையாது. மனிதாபிமான அடிப்படை ஒன்றுதான் அப்படிப்பட்டதாக இருக்க முடியும். அதைக்கூடப் பயன்படுத்தி அரசியல் செய்யமுடியும். மனிதாபிமான அடிப்படையில் நாம், சண்டையிடும் இரு தரப்பினரையும் சண்டையை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புங்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில், பல முறை போர் நிறுத்தம் செய்யப்படும். பேச்சு நடக்கும்; தோல்வியடையும்; மீண்டும் போர் தொடங்கும். மீண்டும் மீண்டும் இதுதான் நடக்கிறது. காரணம் என்ன?சிங்கள அரசும் சரி, விடுதலைப் புலிகளும் சரி பேச்சுவார்த்தை-யின் மூலம் தீர்வில் நம்பிக்கை வைக்கவே இல்லை. இருவருமே ராணுவத் தீர்வைத்தான் விரும்பு-கிறார்கள். புலிகளை அடியோடு அழித்துவிடமுடியும் என்று சிங்கள அரசு நம்புகிறது. ஒரு மறு தயாரிப்புக்குப் பின் இம்முறை யுத்தத்தில் தனி ஈழத்தை அடைந்து விடுவோம் என்று புலிகள் நம்புகின்றனர்.

ஒரு பக்கம், சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்த வைக்கவும், அந்த ஓய்வுக் காலத்தில் மறுபடியும் அடுத்த சுற்றுப் போருக்குத் தயாராவதற்காகவும், சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய அரசை நிர்ப்பந்திக்க, தாய்த் தமிழகத்தில் உள்ள நம்முடைய மனித நேய உணர்வுகளையும், தமிழ் இன உணர்வுகளையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இன்னொரு பக்கம், இந்தப் பிரச்னையில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்ட அலுப்பையும், இந்திய அரசு தலையிட பயப்படும் தயக்கத்தையும், இந்திய அரசில் இருக்கும் தன் சார்பாளர்களையும் பயன்படுத்தி, இந்திய அரசின் ஆதரவுடனேயே புலிகளை போரில் வீழ்த்திவிடலாம் என்று சிங்கள அரசு நினைக்கிறது.இந்த சக்திகளின் அரசியல் சதுரங்கத்தில் , இடையில் சிக்கித் தவிப்பவர்கள் சாதாரண ஈழத்தமிழர்களும், இங்குள்ள சாதாரணத் தமிழர்களாகிய நாமும்தான். கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் என்று அத்தனை தமிழக அரசியல் தலைவர்களும் எப்போதும் போல, நமது மனிதாபிமான உணர்வையும் தமிழ் உணர்வையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயற்சிக்-கிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவராவது வரும் மக்களவைத் தேர்தலில் , ஈழத்தமிழர் பிரச்னையை இங்கே தங்கள் பிரதான தேர்தல் பிரச்னையாக அறிவிப்பார்களா? முடியாது.

இலங்கை அரசையும் புலிகளையும் போரை நிறுத்த வைத்து பேச்சு வார்த்தைக்குக் கொண்டு வர கடும் நடவடிக்கை எடுக்கும் கட்சியையே மத்திய அரசில் அமரவைப்போம், அப்படிப்பட்ட கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று சொல்லுவார்களா? மாட்டார்கள். எரிகிற ஈழ நெருப்பில் குளிர் காய்வதோடு சரி.ஈழத்தமிழர்களுக்காக இப்போது ராமேஸ்வரத்தில் ஊர்வலம் நடத்தப் போகும் தமிழ் சினிமாக்காரர்களின் யோக்யதை என்ன? டி.ராஜேந்தரின் மகன் சிம்புவும் நடிகை சிநேகாவும் அண்மையில்தான் இலங்கையில் சிங்களப்பகுதியான கண்டியில் போய் காதல் பாட்டுக்கான படப்பிடிப்பில் கலந்துகொண்டார்கள். அதே வேளையில், சிங்கள அரசு தமிழர்கள் மீது குண்டு வீசிக் கொண்டுதான் இருந்தது. அதற்காக படப்பிடிப்பும் நிற்கவில்லை. தினமும் காசினோவுக்குப் போய் சூதாடுவதும் நிற்கவில்லை. நாளைக்கு ராமேஸ்வரத்தில் சினிமா நடிக, நடிகையர் ஊர்வலம் போகும்போது என்ன நடக்கும்? வேடிக்கை பார்க்கும் கும்பலில் `டேய், அதோ நமீதாடா டேய்' என்பான் ஒரு விடலை. `இல்லைடா. நமீதா இன்னும் பெரிசா இருப்பாடா. இது வேற எவளோ' என்பான் இன்னொரு விடலை. இப்படிப்பட்ட ரசனையைத்தானே நம் சினிமாக்கள் அதிகமாக வளர்த்துவைத்திருக்கின்றன. இந்தக் கொடுமையெல்லாம், எந்த நேரமும் மரணத்துள் வாழும் ஈழத்தமிழர் பெயரால், ராமேஸ்வரம் தெருவில் நடக்க வேண்டுமா?

சினிமாக்காரர்கள், தயவுசெய்து ஊர்வலத்தை ரத்து செய்துவிட்டுக் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. உங்கள் ஒரு நாள் ஊதியத்தையேனும் கொடுத்து, போரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு மருந்தும் உணவும் வாங்கி செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதைத் தடுக்கும் மத்திய அரசைக் கண்டியுங்கள்.

2. குடியரசுத் தலைவரை சென்று சந்தித்து உறைக்கிற மாதிரி சொல்லுங்கள். தமிழர்களுடைய பிரச்னையில் தலையிட, உதவி செய்ய, மத்திய அரசு தயங்குவதைக் கண்டித்து அத்தனை தமிழ்ப்படைப்பாளிகளும், இதுவரை தமிழ்ப்படங்களுக்காகத் தங்களுக்குக் குடியரசுத்தலைவர் கொடுத்த அத்தனை தேசிய விருது-களையும் திருப்பித் தருவதாக அறிவியுங்கள். இதை டெல்லிக்குப் போய் செய்தால், நாடு முழுவதும் அதிர்வுகள் ஏற்படும்.

3. ஈழத்தமிழர் பிரச்னை பற்றி எடுக்கப்பட்ட `ஆணி வேர்' போன்ற படங்களை தமிழகம் முழுவதும் உங்கள் படங்கள் ஓடும் திரையரங்குகளில் ஒரு காட்சியை மட்டுமாவது ரத்து செய்துவிட்டு, இலவசமாக மக்களுக்குப் போட்டுக் காட்டுங்கள். அடேய், நீ என்ன செய்யப் போகிறாய் என்கிறீர்களா? சிங்கள அரசு, விடுதலைப்புலிகள் இரு தரப்பின் படைகளையும், ஐ.நா. சபையின் அமைதிப் படைக் கண்காணிப்பில் வைத்துவிட்டு, ராஜபக்ஷேவும் பிரபாகரனும் ஒரே மேசை முன் உட்கார்ந்து விவாதித்து, தமிழர் சம உரிமைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவ-தும் அதற்கு மன்மோகன்சிங் சாட்சிக் கையெழுத்திடுவதும்தான் என் விருப்பம். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத ஓர் அற்ப எறும்பு நான்.றீ


இந்த வாரப் பூச்செண்டு


சுதந்திரம் பெற்று 61 வருடங்கள் கழித்தேனும் காஷ்மீருக்கு ரயில் பாதை அமைத்ததற்காக மத்திய அரசுக்கு இ.வா.பூ.


இந்த வாரக் குட்டு


கேரளத்தின் மலையாற்றூர் வனப் பகுதியில் படப்பிடிப்பின்போது விதிகளை மீறி அபூர்வ தாவரங்களை அழித்ததற்காக மணிரத்தினத் தின் படப்பிடிப்புக் குழுவினருக்கு இ.வா.குட்டு. முதலில் அப்படிப்பட்ட பகுதியில் படப்பிடிப்பை அனுமதித்ததற்காக வனத்துறை அதிகாரிகளுக்குசிறப்புக் குட்டு.


இந்த வாரக் கனவு


``பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் `ஒற்றுமையாக'ச் செயல்படவேண்டும்.'' - மேலிடப் பார்வையாளர் கே.பி.பாலகிருஷ்ணன்.

THANKS  : KUMUTHAM

Saturday, October 18, 2008

என்ன நடக்கிறது இலங்கையில்?


இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.

``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....

வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள். இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.

இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.

ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.

அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.

வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.

இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.

இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள். வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது. ``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.

கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ?

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, October 17, 2008

தேர்தல் கூட்டணி ???? + மின்வெட்டு புதிய முயற்சி.

தலைப்பு மட்டும் தான் என்னோடது, குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து சோலை எழுதியது

தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன.


பாட்டாளி மக்கள் கட்சியை தமது கூட்டணியிலிருந்து தி.மு.கழகம் வெளியேற்றியது. `காங்கிரஸ் உறவை தி.மு.கழகம் கத்தரித்துக் கொள்ளாததால் அந்த அணியிலிருந்து வெளியேறுகிறோம்' என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்தன.தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்று டெல்லியில் செயலாளர் பிரகாஷ்காரத்தை நிருபர்கள் கேட்டனர். `காங்கிரஸ் -பி.ஜே.பி. கூட்டணிகளில் அங்கம் பெறும் கட்சிகளுடன் உடன்பாடு இல்லை என்று தமிழ் மாநிலக் குழு முடிவு செய்திருக்கிறது. அதுதான் கட்சியின் நிலைப்பாடு' என்று அவர் சொன்னார்.`பி.ஜே.பி.யோடு உறவு இல்லை என்று அ.தி.மு.க. உறுதி அளித்தால் அதனோடு உடன்பாடு காண்பது பற்றி சிந்திப்போம்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அய்யா நல்லகண்ணு அவர்கள் கூட இதே கருத்தை நெல்லைச் சீமையில் எதிரொலித்தார்.



ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி இப்படிக் கூறவில்லை. எங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டோம். பிற கட்சிகள்தான் தங்கள் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்ற அளவில் நின்று கொண்டது. விண்ணப்பம் போடவோ, வேண்டுகோள் விடுவிக்கவோ அந்தக் கட்சி தயாராக இல்லை.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தமது நிலையைத் தெரிவித்துவிட்டார். அவருடைய நிலைப்பாடு தெளிவானது. உறுதியானது.கோடநாட்டில் ஓய்விலிருந்த அவர் சென்னை திரும்பினார். தலைமைக் கழகம் வந்தார். நிருபர்களைச் சந்தித்தார். அதன் முழு விவரம் பிரதான ஏடுகளில் வெளியாகி இருக்கிறது.பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. கூட்டணி காணுமா என்பது கேள்வி. `இப்போதைக்கு இந்தக் கேள்வி எழத் தேவையில்லை' என்றார் செல்வி ஜெயலலிதா.இதன் பொருள் என்ன என்பதனை நாம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விளக்கத் தேவையில்லை. அவை அரசியல் புரிந்தவைகள். ஆனால், பாமர மக்களுக்கு அர்த்தம் புரிய வேண்டாமா?



பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சி அல்ல. அவசியப்பட்டால் அந்தக் கட்சியோடும் அ.தி.மு.க. கூட்டணி காணும். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தல் வரை பி.ஜே.பி.யோடு ஒன்றுபட்டு நின்றிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் கேள்விக்கு இதுதான் சரியான பதிலாகும்.எனவே, பி.ஜே.பி.யோடு எப்போதும் அ.தி.மு.க. உறவு கொள்ளக் கூடாது என்று எந்தக் கட்சியும் அ.தி.மு.க. தலைமையை நிர்ப்பந்திக்க முடியாது. அதே போல் அந்த மடத்தை விட்டு இந்த மடத்திற்கு வருகிற கட்சிகளுக்கு அ.தி.மு.க.வும் நிபந்தனை விதிக்காது. ஏனெனில், இப்போது துணை தேவை.கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எப்படி அ.தி.மு.க. உடன்பாடு காண முடியும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கும் செல்வி ஜெயலலிதா அழகாக பதில் அளித்தார்.`இப்போது அ.தி.மு.க. தனி அணி. அதனால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி காணத் தயார். எங்கள் கழக கதவுகள் திறந்தே இருக்கின்றன' என்று அவர் பளிச்செனப் பதில் அளித்தார்.அவருடைய கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் நிலை தெளிவாகத் தெரியும்.தனி அணியாக இருக்கின்ற அ.தி.மு.க., எந்தக் கட்சியுடனும் கூட்டணி காணத் தயார்.



கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தாலும் வரவேற்கும். பா.ம.க. வந்தாலும் வரவேற்கும். அந்தக் கூட்டணியும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தான்.தேர்தலுக்குப் பின்னர் டெல்லியில் என்ன நிலை எடுப்பது என்பதனை அ.தி.மு.க. பின்னர் தீர்மானிக்கும்.பி.ஜே.பி.யோடு உறவு உண்டா இல்லையா என்பதெல்லாம் இப்போது எழுகின்ற பிரச்னை அல்ல.தமிழகத்தைப் பொறுத்தவரையில் செல்வி ஜெயலலிதாதான் கூட்டணி பற்றி இவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார். ஆனால், அ.தி.மு.க.வோடுஉறவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத கட்சிகள் கூட, இன்னும் காலம் வரவில்லை என்று கணக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. காரணம், அந்தக் கட்சிகள் இப்போது டெல்லியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் பெற்றிருக்கின்றன. எனவே, கடைசி நிமிடம் வரை அங்கே காரியங்களைச் சாதித்துக் கொண்டுதான் அந்தக் கட்சிகள் வரும். அதனை செல்வி ஜெயலலிதாவும் அறிவார்.எந்தக் கட்சியின் கதவுகளையும் இடதுசாரிக் கட்சிகள் தட்ட வேண்டிய அவசியமில்லை. சீட்டையும் ஓட்டையும் மட்டுமே நம்பி அவை அரசியல் நடத்துவதும் இல்லை. தேர்தலையே கட்சி வளர்ச்சிக்கான ஒரு கருவியாகத்தான் கருதும்.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. ஒரே ஒரு நிகழ்வு அரசியலை புரட்டிப் போட்டுவிடும்.



குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னர் அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்க செல்வி ஜெயலலிதாவும் முலாயம் சிங் யாதவும் முயன்றனர். அதே சமயத்தில் செல்வி ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. எனவே மூன்றாவது அணி மொட்டிலேயே கருகியது.`இந்த மூன்றாவது அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறுமா' என்று பிரகாஷ் காரத்தை நிருபர்கள் கேட்டனர்.`நாங்கள் அமைக்க விரும்பும் மூன்றாவது அணிக்கும் அவர்களுடைய அணிக்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. அந்த அணியில் இடம் பெற்றுள்ள முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி போன்ற சில கட்சிகளுடன் கூட்டு இயக்கம் நடத்த வழி உண்டு (இன்றைய நிலையில் அதுவும் சாத்தியமில்லை) ஆனால் அ.தி.மு.க.வுடனோ, அரியானா சவுதாலோ கட்சியுடனோ எந்த உறவும் வைத்துக் கொள்ள இயலாது' என்று பிரகாஷ்காரத் தெளிவுபடுத்தினார்.அவர் சந்தேகப்பட்டது போலவே அதன் பின்னரும் பி.ஜே.பி.க்கு ஆதரவான நிலையையே அ.தி.மு.கழகம் எடுத்து வருகிறது. இந்திய வரலாறு சோதனைகளைச் சந்திக்கும்போதெல்லாம் பி.ஜே.பி. அணியில்தான் அ.தி.மு.க. நின்றிருக்கிறது. அதுவே அந்தக் கழகத்தின் வெளிப்படையான நிலைப்பாடாகும்.இதனை ஏற்றுக் கொள்கின்ற கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அரசியல் உறவு கொள்ளலாம். அதில் தவறில்லை. இப்போது தனி அணியாக இருக்கின்ற அந்தக் கழகம் அவசியம் கருதி பி.ஜே.பி. உறவை சற்றுத் தள்ளி வைக்கலாம். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்...? அந்தக் கழகத்திற்கு எவரும் கடிவாளம் போட முடியாது. முரட்டுக்காளை - தூக்கி எறிந்துவிடும்.



எனவே, இன்றைய நிலையில் தங்கள் கோட்பாடுகளின் அடிப்படையில் இடதுசாரி இயக்கங்கள் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி காண முடியும்?



கொள்கைரீதியாகவோ கோட்பாடு ரீதியாகவோ அ.தி.மு.க.வுடன் உறவு கொள்ள இயலாது.



பா.ம.க.வுடன் உறவு கொள்ள முடியுமா? அந்தக் கட்சி மையத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து அதிகாரத்தில் பங்கு பெற விரும்புகிற இயக்கம். குறைந்தபட்சம் இரண்டு அமைச்சர் பதவிகளாவது அதற்குத் தேவை. எனவே எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இடதுசாரிக் கட்சிகளுடன் அந்தக் கட்சி அணிசேர விரும்பாது.மேலும் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி என்பதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே இடதுசாரிக் கட்சிகளுடன் அந்தக் கட்சி உடன்பாடு காண விரும்பாது.எனவே, இன்றைய நிலையில் இடதுசாரிக் கட்சிகளின் கோட்பாடுகளுக்கு ஏற்ப தே.மு.தி.க._ மார்க்சிஸ்ட்_ இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணிதான் அமைய முடியும்.



இந்த அணி தமிழக மக்களுக்கு புதிய அணியாக, புதுமை அணியாக இருக்க முடியும்.லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பிற்குப் பின்னரும் தேனி பொதுக்கூட்டத்திற்குப் பின்னரும் தனித்து நின்றாலும் வெற்றி உறுதி என்று அ.தி.மு.க. தலைமைக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கக் கூடும். பல முனைப் போட்டி தங்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று அந்தக் கழகம் எதிர்பார்க்கலாம்.
 
 
 

Thursday, October 16, 2008

இலங்கை பிரச்சினையில் தமிழ்நாட்டு கட்சிகள் -- கேலிச்சித்திரம்

Wednesday, October 15, 2008

ரஜினி ரசிகர்கள் + இந்தியா அணுசக்தி மக்கள் கேலிச்சித்திரம்


நன்றி குமுதம், தின மலர்

Monday, October 13, 2008

மின்வெட்டு கேலிச்சித்திரம்

            
நன்றி குமுதம்.காம்

Sunday, October 12, 2008

எங்க ஊர்-- மின்வெட்டு--போக்குவரத்து

5 நாள் விடுமுறையில் சென்ற வாரம் ஊருக்கு சென்று வந்தேன். அந்த 5 நாட்களும் இரவில் தூக்கமே கிடையாது. காரணம் மின்வெட்டு. இந்த வாரம் தான் அரசு 6 மணி நேரம் மின்வெட்டு என அறிவித்து இருக்கிறது. ஆனால் பல மாதங்களாக குறைந்தது 8 மணி நேரம் என பாரபட்சம் பார்க்காமல் ( வடிவேலு பாணியில்) மக்களை நன்றாகவே தூங்க வைக்கிறார்கள்...!!! மின் வெட்டு நேரம் என்றால் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை அல்லது அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை, காலை 6 மணி முதல் 9 மணி வரை அல்லது காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 8 மணி முதல் 9 மணி வரை அல்லது 11 மணி முதல் 12 மணி வரை அட்டவணை போட்டு தாக்கிட்டு இருக்காங்க. அய்யா மீடியாக்களே சென்னையைத் தாண்டி கொஞ்சம் வந்து பாருங்க. சென்னையில் 2 மணி நேர மின்வெட்டுக்கே பயங்கரமாக அலறிய மீடியாக்களை இப்போது தேடவேண்டியிருக்குது


போக்குவரத்து

என்னுடைய பத்து வயதில் என்ன போக்குவரத்து வசதி இருந்ததோ அதேதான் இப்போதும் என்னுடைய கிராமத்தில். என்ன ஒரு வித்தியாசம் என்றால் பக்கத்து ஊர் வரைக்கும் மினி பஸ் வசதி. அவ்வளவுதான் ( பக்கத்து ஊருக்கு 2 கிலோமீட்டர் நடக்கனும்) சென்னை மநகர போக்குவரத்துக்கழகத்தின் M போர்டு வியாதி தற்போது தென் மாவட்டங்களிலும் அறிமுகமாகியிருக்கிறது. பேசாம பஸ் கட்டணத்தை அரசாங்கம் உயர்த்தலாம்.எதுக்கு மறைமுகமாக இந்த மாதிரி உயர்த்தனும்!!!!!

பங்குச்சந்தை & வைகோவின் நிலை குமுதம் கேலிச்சித்திரம்

Saturday, October 11, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- குமுதம்.

அன்புள்ள மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு,


வணக்கம்.

சுய இனப் பாலுறவு பற்றித்தான் இந்தக் கடிதம் எழுதத் தொடங்கினேன். ஆனால், அதற்கு முன்னால் சில விஷயங்கள்.

முதலிலேயே தெளிவாக அறிவித்துவிடுகிறேன். சிகரெட்டுக்கு எதிராக நீங்களும், மதுவுக்கு எதிராக உங்கள் தந்தையும் எடுத்து வரும் முயற்சிகள் எல்லாவற்றையும் நான் பாராட்டுகிறேன். ஆதரிக்கிறேன். உங்கள் இருவருக்கும் அதற்காக என் முழு ஆதரவு உண்டு. அவற்றுக்காக ஆளுக்கொரு பூச்செண்டும் உண்டு.சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களும் மது வகைகளும் எப்படியெல்லாம் நம் சமூகத்துக்குத் தீங்கானவை என்பது பற்றிய விவாதம் அவசியமற்றது. கொலையையும் தற்கொலையையும் குற்றங்களாக சட்டப்படி அறிவித்துள்ள சமூகத்தில், சிகரெட் புகைப்பவர்_ புகைக்காதவரைக் கொலை செய்பவராகவும், மது அருந்துபவர்_ தற்கொலை செய்து கொள்பவராகவும் கருதப் போதுமான நியாயங்கள் உள்ளன.முதல் கட்டமாகப் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இது போதாது. சிகரெட் தயாரிப்பு தடை செய்யப்படவேண்டும். இது உங்கள் கையில் இல்லை என்றும் ஐந்து அமைச்சகங்கள் தொடர்புள்ள பிரச்னை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஏராளமான புகையிலை விவசாயிகளின் வேலை வாய்ப்புகளும் பீடி,சிகரெட் தயாரிக்கும் ஆலைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என்ற கவலையினால், தயாரிப்பும் விற்பனையும் தடை செய்யப்படாமல் இருக்கின்றன. இந்த சமாதானம் நியாய மானது அல்ல. அவர்களுக்கான மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.புகையிலைக்கு நாம் சூட்டியிருக்கிற பெயரே தவறானது. அதைப் புரத இலை என்றுதான் சொல்ல வேண்டும். மனித உடலில் சுரக்கும் புரதங்களையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் புரதங்களையும் தயாரிக்க மிகச் சிறந்த தாவரங்களில் அது ஒன்று. ரத்தம் உறைவதைக் கரைக்கவும், புற்று நோயைத் தணிக்கவும் தயாரிக்கப்படும் மருந்துகளுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் புகையிலையில் உள்ளன. பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய எத்தனால் தயாரிக்கவும் புகையிலை பயன்படும். இந்தத் தயாரிப்பில், சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு நிகரான பயோமாஸ் உள்ள செடியாக புகையிலை கருதப்படுகிறது.

உலகமெங்கும் சிகரெட் கம்பெனிகளின் பண பலம்தான் புகையிலையை மாற்றுப் பயன்பாடுகளுக்குத் திருப்ப விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.அதே போலத்தான் மது தயாரிப்பும். மின்சாரம் தயாரிக்கவும் வண்டிகளுக்கான எரிபொருள் தயாரிக்கவும் மொலாசஸைப் பயன்படுத்தாமல் போதை திரவங்களைத் தயாரிப்பதில் திருப்பிவிட்டிருப்பது மது உற்பத்தியாளர்களின் பண பலம்தான். ஜனநாயக தேர்தல் அரசியல் எப்போதும் பண பலத்துக்கு அடிபணிந்துதான் செயல்பட்டாகவேண்டியிருந்தாலும், அதையும் மிஞ்சக்கூடியது மக்கள் பலம். சிகரெட்டாலும் மதுவாலும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒருத்தரேனும் இருக்கிறார்கள். அவர்களால் அவரவர் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் கருத்தை உங்களுக்கு சார்பாகத் திரட்டித்தான் நீங்கள் சிகரெட், மது கம்பெனிகளை எதிர்கொள்ளமுடியும். சிகரெட், மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதையே உங்கள் கட்சியின் கொள்கையாகச் சொல்லி, வரும் தேர்தலில் நீங்கள் மக்களைச் சந்திக்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் போட்டியிடும் தொகுதியில் இதையே பிரச்னையாக முன்வைத்து நீங்கள் முன்னுதாரணம் படைக்கலாம்.அண்மையில் நீங்கள் மத்திய அமைச்சரவையிலிருந்தே விலகுவதாக மிரட்ட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தது. அப்படி ஏதாவது செய்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.உங்கள் அமைச்சகத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை, உள்துறை அமைச்சகம் அதே மன்றத்தில் தெரிவித்தது. அது மட்டுமல்ல. உங்கள் கருத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்ஹோத்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது போன்ற ஒரு கேவலம் இதற்கு முன்பு மத்திய அரசில் நிகழ்ந்தது இல்லை. ஒரு அமைச்சரின் கருத்தை, அவருடைய அமைச்சகம் நீதி மன்றம் முன்பு தெரிவித்த கருத்தை, நீதிபதி ஏற்கக்கூடாது என்று மத்திய அரசின் வக்கீலே நீதிபதியிடம் சொல்லுவது என்பது விசித்திரமானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட. ஒரு தவறான முன்னுதாரணமும் கூட.இதில் வருத்தத்துக்குரியது என்னவென்றால், உங்கள் கருத்துதான் சரியான கருத்து. அதைத்தான் உள்துறை அமைச்சகம் ஏற்கக் கூடாது என்று நீதிபதியிடம் சொல்லியிருக்கிறது.ஓரினப் பாலுறவு எனப்படும் ஹோமோசெக்ஷுவாலிட்டியை தண்டனைக்குரிய குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் 377-ம் பிரிவு வைத்திருக்கிறது. விக்டோரியா மகாராணி காலத்தில் 1861-ல் போட்ட இந்த சட்டத்தை இன்றைய பிரிட்டனே கைவிட்டுவிட்டது. தன் பால் உறவு என்பதை ஒரு நோயாக ஒரு காலத்தில் அறிவித்த ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமும் அந்தக் கருத்தை நீக்கிவிட்டது.இந்தியாவும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று சென்ற வருடம் பொருளாதார அறிஞர் அமர்த்யாசென், கேப்டன் லட்சுமி, கிரீஷ் கர்னாட், அருந்ததி ராய், குல்தீப் நய்யார், ராஜ்தீப் சர்தேசாய், அபர்ணா சென் முதலிய 250 பிரமுகர்கள் உங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்கள். பாவம், அவருக்கு புஷ் சொல்வது மட்டும்தானே காதில் விழும். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

நீங்கள் இந்தச் சட்டத்தைக் கைவிட இன்னொரு சரியான காரணம் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் ஓரின உறவாளர்களில் 80 சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. இந்த சட்டத்தின்படி அவர்களுக்கு சிகிச்சை தரும் டாக்டர் முதல் சமூக சேவகர் வரை எல்லாரையும் தண்டிக்கலாம் என்ற அபத்தத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

ஓரின உறவு, தண்டனைக்குரிய குற்றம் என்பதை நீக்கினால் தான், அந்த வாழ்க்கைமுறை உள்ளவர்களில் எய்ட்ஸ் தொற்றியவர்கள் பகிரங்கமாக வந்து சிகிச்சை பெற முடியும். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று நீங்கள் சொன்னதைத்தான் கண்டுகொள்ளவேண்டாம் என்று நீதிபதியிடம் மத்திய அரசு வக்கீல் சொல்கிறார். இதைக் கண்டித்து நீங்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டியிருக்க வேண்டாமா? போகட்டும். அமைச்சரவையில் உங்கள் கருத்துக்கு ஆதரவு தருவோரைத் திரட்டிச் சென்று பிரதமரிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.எய்ட்ஸ் பரவாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்ட ஓரின உறவாளர்களைக் காப்பாற்றவும் நீங்கள் பேசியதை உங்கள் கட்சியினரும் தமிழகத்தில் இருக்கும் கலாசாரக் காவல்காரர்களும் இதுவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ``தமிழ்நாட்டில் ஓரின உறவாளர்களே கிடையாது. அது சிலப்பதிகார மரபுக்கு விரோதமானது. அப்படி சிலர் இருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அன்புமணி குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது. தமிழகத்து ஆண் சிங்கங்களை இழிவுபடுத்துவதாகும்'' என்று கூக்குரல் எழுப்பி, இத்தனை நேரம் உங்கள் மீது மஞ்சக்குப்பம் முதல் களியாக்காவிளை வரை 144 கோர்ட்டுகளில் வழக்குப் போடாமல் அவர்கள் இருப்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !

நடிகை குஷ்பு உங்களைப் போலவே எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க, பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்வதைப் பற்றிக் கருத்து சொல்லப் போய்த்தானே அவருக்கு எதிராக உங்கள் கட்சிக்காரர்களும் கலாச்சாரக் காவலர்களும் பொங்கியெழுந்தார்கள்? இன்னும் அந்த வழக்குகள் அப்படியே இருக்கின்றன.டாக்டர் அன்புமணி அவர்களே, தயவுசெய்து அந்த வழக்குகளை திரும்பப் பெறச் சொல்லுங்கள். குஷ்புவிடம் அவர்களை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள். கருத்து ரீதியாக, நீங்களும் குஷ்புவும் ஓரணியில்தான் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் கட்சியினர் உணரட்டும். ஒரு சமூகத்தில் சிகரெட், மது முதலியவை மட்டுமல்ல, பண்பாடு என்ற பெயரில் பிற்போக்கான மனநிலையில் இருப்பதும் ஒரு போதைதான். எல்லா போதைகளிலிருந்தும் சமூகத்தை மீட்கும் சக்தியும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நீங்கள் செய்யும்போதெல்லாம் என்னைப் போன்றவர்கள் நிச்சயம் உங்களை ஆதரிப்போம்..


இந்த வாரப் பூச்செண்டு


இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்கள் மீது குண்டு வீசி நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்திய அரசைத் தலையிட வைக்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து மக்களையே பிரதமருக்கு தந்தி அனுப்பும்படி சொல்லி விட்டதற்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.பூ.


இந்த வாரப் பரிதாபம்


மின்சாரத் தட்டுப் பாட்டால் தேர்தலில் தோல்வி ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. இதை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை & அமைச்சர் ஆற்காடு வீராசாமி.




இந்த வாரக் குட்டு


129 பூச்செண்டுகளுடன் நாங்கள் காத்திருந்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல், பெரியார் எழுத்தையும் கருத்தையும் நாட்டுடைமையாக்கத் தவறிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு 129 குட்டுகள்.

நன்றி குமுதம்

குமுதம் நச் கார்ட்டூன் 09.10.08

நன்றி குமுதம்

மதுரை அரசியல்-- தடுமாரும் திமுக -- சோலை ரிப்போர்ட்டர்

தி.மு.கழக அரசியல் இன்றைக்கு மதுரையில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியின் கம்பிவடங்களை அறுத்தல், அந்தத் தொலைக்காட்சி வெளியிடும் திரைப்படங்களுக்கு இடையூறு என்ற போக்குக்காக முன்னணியில் நிற்பவர்களைப் பார்த்து மதுரை மக்கள் முகம் சுளிக்கிறார்கள். அதன் எதிரொலி தென் மாவட்டம் முழுக்கக் கேட்கிறது.இந்தப் பிரச்னை எங்கிருந்து ஆரம்பமானது? எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தயாநிதி மாறனை தி.மு.கழகம் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தியது. வெற்றி பெற்றார். அவருடைய தந்தை முரசொலி மாறன் டெல்லி அரசியலில் பயிற்சி பெற்றவர். பக்குவப்பட்டவர். அதேபோல் தயாநிதி மாறன் தயாராவதற்கு அவருக்குக் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஹெலிகாப்டரில் ஏற்றி கோபுரத்தின் உச்சியில் குந்த வைத்தனர். மத்திய அமைச்சரானார்.

அந்தக் கோபுரத்தின் உச்சியை இன்னும் ஸ்டாலினே தொடவில்லை. ஏணிப் படிகளில் அவர் ஏறிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படியிலும் கால் வைப்பதற்குள் அவர் சந்திக்கும் சோதனைகள் எத்தனை? வேதனைகள் எத்தனை? மிசா சிறை என்றால் சாதாரணமானதா?ஆனால், அந்தத் தனியார் தொலைக்காட்சியும் அதன் நாளேடும் அதற்குள் தயாநிதி மாறனுக்கு புகழ் சேர்க்க ஆரம்பித்தன. மத்தியில் வீற்றிருக்கும் தமிழக அமைச்சர்களில் யாருக்கு செல்வாக்கு என்று ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. தயாநிதி மாறனுக்குத் தான் ரொம்பச் செல்வாக்கு என்று அந்தக் கணிப்புச் சொன்னது.இந்தக் கருத்துக் கணிப்பு தி.மு.க. கூட்டணிக்கே வேட்டு வைப்பதாக இருந்தது. ஆனால், கோபுரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் ஆகாயத்தில் மாளிகை கட்டத் துடித்தனர். அதன் விளைவுதான் இத்தகைய கருத்துக்கணிப்புகளாகும். இதனை கலைஞரே கண்டித்தார்.

அதன் பின்னர், தி.மு.கழகத்தையே பாதிக்கும் இன்னொரு கருத்துக் கணிப்பை அந்தத் தொலைக்காட்சியும் நாளேடும் வெளியிட்டன. கலைஞரின் அரசியல் வாரிசை அவருடைய குடும்பத்திற்குள்ளேயே தேடின. அந்த வாரிசு ஸ்டாலின்தான் என்பது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டுவிட்ட சாசனம். ஆனாலும் கலைஞருக்கு வாரிசு யார் என்று அப்போது அந்தப் பிரசார சாதனங்கள் தேட வேண்டிய தேவை இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என்று கலைஞர் இருமுறை கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வந்தன. ஆனாலும் அந்தக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.`தி.மு.கழகத்தில் கனிமொழிக்கும் அழகிரிக்கும் செல்வாக்கு இல்லை' என்று அந்தக் கணிப்பு அவர்களை அப்புறப்படுத்தியது. அப்படி ஸ்டாலினை அவசரப்பட்டு அகற்றிவிட முடியாது. ஆகவே, ஸ்டாலினுக்கு அடுத்து தயாநிதி மாறன் என்று அக்னி அம்பை அந்த ஊடகங்கள் எய்தன. இன்னும் சில மாதங்கள் சென்றிருந்தால் கலைஞருக்கு வாரிசு தயாநிதி மாறன்தான் என்று அந்தக் கருத்துக் கணக்காளர்கள் கணக்குப் பண்ணிச் சொல்லியிருப்பார்கள்.கருத்துக் கணிப்புக்கள் ஓர் அரசியல்வாதியை உயர்த்த முடியாது. மக்கள் மன்றமும் தொண்டும் தான் தீர்மானிக்கும். ஆனால், அந்தத் தொலைக்காட்சியும் நாளேடும் தயாநிதி மாறனை பறக்கும் கம்பளத்தில் ஏற்றிவிட்டன.அவரை முன்னிலைப்படுத்தும் பிரசாரங்களே நடைபெற்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல் எப்போதாவது ஸ்டாலின் செய்தி இரண்டொரு விநாடிகள் தலைகாட்டும்.
தி.மு.க.வின் நலனைக் கருதியிருந்தால் நேரம் கெட்ட நேரத்தில் கலைஞரின் வாரிசைத் தேடியிருக்க மாட்டார்கள்.முரசொலி மாறன் அரசியல்ரீதியாக வளர்ந்தார். ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் தி.மு.க. பின்புலத்தில் வர்த்தக ரீதியாக வளர்ந்தவர்கள்.

அந்தத் தொலைக்காட்சிக் குழுமத்தின் குறிக்கோள் தெளிவானது. அரசியல் உலகம் அமைதியாகயிருந்தாலும் உணர்ச்சிகளுக்குத் தீனி போடும் செய்திகளை வெளியிட்டு, தன்னை வளர்த்துக் கொள்ளும். காரணம், அந்த நிறுவனம் வர்த்தக ரீதியான அமைப்பு. இன்றைக்குப் பல்வேறு தொழில்களும் இணைந்த `கார்ப்பரேட்' (குழுமம்) நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அதனால்தான் கலைஞர் சொன்ன எத்தனையோ அறிவுரைகளை அவர்கள் ஏற்க மறுத்தார்கள். அவர்களுடைய வார ஏட்டில் கலைஞரின் படம் கூட வராமல் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தனர்.எனவே, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை நீக்கும்படி தி.மு.கழகம் கோரியது நியாயம்தான். இல்லையெனில், காலப்போக்கில் தி.மு.கழகமே அந்த கார்ப்பரேட் கம்பெனியின் ஒரு பிரிவாக ஆக்கப்பட்டிருக்கும். இணங்கி வரவில்லையென்றால், அதனை அழிப்பதற்கான காரியங்களைச் செய்திருக்கும். மதுரையில் நடைபெறும் சில சம்பவங்கள் இப்பொழுதே அந்த இரண்டாவது வேலையைச் செய்யும்படி அந்த நிறுவனத்தை ஆத்திரமூட்டிக் கொண்டிருக்கிறது.அந்தத் தொலைக்காட்சிக் குழுமத்தின் ஆக்கிரமிப்பு விபத்திலிருந்து தப்பிய தி.மு.கழகம், இப்போது மதுரையில் இன்னொரு விபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.அந்தத் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்புகளுக்கு நியாயமான தண்டனையாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்தது. இனி தொடர்ந்து அவர் தி.மு.கழகத்தில் நீடிப்பதற்கான வழிவகைகளைக் காண வேண்டும். இல்லையேல், வேறு வழியைத் தேட வேண்டும்.



ஆனால், அவர் முடிவெடுப்பதற்கு முன்பாக, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அந்தக் காரியங்கள் அரசிற்கு நல்ல பெயரைத் தேடித் தரவில்லை. தனி நபர்களின் செயல்பாடுகளால் அரசுதான் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. அந்தக் காரியங்களுக்கு என்ன விளக்கம் தந்தாலும் அதனை ஏற்கின்ற மனநிலையில் மக்கள் இல்லை. ஒதுங்கிப் போகின்ற புலியைச் சீண்டிக்கொண்டே இருந்தால் சீறத்தானே செய்யும்?செல்வி ஜெயலலிதாவின் தேனி பொதுக்கூட்டம், விஜயகாந்தின் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை அந்தத் தொலைக்காட்சி தொடர்ந்து நேரடி ஒளிபரப்புச் செய்கிறது. அதன் மூலம் அது தனது வர்த்தக நலன்களைப் பாதுகாத்துக் கொள்கிறது. அத்துடன், மதுரையில் தொடர்ந்து தங்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்கு அந்தத் தலைவர்கள் தங்களுக்குத் துணை நிற்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறது.இப்படித் தனிநபர்களின் செயல்பாடுகள் தி.மு.கழகத்திற்கு வலுவான எதிரிகளை உருவாக்கித் தருகிறது. அண்மையில் அந்தத் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடங்கல்கள் ஏற்பட்டன. அந்தத் தடைகள் தொடர்ந்தால் `அந்தப் படத்தைத் திரையிடு' என்று ஆர்ப்பாட்டம் செய்ய எதிர்க்கட்சியினர் அணி சேரத் தயாராயின.மதுரையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சி அதற்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் அணிதிரளச் செய்யும். அதற்கான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.தணிக்கை செய்யப்பட்ட எந்தத் திரைப்படத்தையும் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் காலத்தோடு செய்த அறிவிப்பு, அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இரண்டு வாரகாலம் தடைப்பட்டது. அதனையும் முதல்வர் தலையிட்டு நீக்கினார்.

எதிர்முகாமை மறந்து தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மோதிக் கொண்டேயிருந்தால் அது எதிர்முகாமை எளிதாகப் பலப்படுத்தும்.

நன்றி ரிப்போர்ட்டர்.

Sunday, October 5, 2008

உத்தப்புரம் -- கலவரபுரம்

தீண்டாமைச் சுவரை' அகற்றிய பிறகு உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறது என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது, கோயில் சுவருக்கு வெள்ளையடிக்கும் சாதாரண விஷயத்தில் இரு சாதியினரிடையே பிரச்னை வெடித்து வெடிகுண்டு, வீச்சரிவாள் என சகல ஆயுதங்களோடு ரணகளப்பட்டுக் கிடக்கிறது அந்த கிராமம். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு வெடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைக்கு போலீஸ் வளையத்தினுள் இருக்கிறது உத்தபுரம்.




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது உத்தபுரம் கிராமம். இங்கு தலித், மூப்பர், தேவர், பிள்ளைமார், நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சாதியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடும்பத்தினர் வாழ்கிறார்கள். இதில் தலித்துகள்தான் மெஜாரிட்டி. அடுத்து பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்தே உத்தபுரத்தில் கலவரமும் தொடர்கதையாக இருந்திருக்கிறது. 1948, 1964 ஆகிய ஆண்டுகளில் அங்கு சாதிக் கலவரம் நடந்திருக்கிறது. என்றாலும் உச்சகட்டமாக 1989-ம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தில் தான் சுமார் எட்டுப் பேர் இறந்து போனார்கள். அப்போது போலீஸ் துப்பாக்கி சூடும் நடத்தியிருக்கிறதுஇதையடுத்துத்தான் தலித்துகளையும் மற்ற சாதியினரையும் பிரிக்கும் தடுப்புச்சுவர் கட்டப் பட்டது. இதனால் தலித்துகள் தங்கள் இடத்திற்கு ஊரைச் சுற்றிக்கொண்டு போகவேண்டிய நிலை. தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருபது ஆண்டுகள் ஆன நிலையில், இந்தச் சுவரை `தீண்டாமைச்சுவர்' என சி.பி.எம். கட்சியினர் அடையாளம் காட்டினர். அதனைப் பார்வையிட சி.பி.எம். கட்சியின் அகில இந்திய செயலாளர் பிரகாஷ் காரத் வருகிறார் என்று அறிவித்தனர். உடனே உத்தபுரத்தைப் பரபரப்புப் பற்றிக்கொண்டது.

இதனால் `அந்தச் சுவரை இடிக்கக்கூடாது' என்று பிள்ளைமார் சமூகத்தினர் ஊரை விட்டே வெளியேறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவரின் பதினைந்து அடி அகலத்தை உடைத்து தலித்துகளுக்குப் பாதை உருவாக்கியது மாவட்ட நிர்வாகம். மலைக்குச் சென்ற பிள்ளைமார் சமுதாயத்தினர் பல்வேறு தரப்பினரின் சமாதானத்துக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பினர். ஆனாலும் இருதரப்பினரின் பகை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கிடந்தது. இது அக்டோபர் முதல் தேதி மதியம் வெடித்தது. உத்தபுரத்தில் உள்ள முத்தாலம்மன் மாரியம்மன் கோயிலுக்கு வரும் 9, 10-ம் நாட்களில் குடமுழுக்கு நடத்த பிள்ளைமார் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஒன்றாம் தேதி மதியம் கோயிலின் சுவருக்கு வர்ணம் பூசி வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த சிலர் அங்கு வந்து `இந்தச் சுவர் பொதுவான சுவர். எனவே நீங்கள் இந்தச் சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.இதனையடுத்து, இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதையடுத்து, அவர்கள் மோதலில் ஈடுபட்டார்கள். மோதலில் கற்களும் நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. ஜெலட்டின் குச்சிகளும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் வைத்து வீசப்பட்டன. அரிவாள், கம்பு ஆகியவற்றால் துரத்தித் துரத்தி ஒருவரையொருவர் தாக்கினர். இதனால் கலவரம் வெடித்தது.

தகவலறிந்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்ல எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கட்டுப்படவில்லை. கலவரக்காரர்கள் வீசிய கற்கள் போலீஸாரையும் பதம் பார்த்தது. போலீஸ் வாகனங்களும் நொறுங்கின. அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்குள் புகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் அங்கிருந்த பீரோ, டி.வி. களையும் சேதப்படுத்தினர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீஸார், கலவரத்தை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகப்படுத்தினர். இதன் பின்னர் கலவரக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தக் கலவரத்தில் மாணவன் அருள்முருகன் (வயது 16), வெள்ளைச்சாமி (வயது 60) உள்பட பதினைந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் கலவரக்காரர்களைப் பிடிக்க முயன்றபோது, தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்கள் கிராமத்தில் இருந்து ஓடி மலைப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.சம்பவத்துக்கு மறுநாள் காலையில் நாம் உத்தபுரம் சென்றிருந்தோம். ஊரே காலியாகியிருந்தது. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. உத்தபுரத்தில் நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். உத்தபுரம் வந்த காவல்துறை உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்து ஆலோசனை நடத்தினர். காலையிலேயே அங்கு வந்திருந்த மதுரை மாவட்ட எஸ்.பி. மனோகரிடம் பேசினோம்.. "நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.


கிராமத்தை நாம் சுற்றி வந்தபோது வயதானவர் ஒருவர் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப்பார்க்க, நாம் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.. தயங்கித் தயங்கிப் பேசினார்.. "மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து பாதை ஏற்படுத்தியதோடு சரி. அதன் பிறகு அதிகாரிகள் கிராமத்துப் பக்கம் வரவே இல்லை. அந்தப் பாதையை தலித்துகளும் மற்றவர்களும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் உறுதியாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. அதனால் பாதை ஏற்பட்டதில் இருந்து பிரச்னைதான். அந்தப் பாதையில் தலித்துகள் நடந்து மட்டுமே போகலாம். டிராக்டரில் போகக்கூடாது என பிள்ளைமார் சமூகத்தினர் சொன்னார்கள். இதனால் பெரிய தகராறும் ஏற்பட்டது. அதுபோல பிள்ளைமார் இடத்தை தலித்துகள் ஆக்கிரமிப்புச் செய்தது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு 178 பேர் மீது வழக்குப் பதிவு செய்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். கோயில் சுற்றுச் சுவர் யாருக்குச் சொந்தம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. அதனால்தான் இப்போது பிரச்னை வெடித்திருக்கிறது'' என்றார்.கிராமத்தில் வெடிகுண்டு வீச்சு, டெட்டனேட்டர் வீச்சு போன்றவை காவல்துறையையே கொஞ்சம் அதிர வைத்திருக்கிறது. இவை அருகிலுள்ள கிராமங்களில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்கிறார்கள். நடந்த கலவரத்தில் இரு தரப்பிலும் ஐநூற்று இருபது பேர் மீது வழக்குப் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நன்றி ரிப்போர்ட்டர்

நான் ஊருக்குப் போறேன்....அல்வா... சென்னை வலைப்பதிவர் சந்திப்பு

இன்றிலிருந்து 5 நாளைக்கு நான் லீவு ஊருக்குப் போக இருப்பதால்.பதிவு எழுத ஆரம்பித்து 3 மாதம் ஆகிறது. 37 பதிவு எழுதிவிட்டேன் சொல்றதைவிட காப்பி பேஸ்ட் செஞ்சேனு சொல்லலாம். 10பதிவு தான் நான் சொந்தமாக ?? யோசித்து எழுதியது!!!.இருந்தும் இதுவரைக்கும் 2,000பேர் பார்த்திருக்காங்க ரொம்ப நன்றி.ரொம்ப நல்லவங்களாஇருக்காங்க.


ஊருக்குப் போனால் எவ்வித தொந்தரவு கிடையாது அதாவது முக்கியமாக தொலைக்காட்சி பக்கம் போகமாட்டேன். எங்க ஊருக்குப் போனால் என்னுடைய கைபேசிக்கும் விடுதலை தானாகவே தொடர்பு எல்லைக்கு வெளியில் வந்துவிடும்.


நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்சாலே அல்வா வாங்கிட்டு வான்னு நண்பர்களிடம் இருந்து ஆரம்பித்து விடும். டேய் காசு கொடுங்கடா அப்படின்னா எல்லோரும் எஸ்கேப். நான் எஸ்கேப் ஆகிறதுக்கு பதில்' நான் திருநெல்வேலி போகமாட்டேன், தென்காசி வழியாபோவேன்டா' சொல்லி எஸ்கேப் ஆயிடுவேன். தென்கசியிலும் அல்வா நன்றாக இருக்கும். அதுவும் காசி விஸ்வநாதர் கொவில் சன்னதியில் உள்ள இரண்டு கடைகளிலும் நன்றாக இருக்கும். கடை பேர் மறந்துவிட்டது. திரும்ப சென்னைக்கு வந்து கொஞ்சமா அல்வாவை காண்பித்து எல்லோருக்கும் அல்வா கொடுத்துடுவேன்.


சென்னை வலைப்பதிவர் சந்திப்பு நன்றாக நடந்து முடிந்து விட்டதாக டோண்டு & தாமிரா எழுதியிருந்தாங்க  என்னால போக முடியலை. அடுத்தவாட்டி கண்டிப்பா கலந்துக்குவேன்.



என்னோட இன்னொரு வலைப்பாதிவையும் பாருங்கள்.

http://rajkanss.wordpress.com/

கருத்துரை இடுங்கள். என்னுடையய தவறுகளை சரிசெய்துகொள்கிறேன்.

Saturday, October 4, 2008

சன் டிவியால் கோடம்பாக்கத்துக்கு பிரச்சினை?

காதலில் விழுந்தேன்' படத்தைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறது, தமிழ்த் திரையுலகம். `சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்து, வெறும் விளம்பர ஜிகினாவை மட்டுமே வைத்து அதை பிரமாண்டமாய்க் காட்ட முடியும்' என்று சன் டி.வி. `புதுவழி' காட்டியிருப்பதால், சிறிய தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, பெரிய தயாரிப்பாளர்களும் பீதியில் மிரண்டு போயிருக்கிறார்கள்.




`காதலில் விழுந்தேன்' படத்தில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின் கிடையாது, பிரபல டைரக்டர், மியூசிக் டைரக்டர், கேமராமேன் என்று யாரும் கிடையாது. அதனால் அவர்களுக்குப் பெரிய சம்பளமும் கிடையாது. ஆனால் தொடர்ச்சியாக `சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்... காதலில் விழுந்தேன்' என்று அந்தப் படத்தின் விளம்பரத்தை சன் டி.வி.யில் திரும்பத் திரும்ப போட்டுப் போட்டு மக்களிடம் அதை ஏதோ பிரமாண்டமான படமாகச் சித்திரித்து விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.



``கைவசம் சேனல் இருப்பதால் இவர்கள் இந்தக் கலக்கு கலக்குகிறார்கள். சின்ன பட்ஜெட் படத்தை விளம்பர விளையாட்டால் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இதுபோன்ற அதீத விளம்பரம் மற்ற படங்களின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும்'' என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் `உச்' கொட்டினாலும், பூனைக்கு மணி கட்ட யாரும் தயாரில்லை என்பதுதான் ஆச்சரியம்.இதுகுறித்து நாம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சிலரிடம் பேச முயன்றபோது, `கருத்துச் சொல்கிறோம். ஆனால் பெயர் வேண்டாமே' என்று பயந்தனர் அவர்கள். இன்னொரு தரப்பினரோ `அப்படியா?' என்ற கேள்வியுடன் நம்மிடம் இருந்து நழுவிக் கொண்டனர்.



இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருந்து, தற்போது ஒதுங்கியிருக்கும் ஒரு தயாரிப்பாளர் இதுபற்றி நம்மிடம் வாயைத் திறந்தார்.

``விளம்பரங்களால் மட்டுமே ஒரு படம் ஓடி விடாது. கடந்த காலத்தில் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து தோல்வியடைந்த பெரிய படங்களும் உண்டு. உதாரணம் `ஆளவந்தான்', `பாபா' போன்ற படங்கள். என்றாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு `பெரிய' அளவில் விளம்பரம் தந்தால், அது மற்ற படங்களின் வசூலைக் கண்டிப்பாகப் பாதிக்கும்.`எத்தனை பெரிய படமாக இருந்தாலும் இவ்வளவுதான் விளம்பரம் செய்யலாம்' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு விதிமுறையே இருக்கிறது. அந்த விதியை மீறுபவர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி நடவடிக்கை எடுத்தால், எந்தத் தியேட்டரிலும் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போகும். ஆனால் `காதலில் விழுந்தேன்' படத்துக்காக இப்போது அதீத விளம்பரங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒளிபரப்புகிறது. அதற்காக அந்தப் படத்தின் மீதோ, சன் பிக்சர்ஸ் மீதோ இங்கே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

காரணம், கலைஞர் டி.வி.யுடன் உறவு வைத்திருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலருக்கு சன் டி.வி.யுடன் கள்ள உறவு உண்டு. அதை வைத்துக் கொண்டு அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்'' என்றார் அவர்.சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சிலரிடம் இதுபற்றி நாம் பேசினோம். ``ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் இருக்கு. ஆனால் அதை மீறி இந்தப் படம் அவர்களின் தயாரிப்பு என்பதால், ரசிகர்கள் இந்தப் படத்தை `ஆஹா ஓஹோ!' என்று கொண்டாடுவதாக சன் நியூஸிலும், தினகரன் பத்திரிகையிலும் செய்தி போடுகிறார்கள். `காதலில் விழுந்தேன்' படத்தைவிட அமர்க்களமாக எதிர்பார்க்கப்பட்டு முதல்நாள் நள்ளிரவிலேயே ரிலீஸ் செய்யப்பட்ட `சிவாஜி' படத்துக்கும், `தசாவதாரம்' படத்துக்கும் இவர்கள் இதே ஆர்வத்துடன் செய்தி போடவில்லையே? அது ஏன்?



ஆந்திராவில் இன்னும் சினிமாதான் பெரியண்ணன்; சின்னத்திரை அங்கே தம்பி. அங்கே சினிமாவின் கட்டுப்பாட்டில்தான் சின்னத்திரை இருக்கிறது. ஆனால் இங்கோ சின்னத்திரையின் கட்டுப்பாட்டுக்குள் சினிமா போய்விட்டது. ஆந்திராவில் சாட்டிலைட் டி.வி.க்கு தயாரிப்பாளர் சங்கம்தான் டிரெயிலர்களைக் கொடுக்கிறது. அந்த டிரெயிலர்களைக் கூட `டிரெயிலர் டைம்' என்று குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும்தான் ஒளிபரப்ப முடியும். அதில் சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், சின்ன ஹீரோ படம், பெரிய ஹீரோ படம் என்றெல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரி வாய்ப்புதான். ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளில் போட்டி போட்டுக் கொண்டு சினிமா விளம்பரம் தந்தே தயாரிப்பாளர்கள் பலர் அழிந்து போனார்கள். `நீ கால் பக்கம் விளம்பரம் தருகிறாயா? நான் அரைப்பக்கம் தருவேன்; நீ அரைப் பக்கமா? நான் முழுப்பக்கம்' என்று முட்டிமோதி தயாரிப்பாளர்கள் பலர் வீணாய்ப் போனதை அடுத்து, இதற்கென இங்கேயும் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் எந்த சைஸில் விளம்பரம் கொடுக்கலாம் என்றும், ரிலீஸானபின் எந்த சைஸுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் விதி உண்டு. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அது அந்தக் காலம்.



ஆனால் இப்போதோ டி.வி.சேனல்களில் அசுரத்தனமாக விளம்பரம் செய்யும் புதிய போக்கை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பித்து வைத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம் இங்கே யாருக்கும் இல்லை. காரணம், இங்கேயுள்ள டி.வி. சேனல்கள் அனைத்தும் அரசியல் சார்புடன் இயங்குகின்றன. அது மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் தங்களது அடுத்த படத்தை அதே சேனல்களிடம் விற்க வேண்டிய நிலை இருக்கிறது. அது மட்டுமல்ல. இங்குள்ள தயாரிப்பாளர்கள் சிலரும் `இப்படி சின்ன பட்ஜெட் படம் எடுத்து விளம்பரத்தை வைத்தே படத்தை ஓட்டி விடலாம்' என்ற கனவில் இருக்கிறார்கள்.உதாரணமாக, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் ராம நாராயணன், `ராஜநாகம்', `பச்சைமனிதன்' ஆகிய இரண்டு படங்களை சின்ன பட்ஜெட்டில் தயாரித்து, இதேபோல் விளம்பரத்தை நம்பி பிஸினஸ் செய்தார். அவர் எப்படி சன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?'' என்று நம்மிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டார்கள் அவர்கள்.இதுபற்றி ராம நாராயணனிடம் நாம் கருத்துக் கேட்டபோது அவர், ``இந்தப் பிரச்னை குறித்து இதுவரை தயாரிப்பாளர்கள் யாரும் என்னிடம் புகார் தரவில்லை. அப்படித் தந்தால் செயற்குழுவைக் கூட்டி பேசி முடிவெடுப்போம். தமிழ்த்திரையுலகுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள சீரியஸான பிரச்னை இது. உங்கள் செய்தி நிச்சயம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். அதோடு இதில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என்றும் நம்புகிறேன்'' என்றார் சுருக்கமாக.



இதையடுத்து இந்தப் பிரச்னை குறித்து சன் நிர்வாகத்திடம் நாம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள், ``இங்கே சினிமாப் படங்களுக்கு பத்திரிகைகளில் தரும் விளம்பரத்திற்கு மட்டுமே சில கட்டுப்பாடுகள் உள்ளன. சேனல்களில் விளம்பரம் தருவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவிதமான விதிமுறைகளையும் வகுக்கவில்லை. இருந்தும்கூட எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு சினிமாவுக்கு எங்கள் சேனல்களில் ஒரு குறிப்பிட்ட வரைமுறைகளைக் கடைப்பிடித்துத்தான் விளம்பரம் செய்கிறோம். மேலும், இதே படத்தைப் பற்றி மற்ற சேனல்களில் விளம்பரம் வராத நிலையில் எங்கள் சேனல்களில் வரும் விளம்பரம் சிலரது கண்ணுக்கு உறுத்தலைத் தந்தால் அது எங்கள் பொறுப்பல்ல'' என்றனர் அவர்கள்.நாய் வாலை ஆட்டிய காலம் போய், வால் இப்போது நாயை ஆட்ட ஆரம்பித்த கதையாக, சின்னத்திரை சினிமாத்திரை மீது குதிரையேறி விடக்கூடாது என்பதுதான் கோடம்பாக்கத்தினரின் இப்போதைய குமுறல். கூடவே பம்மாத்து விளம்பரங்களைக் காட்டி பலவீனமான படங்கைளக் கூட வெற்றிப்படங்களாகச் சித்திரித்து மற்ற படங்களை யாரும் மண் கவ்வ வைத்துவிடக் கூடாது' என்கிறார்கள் அவர்கள். நியாயம்தானே? ஸீ



தகிடுதத்த தரவரிசை!

அந்த `இரண்டெழுத்து' டி.வி. ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரு படத்தின் ஒளிபரப்பு உரிமை அந்த டி.வி. நிறுவனத்துக்குக் கிடைத்து விட்டால், அதன் தரவரிசைப் பட்டியலில் அந்தப்படம் தாறுமாறாக மேலேறி வந்துவிடும். படத்தின் ஒளிபரப்பு உரிமை கிடைக்கவில்லையா? அதலபாதாளத்துக்கு அந்தப் படம் போய்ச் சேர்ந்து விடும்.அண்மையில் `தாம் தூம்' படத்தை அந்த டி.வி.சேனல் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றது. பேரம் படியவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இன்னொரு டி.வி. `தாம் தூம்' படத்தைத் தட்டிச் சென்று விட்டது. எரிச்சலின் உச்சத்துக்குப்போன அந்த இரண்டெழுத்து டி.வி. அதன் தரவரிசைப் பட்டியலில் `தாம் தூமை' பின்னுக்குத் தள்ளியது. அந்தப் படத்தின் பாடல்களை தன் மியூசிக் சேனலில் போட மறுத்தது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? `நான் நினைத்தால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒழித்துக் கட்டி விடுவேன். நான் குறைந்த விலைக்குப் படத்தைக் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்' என்பதுதான்! தயாரிப்பாளர்களுக்கு அந்த டி.வி.சேனல் இப்படியொரு மறைமுக மிரட்டல் விடுத்தும் கூட அதையெல்லாம் மீறி `தாம் தூம்' படம் பேசப்பட்டது ஓர் ஆச்சரியம்.
அதுபோல அந்த டி.வி.சேனல் எந்த அடிப்படையில் படங்கள் வரிசைப்படுத்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த விளக்கமும் தந்தது இல்லை. அதைப் பற்றிக் கேள்வி கேட்கவும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு `தில்' இல்லை. காரணம், தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு `தரவரிசையில்' ஆப்பு வைத்துவிடுவார்கள் என்ற பயம்தான்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Friday, October 3, 2008

மதுரை--- பயோடேட்டா&விஜயகாந்த் + பிஜேபியின் நிலைமை


நன்றி. குமுதம்.காம்

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- குமுதம்




மாறன் பிரதர்சுக்கு:


உங்க சன்.டி.வி. தயாரிச்ச நாக்கமூக்கா நான்சென்ஸை மதுரையில ரிலீசாக வுடாம, உங்க பங்காளி அழகிரி மிரட்டித் தடுத்துட்டாருன்னு புலம்பிகிட்டே இருக்கீங்களே. அவுரு அப்பிடி செஞ்சிருந்தார்னா அது எப்பிடி தப்பாவும்? குடும்பக் கலாசாரத்தைத்தானே அவரும் பின்பற்றினதா அர்த்தம்?உங்கப்பா சொன்னதைக் கேக்காம, எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு உங்க தாத்தா துரத்தினாரே, அந்த 1972 சமயத்துல, `உலகம் சுற்றும் வாலிபன்'னு ஒரு படத்தை எம்.ஜி. ஆர் எடுத்து வுட்டாரு. அப்பலாம் நீங்க ஸ்கூல்ல இருந்திருப்பீங்க. ஸ்டாலின் மாணவர் அணியில இருந்தார். அழகிரி என்ன பண்ணிகிட்டிருந்தார்னு தெரியல. உங்க தாத்தாவோட பல கைத்தடிகள்ல ஒருத்தர் மதுரை முத்து. அவுரு மதுரையில படம் ரிலீசானா நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால்லாம் விட்டாரு. தமிழ்நாடு பூரா படத்துக்கு போஸ்டர் ஒட்ட விடல; பல தியேட்டர்காரங்களையும் விநியோகஸ்தர்களையும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாதுன்னு உங்க தாத்தா ஆளுங்க மிரட்டிக் கெடுபிடிசெய்யறாங்கனு, அவரோட 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆர் அப்ப குற்றஞ்சாட்டினாரு. ஆனா அவர் படம் ரிலீசாகி ஓஹோன்னு எல்லா ஊர்லயும் ஓடிச்சு.அழகிரியும் மதுரை முத்து இல்ல; நீங்களும் எம்.ஜி.ஆர்.இல்ல. அதான் இப்ப உங்க பிரச்னை. தம்பி தயாநிதி மத்திய மந்திரியா இருந்தப்ப, ராஜ் டி.வி.யில செய்தி ஒளிபரப்பக் கூடாதுன்னு அவர் இலாகாதானே நிறுத்திச்சு? காரணம் கேட்டப்ப, சில லட்ச ரூபா பெறுமானம் உடைய லைசன்ஸ் தொகையை அந்த டி.வி. தாமதமா கட்டினாங்க; அதனால் லைசன்சே ரத்துன்னு சொல்லிட்டீங்க. அதே சமயத்துல அரசாங்கத்தை 500 கோடி ரூபாய் ஏமாத்தி, அதுக்காக கோர்ட்டுல 150 கோடி ரூபாய் அபராதம் கட்டற தண்டனை வாங்கின ரிலையன்ஸ் கம்பெனியோட செல்போன் லைசன்ஸை ரத்து பண்ணுவீங்களான்னு நிருபர்கள் கேட்டாங்க. இதுக்கெல்லாம் போய் லைசன்ஸை ரத்து செய்ய முடியாதுன்னு தம்பி சொன்னது ஞாபகம் இருக்குங்களா ?தேர்தல் முடிஞ்சப்பறமும் விஜய் டி.வி.யில `மக்கள் யார் பக்கம்` நிகழ்ச்சி வெற்றிகரமா நடந்துகிட்டிருந்தப்ப, ஸ்டார் டி.வி. அதிகாரிகளைக் கூப்பிட்டு, `ஒண்ணு இதை ஸ்டாப் பண்ணுங்க; இல்லாட்டி மொத்தமா ஸ்டாரையே மூடிடுவோம்னு' தம்பியோட அமைச்சகத்துலருந்து சொன்னதுயார்ன்னு ஞாபகம் இருக்குங்களா? அரசியல்ல இதெல்லாம் சகஜம் இல்லீங்களா? அதுவும் குடும்ப அரசியல்ல? அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ஒரு யோசனை சொல்றேன். மத்தவங்க எடுக்கற படத்தைலாம் சன் டி.வி. வாங்குது இல்லே? சன் டி.வி. எடுக்கற படத்தை மட்டும் ஜெயா டி.வி.க்கு வித்துடுங்க. அவங்க அதை, மதுரைக்கு மட்டும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வரவே முடியாத படத்தை டி.வி.யில காட்டி சாதனை பண்ணிடுவாங்க. அழகிரியால அதை நிறுத்த முடியாது இல்லீங்களா?



தபால் மந்திரி ராஜாவுக்கு:

இந்தத் தபால் உங்களுக்குக் கிடைக்கும்னு நம்பறேன். ஏன்னா இதை தபால் பெட்டியில போடல. நீங்க தகவல் தொழில்நுட்ப மந்திரி மட்டும் இல்ல. தபால் மந்திரியும்தான்னு ஞாபகம் வெச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.தபால் துறைக்கு புதுசா ஏதோ சின்னம் வரைஞ்சு இருக்காங்க போலிருக்கு. இப்பலாம் அரசியல் கட்சிக்கே சின்னம் சொந்தம் கெடையாதுன்னு தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் சொல்லிட்டாங்க. அந்த மாதிரி தபால் துறைக்கும் சொல்லிடப் போறாங்க. சட்டத் துறையிலே ஆலோசனை கேட்டு வெச்சுக்குங்க.ஏன்னா, இந்த சின்னம் மாத்தறதை பொது மக்களுக்குச் சொல்றதுக்காக கோடிக்கணக்கான ரூபா செலவு பண்ணியிருக்கீங்க போலிருக்குது. ஒருஇங்கிலிஷ் பேப்பர்ல பார்த்தேன். முதல்ல ஒரு அரைப் பக்கம். அப்பறம் இன்னொரு அரைப் பக்கம். அதுக்கப்பறம் ஒரு முழுப் பக்கம். எல்லாம் ஒரே நாள்ல. சின்னம் மாறிடுச்சுன்னு மட்டும் சொல்றதுக்கு இத்தினி வௌம்பரம். ஒரே பேப்பருக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமானம். இத்தினி செலவு பண்ணதுல, அதுல கலைஞர் போட்டோவை சேத்து போட்டிருக்கலாம். கூட மன்மோகன், சோனியா போட்டோவையும் குட்டியா வெச்சுட்டா யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே. தம்பிக்குக் கடிதம் எழுதறதுக்காக, உங்க டிபார்ட்மெண்ட்டை நம்பாம, தனியே அதுக்குன்னே ஒரு பத்திரிகையே நடத்தினவராச்சே தலைவரு. திரும்பியும் தபால் சின்னத்தை மாத்தணும்னா, அதை எங்களுக்கெல்லாம் சொல்லறதுக்கு மறுபடியும் கோடிக்கணக்குல செலவாகும். இப்பவே செலவு பண்ணின காசை திரும்ப எடுக்கறதுக்காக, எங்களை மாதிரி பதிப்பாளர்கள் தலையில கையை வெச்சுட்டீங்க.
இன்னிக்கு தமிழ் நாட்டுல நல்ல புத்தகம் போடறவங்கள்லாம் யாரை நம்பிப் போடறாங்க தெரியுமா? இங்கே இருக்கறவங்கள நம்பி இல்ல. இங்கே இருக்கறவங்க காசெல்லாம் டாஸ்மாக்குக்குத்தான் போவுது. வெளி நாட்டுல இருக்கற தமிழருங்க, குறிப்பா ஈழத்தமிழருங்கதான் நம்ம ஊர் புத்தகத்தைலாம் நிறைய வாங்கறாங்க. இனிமே அதுவும் கஷ்டம்தான்.`சுண்டைக்காய் கால் பணம். சுமைக்கூலி முக்கால் பணம்'னு நீங்க ஆக்கிட்டதுதான் காரணம். இதுவரைக்கும் விமானத் தபால்ல, அஞ்சு கிலோ எடைக்கு புக் பார்சல் அனுப்பினா 1175 ரூபா இருந்த கட்டணத்தை இப்ப 2360 ஆக்கீட்டீங்க. கப்பல் வழியா அனுப்பலாம். பாலு அண்ணன் சேதுக் கால்வாய் வெட்டிட்டார்னா, கப்பல் சார்ஜ்லாம் இன்னும் கொறையும்னு நம்பிகிட்டிருந்தோம். கப்பல் தபால் சார்ஜை, அஞ்சு கிலோ 175 ரூபாயிலருந்து 1100 ரூபாய் ஆக்கிட்டீங்க. இனிமே ஒரு தமிழ் புக்கும் வெளிநாட்டுலயும் விக்காது. கொஞ்சம் பாத்து ஏதாவது குறைங்க. இல்லாட்டி தலைவர் புக், கனிமொழி புக்,தமிழச்சி புக், சல்மா, இமயம் எழுதின புக்குலாம் கூட கடல் தாண்டாது. கட்சிக்காரங்க மடியிலயே கை வெச்சுடாதீங்க.



வடிவேலு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு:

வடிவேலு வீட்டுல தாக்குதல் செஞ்சவங்க விஜய்காந்த் ரசிகர்கள்னே வெச்சுகிட்டாலும், அதுக்காக விஜய்காந்த் மேல கொலை முயற்சி செஞ்சதா எப்பிடி எஃப்.ஐ.ஆர். போடமுடியும்னு கேட்டதுக்கு சூப்பரா ஒரு பதில் சொல்லியிருக்கீங்க.``தொண்டர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒரு தலைவருக்கு இருக்கிறது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்.கொள்கையே இல்லாத கட்சிகள் என்று எதுவுமே கிடையாது என்கிற நிலையில், தன் கட்சித் தொண்டர்களின் நடவடிக்கைக்கு நான் பொறுப்பில்லை என்று எந்தக் கட்சித்தலைவரும் நழுவமுடியாது'' அப்பிடின்னு நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.நிலப்பிரச்னையில அமைச்சர் என்.கே.பி.சாமி தன்னை போன்ல மிரட்டினாருன்னு ஒருத்தர் கோர்ட்டுல சொல்றாரு. அமைச்சர் வீட்டு போன்லருந்து கால் போனது நிஜம்தான். ஆன அப்ப அமைச்சர் வாக்கிங் போயிருந்தாருன்னு போலீஸ்ல பதில் சொல்றாங்க. உங்க வாதப்படி, தன் வீட்டு போன்லருந்து ஒருத்தருக்கு கால் போனா, அதுக்கு அமைச்சர்தானே பொறுப்பு ? அவர் மேல எஃப்.ஐ.ஆர். போடணும் இல்லீங்களா?மதுரை தினகரன் ஆபீஸ் முன்னால் போய் மறியல், கலாட்டா பண்ணவங்க எல்லாரும் தி.மு.க காரங்கதான். மறியலை நடத்தினவரு மேயர். அப்ப அவங்க செஞ்ச கலாட்டாவுல மூணு பேர் செத்துப் போனதுக்கு, எஃப்.ஐ.ஆர்ல தி.மு.க. தலைவர் கலைஞர் பேரைச் சேர்க்கணும் இல்லீங்களா, செந்தூர் பாண்டியன்? எதிர்ப்பு தெரிவிச்சவங்க என்னத்தை எதிர்த்தாங்க ? அழகிரியை அவமானப்படுத்தற மாதிரி ஒரு கருத்துக் கணிப்பு பேப்பர்ல போட்டதைத்தானே? அவங்க எல்லாரும் அழகிரி ரசிகர்கள்தானே, சாரி, தொண்டர்கள்தானே? அப்ப, அவங்க செஞ்ச போராட்டத்துல என்ன நடந்திருந்தாலும், அந்த எஃப்.ஐ.ஆர்ல அழகிரி பேரையும் சேக்கணும் இல்லீங்களா?உங்களை மாதிரி நாலு வக்கீல், இல்லீங்க நீர் ஒருவரே போதும்.. இப்பிடிசேம் சைட் கோல் அடிக்கறதுக்கு... (தருமி நாகேஷ் குரல்ல வாசிச்சுக்குங்க..) என்ன சொல்றீங்க?



தோழர்கள் வரதராஜன், தா.பாண்டியன் ஆகியோருக்கு:

ஒரு வழியா தமிழ்நாட்டுலயும் மூன்றாவது அணி தேவைப்படுதுன்னு நீங்க ஏத்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு........ன்னு சொல்லலாம்னு பார்த்தா, நீங்க சொல்ற மூணாவது அணி வேற ஏதோ போல இருக்குது.டெல்லியில காங்கிரஸ் ஒரு அணி. பி.ஜே.பி ஒரு அணி.ரெண்டு பேர் கொள்கையும் வேணாம்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு சொல்றீங்க. அது புரியுது. தமிழ் நாட்டுல தி.மு.க. ஒரு அணி. அ.தி.மு.க. ஒரு அணி. ரெண்டு பேரும் ஒ.கு.ஊ.மட்டைன்னு சொல்றவங்கள்லாம் சேர்ந்து மூணாவது அணின்னு நான் நினைச்சுகிட்டிருந்தேன்.அதைத்தான் தாலாட்டி, சோறு ஊட்டி, வளர்த்து, ஆளாக்கற பெரும்பொறுப்பை இந்த வயசான காலத்துல நீங்க ரெண்டு பேரும் எடுத்துசுமக்கப் போறீங்கன்னு நினைச்சேன்.ஆனா, அப்பிடி இல்ல போலிருக்குதே. பா.ம.க., தே.மு.தி.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. எல்லாரும் உங்க கூட ஓரணியில வரணும்னு தா.பா. சொல்லியிருக்காரே. அதாவது காங்கிரஸ், பி.ஜே.பி.க்கு மட்டும் தாழ்ப்பா. மீதி பேர் திறந்த வூட்டுல யார் வேணாலும் நுழையலாம்கற மாதிரி அர்த்தம் இல்லீங்களா காம்ரேட்ஸ்?அதாவது டெல்லியில இருக்கற மாதிரியே இங்கேயும் மூன்றாவது அணி - காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத அணி. தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத அணின்னு நான்தான் தப்பா அர்த்தம் எடுத்துட்டேன் போல... அந்த அணியை தோழர் விஜய்காந்த்துதான் உருவாக்க முயற்சிக்கிறார் போல.. நீங்க இல்ல.அப்பிடியே இருக்கட்டும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.காங்கிரசை வுட்டு நீங்க ஏன் வந்தீங்க? அமெரிக்காகூட அணு ஒப்பந்தம் போட்டு தேசத்தையே அடகு வெக்கறாங்கன்னுதானே? அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கறவங்கதானே பா.ம.க.? விஜய்காந்த்.? அவங்க கூட மட்டும் எப்பிடி சேருவீங்க? அதுக்கு பேசாம காங்கிரஸ் கூடவே இருந்துட்டுப் போயிடலாமே? அணு ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆதரிக்கறதும், அதைக் கொண்டு வர்ற காங்கிரஸ் ஆட்சி கவிழாம காங்கிரசை பா.ம.க. ஆதரிக்கறதும் வெவ்வேறான இயங்கியல் முரண் தன்மையுள்ளவைங்கறதைப் பத்தி மார்க்ஸ் ஏதாவது சொல்லியிருக்காரா?.


இந்த வாரப் பூச்செண்டு

தங்கள் துக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இறந்த உறவினரின் உடல் உறுப்புகளை உயிரோடு இருக்கும் பலருக்குப் பயன்படும் வகையில் அளித்த திருக்கழுக்குன்றம் ஹிதேந்திரனின் பெற்றோருக்கும், கார்ட்டூனிஸ்ட் மதனுடைய சகோதரர் முரளியின் குடும்பத்தினருக்கும், அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை விரைந்து சென்று அளிக்க உதவிய தமிழக காவல் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் இ.வா.பூ.



இந்த வாரக் குட்டு

எனக்கும் வாசகர்களுக்கும். சென்ற இதழ் கட்டுரையில் டாலர்களை ரூபாய்க் கணக்கில் எழுதும்போது, மில்லியன் டாலர் கணக்கிலேயே பில்லியன்களையும் தவறாக மாற்றி எழுதியதற்காக எனக்கும், இந்தத் தவறைக் கண்டித்து எழுதத் தவறியதற்காக வாசகர்களுக்கும் இ.வா.குட்டு. மில்லியன் என்பது 10 லட்சம். பில்லியன் என்பது 1000 மில்லியன் அதாவது 100 கோடி.


இந்த வாரச் சிரிப்பு

"இந்திய மக்கள் எல்லாரும் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள்." - அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.



குடும்பத்தினருக்கு அறிவுரை ?

"அளவுக்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பது அழிவைத்தான் ஏற்படுத்தும்." - கலைஞர் கருணாநிதி.