Tuesday, December 30, 2008

குடும்பமே கழகம்-- கழகமே>>>>>>>>>>.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நன்றி குமுதம்..காம்

Monday, December 29, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- மும்பை மேரி ஜான்.....

ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் மூன்று காரணங்களுக்காக மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆசை வந்து போகும்.



ஒரு காரணம் சினிமா. இரண்டாவது காரணம் நாடகம். மூன்றாவது ஆட்டோ. சென்னையில் 200 ரூபாய் கொடுக்கும் தொலைவுகளுக்கு மும்பையில் 70 ரூபாய்தான் ஆட்டோ கட்டணம். சென்னையில் 20 ரூபாய் வாங்கும் இடத்துக்கு அங்கே ஒன்பது ரூபாய். நானும் எனக்குத் தெரிந்த பல ஆட்டோ டிரைவர் தோழர்களையும் யூனியன் நண்பர்களையும் என் செலவில் மும்பை வந்து, இங்கே மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது, சென்னையில் இது சாத்தியமாக விடாமல் தடுக்கும் அம்சங்கள் என்ன என்பதை ஆராயும்படி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டேன்.


ஹிந்தி சினிமாவில் அரிவாள், துப்பாக்கி, வெட்டு குத்து, பழி வாங்கல் ஃபார்முலாவுக்கு டாப் ஹீரோக்கள் விடை கொடுத்துவிட்டார்கள். தமிழ் இயக்குநர் முருகதாசும் தெலுங்குத் தயாரிப்பாளர்களும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் ஹிந்திப் படமான `கஜினி' ஒரு விதிவிலக்கு.



அதில் கூட ஹீரோ அமீர்கான், இது என் பாணிப் படமல்ல என்று பேட்டிகளில் எச்சரிக்கையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். படத்தின் கடைசிக் காட்சி தமிழைப் போல வன்முறையில் முடியக்கூடாது என்று மாற்றியமைத்திருக்கிறார். வன்முறையில்லாத கிறிஸ்துமஸைக் கொண்டாடுங்கள் என்று அக்ஷய் குமார் குரல் கொடுத்திருக்கும் அனிமேஷன் படமான ஜம்போ விளம்பரத்தில் கஜினியை மறைமுகமாக கிண்டலடித்திருக்கிறார்கள்.


அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய், அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் என்று அத்தனை ஹீரோக்களும் ரொமான்ஸ், காமெடி, திக்கான கதைப்படங்கள், வன்முறையில்லாத த்ரில்லர்கள் என்று இறங்கி ஏழெட்டு வருடங்களாகின்றன. தமிழிலோ பிரசன்னா, நரேன், ஷ்ரீகாந்த் போன்றவர்கள் கூட அரை டிராயர், லுங்கி, அரிவாளுடன் கதை சொல்லும்படி புது இயக்குநர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்களாம்.தஸ்விதான்யா என்று ஒரு படம் பார்த்தேன். லோ பட்ஜெட் படம். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் இதுவும் லாபகரமாகவே ஓடியிருக்கிறது. கதாநாயகன் வினய் பதக், பெரிய படங்களில் ஹீரோவின் நண்பன் வேடங்களில் வரக்கூடிய குணச்சித்திர நடிகர்.



தனியார் அலுவலக ஊழியர் பாத்திரம். 35 வயதாகியும் திருமணம் செய்யாமல், காது கேட்காத அம்மாவைப் பார்த்துக் கொண்டு விஸ்வாசமாக ஆபீஸுக்கு உழைக்கும் பாத்திரம். குடல் புற்று நோயால் இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்துவிடுவோம் என்பது தெரிந்ததும், பத்து ஆசைகளைப் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொள்வதுதான் கதை. சிவப்பு கார் வாங்குவது, வெளி நாடு செல்வது, பள்ளியில் தனக்குப் பிடித்த வகுப்புத் தோழியை தேடிப் பிடித்து சந்திப்பது போன்ற பத்து ஆசைகள். நகைச்சுவையும் மெல்லிய சோகமும் கலந்து இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் படம்.


பார்த்த இன்னொரு படம் மகாரதி. குஜராத்தி மொழியில் 21 வருடங்களாக மேடை நாடகமாக நடிகர் பரேஷ் ரவால் நடத்தி வந்த நாடகம் படமாகியிருக்கிறது. தன் சொத்துக்கு ஆசைப்படும் இளம் மனைவியை எரிச்சலூட்டுவதற்காக குடிகார பணக்காரக் கணவன், தான் தற்கொலை செய்துகொண்டால் அவளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்று மிரட்டுகிறான். தன் தற்கொலையை கொலை என்று நிரூபித்து பணத்தை அடையும்படி சொல்லிவிட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு செத்துப் போகிறான். பணத்துக்காக அவளும் ஒரு குட்டித் திருடனும், வக்கீலும் போடும் திட்டங்கள், முடிவில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் எல்லாம்தான் படம். நசிரூதீன் ஷா, ஓம் பூரி, போமன் இரானி, பரேஷ் ரவால் என்று திறமையான நடிகர்களின் நடிப்புதான் படத்தின் சிறப்பு


ஹிந்தி சினிமாவில் இப்படி வித்தியாசமான முயற்சிகள் சிறிய பட்ஜெட்டில் சகஜமாக நடக்கின்றன. இன்னொரு பக்கம் அபிஷேக், ஜான் ஆப்ரஹாம் போன்ற ஹீரோக்கள் கூட தயக்கம் இல்லாமல் ஹோமோசெக்ஷுவல் பாத்திரங்களில் `தோஸ்தானா' போன்ற படங்களில் நடிக்கிறார்கள்.



தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சூழலே இல்லை.


ஒரு வித்தியாசமான முயற்சி இங்கே எவ்வளவு கடினமானது என்பதற்கு சென்ற வருடம் இதே டிசம்பர் மாதம் நான் பிரமிட் சாய்மீரா நிறுவன உதவியுடன் ஆரம்பித்த ஒற்றை ரீல் இயக்க அனுபவமே ஓர் உதாரணம். நல்ல சிறுகதைகள், வித்தியாசமான முயற்சிகள், புதிய திறமைசாலிகள் ஆகியோரை அறிமுகப்படுத்தி வளர்ப்பதே இதன் நோக்கம். படத்தின் நீளம் ஒரே ரீல். அதாவது பத்து நிமிடம். மெயின் படம் ஆரம்பிப்பதற்கு முன்பு தியேட்டரில் இதை இலவசமாகப் போட்டுக் காண்பிப்பதே திட்டம்.

எழுத்தாளர் திலீப்குமாரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இரண்டே பாத்திரங்கள் கொண்ட ஒரு படத்தை உருவாக்கினேன். நடிகை ரோஹிணியும் எங்கள் நாடகக்குழு நடிகர் நீல்சன்னும் நடித்த `திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்?' என்ற இந்த முதல் படத்தை கடந்த டிசம்பரில் 40 அரங்குகளில் பிரமிட் சாய்மீரா திரையிட்டது. லூமியர் பிரதர்ஸ் முதல் சினிமாவைக் காட்டிய அதே நாளில், 40 ஊர்களில் 40 தமிழ் எழுத்தாளர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள். அஜீத் நடித்த `பில்லா' படத்துக்கு முன்பாக காட்டப்பட்ட படம் இரு மாதங்கள் அரங்குகளில் இருந்து பெருமளவு வரவேற்பு பெற்றது.


மொத்தமாக நான் ஆறு படங்கள் செய்வதாக திட்டம். புது திறமையாளர்கள் அனுப்பும் விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்து மேலும் ஆறு படங்களை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். சுமார் 80 பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் நடிகை ரோஹிணியின் ஸ்க்ரிப்ட் உட்பட 10 கதைகள் தயாரிப்புக்குத் தகுதியானவையாக இருந்தன.



முதல் பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் இப்படிப்பட்ட முயற்சிகளில் தான் இலவசமாகக் கூட நடித்துத் தரத் தயார் என்று அறிவித்தார். அடுத்த படத்துக்கே அவரைக் கேட்டேன். (இலவசமாக அல்ல. டோக்கன் சம்பளத்துக்குத்தான்.) எழுத்தாளர் அன்பாதவன் எழுதிய சிறுகதை. சத்யராஜுக்கு மிகவும் பிடித்திருந்தது. உடை அளவு எல்லாம் எடுத்தாகிவிட்டது. இன்னும் இரு தினங்களில் படப்பிடிப்பு. சத்யராஜ் விலகிக் கொண்டார். காரணம், அவருடைய அடுத்த இரு படத் தயாரிப்பாளர்கள், ஒற்றை ரீலில் அவர் நடித்தால் அவர் மார்க்கெட் அடிபடும் என்று பயப்படு(த்து)கிறார்களாம்.


நிச்சயித்த படப்பிடிப்பு தினத்தன்று, நண்பர் நடிகர் தலைவாசல் விஜய் அந்தப் பாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். `உள்ளேன் அய்யா' என்ற அந்தப் படம் முடிந்து தணிக்கையெல்லாம் ஆகி பத்து மாதங்களாகிவிட்டன. இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. காரணம், பிரமிட் சாய்மீராவின் மார்க்கெட்டிங் டிவிஷன் இன்னும் படத்துக்கு ஸ்பான்சர் தேடிக் கொண்டிருக்கிறது.ஒற்றை ரீல் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே அவர்களிடம் சொன்னேன். படத் தயாரிப்புச் செலவு மூன்று லட்சம் ரூபாய். 40 பிரிண்ட், விநியோகச் செலவெல்லாம் இன்னொரு மூன்று லட்சம். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் செலவுக்கு, படத்தின் ஆரம்பத்தில் 30 செகண்ட், முடிவில் 30 செகண்ட் விளம்பரதாரர் கிடைத்தால் போதும். லாபம் நஷ்டம் இல்லாத புராஜெக்ட்டாக இதைச் செய்யமுடியும்.


பல தொலைக்காட்சிகளில் பல தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு விளம்பரதாரர்கள் கிடைப்பது பெரிய சிக்கலாக இருக்கக்கூடாது. விளம்பரதாரர்கள் கிடைக்கவே இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட, வருடத்தில் 12 ஒற்றை ரீல் படங்களுக்கு ஆகப் போகும் மொத்தச் செலவு வெறும் 72 லட்சம் ரூபாய்கள்தான்.`குசேலன்' படத்தில் மட்டும் அவர்கள் அடைந்த நஷ்டம் 20 கோடி ரூபாய்க்கும் மேல். அதே சமயம் ஒற்றை ரீல் போன்ற முயற்சிகளில் ஒரு கம்பெனிக்குக் கிடைக்கும் நன் மதிப்பு விலைமதிப்பற்றது.


ஆனால் இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகள், எங்கேயும் எப்போதுமே வணிக முயற்சிகள் நகரும் வேகத்தில் நகர்வதில்லை. ஒரு நிறுவனத்தின் தலை முதல் வேர் வரை எல்லாருக்கும் ஈடுபாடு இருந்தாலொழிய இவை வெற்றி பெறமுடியாது. மேல் மட்டத்தில் மூன்று நான்கு பேர் மட்டும் காட்டும் அக்கறை போதுமானதல்ல. இதை நிர்வாக இயக்குநர் சாமிநாதனும் நானும் இந்த ஓராண்டில் பல விஷயங்களில் புரிந்துகொண்டோம்.இப்படிப்பட்ட சூழலில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் ஓரடி முன்னே போயிருந்தாலே ஆறுதல்தான் என்றே கருதவேண்டும். போன டிசம்பரில் என்வசம் இல்லாத இரு குறும்படங்கள் இந்த டிசம்பரில் உள்ளன. ஓரடி முன்னே ?!


ஒற்றை ரீல் இயக்கம் போன்ற வணிக சினிமாவுக்கு நேரடித் தொடர்பு இல்லாத முயற்சிகளே தமிழ்ச் சூழலில் சிரமமானவை என்கிறபோது, வணிக சினிமாவுக்குள் மாற்று முயற்சிகள் மேலும் கடினமானவை.


மும்பையில் என்னை ஈர்க்கும் இன்னொரு அம்சம் நாடகம். இரவு 9 மணிக் காட்சிக்கு ஜுஹு பிருதிவி அரங்கம் நிரம்பி வழிவது மனம் நிறைக்கும் காட்சி. பயங்கரவாதத் தாக்குதல் முடிந்த சில தினங்களிலேயே நாடக அரங்குகளுக்கு வழக்கம் போல மும்பைவாசிகள் வந்துவிட்டார்கள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடூரமான போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி பாத்திரங்களில் பார்த்து `ரசிக்கும்` நடிகர் அஷீஷ் வித்யார்த்தியை பிருதிவி அரங்கில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் பார்த்தேன். நாடகத்தில் அவர் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான். 90 நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசி நடித்தார். நதீரா பாபர் இயக்கிய இந்த நாடகம் கிராமத்திலிருந்து சினிமா ஆசையுடன் மும்பைக்கு வந்து வாழ்க்கை அனுபவங்களில் அடிபட்டு மன நிலை சிதைந்து நடிகனாகாமலே இறந்து போகும் ஒரு இளைஞனைப் பற்றியது. அஷீஷ் வித்யார்த்தி போன்று தேசிய நாடகப் பள்ளியில் படித்துத் தேர்ந்த ஒரு திறமையான நடிகரையெல்லாம் தமிழ் சினிமா எப்படி வீண்படுத்துகிறது என்ற வருத்தம் ஏற்பட்டது. அதே சமயம் தெலுங்கு, தமிழ் என்று பிஸியான சினிமா வேலைக்கு நடுவில், இப்படி தாய்மொழியில் நாடகம் நடிப்பதற்கு அஷீஷ் போன்றவர்கள் காட்டும் அக்கறை அவர் மீது மதிப்பேற்படுத்தியது. ஒரு தமிழ் நடிகர் நாடகம் நடிப்பது பற்றி பத்து வருடமாகப் பேசிக் கொண்டே இருக்கிறார்.


வஜினா மோனோலாக்ஸ் (யோனி பேசுகிறது) என்ற நாடகம் மும்பையில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அடிக்கடி நிகழ்த்தப்படுகிறது. இதே நாடகக் குழுவினர் சென்னையில் இதை ஆங்கிலத்தில் நடத்த கடந்த மூன்று வருடங்களில் இரு முறை வந்தபோது, ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் சென்னைக் காவல் துறையால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை கூட எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. மும்பையாக இருந்திருந்தால் அதுவே ஓ என்று சத்தம் போட்டிருக்கும். சென்னையில் இருக்கும்போது சென்னைவாசி போல நடந்துகொள்கிறது.ஒவ்வொரு முறை சென்னை திரும்பும்போதும் அடுத்த முறை மும்பைக்கு வரத் தேவை இருக்கக் கூடாது என்றே நினைத்துக் கொள்கிறேன். காரணம், தாய்மொழி மீது இருக்கும் அன்புதான். ஆனால் சென்னையின் ஆட்டோ,சினிமா, நாடகச் சூழல் என்னை அவ்வப்போது இளைப்பாற மும்பைக்குத் துரத்திவிடுகின்றன..



நன்றி. குமுதம்...

Sunday, December 28, 2008

தி.நகர்-- நடேசன் பார்க்--- பதிவர் சந்திப்பு 27.12.08--- தங்கமணி

நேற்று எனக்கு வார விடுமுறை. சரியா 5மணிக்கு நடேசன் பார்க்குல இருக்கனும் அப்படின்னே நினைச்சுட்டே தூங்கிவிட்டேன். முழிச்சி பாத்தா மணி 4:15 க்கு மேல் ஆகிவிட்டது. ஆஹா பரபரன்னு கிளம்பி என் பையனிடம் அப்பா ஆபிஸ் போறேன்டான்னு சொல்லி எஸ்கேப்.தி.நகர் வந்தடையும்போது மணி 5:30 ஆகிவிட்டது. தாமிராவுக்கு மிஸ்டு கால் கொடுத்து பேசினேன். ஒன்னும் அவசரமில்லை மெதுவா வாங்க" என்றார். சரி நடேசன் பார்க்குக்கு தண்டபானி தெரு வழியா போனா பக்கமா இல்லை பர்கிட் ரோடு சிக்னல் வழியா போனா பக்கமானு ஒரு சந்தேகம். ஒரு பெருசு கிட்ட கேட்டு சரியான வழியில் வந்தடைந்தேன்.

சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது. அதிஷா தனியாக நின்று செல் பேசிக்கொண்டிருந்தார்.


வந்திருந்தவர்கள்
1. டோண்டு
2.ஜியோராம் சுந்தர்.
3.கேபிள் சங்கர்
4.காவேரி கணேஷ்
5.லக்கி லுக்
6.அதிஷா
7.தாமிரா
8.நர்சிம்
9.முரளிகண்ணன்.
10.அக்னி பார்வை
12.பாலபாரதி
14.கார்க்கி
15.இளவஞ்சி
16.பாபு ( தமிழ்கணிணி)
17.தராசு
18.ராஜராஜன்
19.ஊர்சுற்றி
20. ஜோசப் பால்ராஜ்
21.பாலு
22.புதுகை அப்துல்லா
23.குகன்
+ 3 வாசகர்கள் ( பெயர் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)


திருமணமானவர்களின் பிரச்சினை பற்றி ரொம்ப சீரியஸா பேசிக்கிட்டு இருந்தாங்க. காமெடியா பேசவேண்டிய மேட்டர் எப்படித்தான் சீரியஸ் மேட்டரா ஆச்சோ?. டோண்டு சார் நேபாளிகளின் திருமணமுறை பற்றி தெரியாத மேட்டரையெல்லாம் சொன்னார். திடீர்னு பாலபாரதி திருமண வாழ்க்கையில் ஆண்களுடைய டாமினேஷன் தான் அதிகம்னு ஒரு குண்டை தூக்கிப்போட்டுட்டார். நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.. என்னத்த சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்..... நீங்களே ஒருநியாயத்தை சொல்லுங்க. அப்படியே பேச்சு ஒரின சேர்க்கை பற்றி திசைதிரும்பியது. அதிஷா இதுக்கு ஆதரவு கொடுத்ததால "அவனா நீ" அப்படி சொல்லிட்டு நகர்ந்து உட்கார்ந்தார். நம்ம தங்கமணித்தாமிரா " கல்யாணம் தேவையில்லை காதல் ஓகே" ( இருங்க ஊர்ல இருந்து அண்ணி வரட்டும்)என்றார். ஒருவேளை படிக்கும் போதும், திருமணத்திற்கு முன்னாலும் ஏகமா லவ்விக்கிட்டு இருந்திருப்பாரோ ?????!!!!!!


பேச்சு அரசியல் பக்கமும், மீடியாக்களின் செயல்பாடு பற்றியும் திரும்பியது.வருகிற மக்களவைத்தேர்தலில் திமுகவுக்கு எப்படியும் 20 சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார். அப்படியே திருமங்கலம் தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்றும். இப்படி நடந்தால் திமுக உஷாராகும்னு சொன்னார். அஞ்சா நெஞ்சன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா???.. மீடியாக்களின் செய்தி வெளியிடும் முறை குறித்து பாலபாரதி குமுறிட்டார்.( மனுஷர் எதை பற்றி பேசினாலும் ஓவர் டென்சன் ஆகிறார்). இவ்வளவு கூத்தும் நடக்கும்போது கார்க்கியிடமும், தாமிராவிடமும் சில சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றேன். கொசுக்கடி அதிகமானதால் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்துவிட்டோம். கடைசி நேரத்தில் ஜோசப் பால்ராஜ் இணைந்துகொண்டார்.வீரத்தளபதி ஜேகே ரித்தீஷ் மன்றத்திலிருந்து என்ன பரிசு கொடுக்கபோகிறீர்கள் என்று அப்துல்லா அண்ணாச்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிவிட்டு ராஜராஜனுடன் சைதாப்பேட்டை வந்து பின் பஸ் ஏறினேன். தமிழ் எழுதும் முறை குறித்து ராஜராஜன் பல யோசனைகள் சொன்னார்.


வீட்டை அடையும் போது மணி 8:45. சன் டீவியில் அதிரடி சிங்கர் ஓடிக்கொண்டிருந்தது.போட்டியாளர் " நீயா பேசியது என் அன்பே" என்றபாடலை நரம்பு புடைக்க பாடிக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் ஈரோடு மகேஷ் உங்க தாடிக்குப் பின்னால் யாருங்க ?? என்று கலாய்த்தார். இந்தக் கேள்வி எனக்கு வந்தது. " வேற யாரு இதுக்கு பின்னாடி நீதான்" முடிப்பதற்குள் ணங்......அவ்வ்வ்வ்...........

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Thursday, December 25, 2008

2008ன் சிறந்த மொக்கை திரைப்படங்கள்.--என் பார்வையில்

நம்ம தமிழ் திரைப்படங்களில் நல்ல படங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமான வேலை....!!!!!!!!!!. ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் மிகக்குறைந்த அளவு படங்களே நல்ல திரைப்படமாகவும், வெற்றிப்ப்டமாகவும் அமைகின்றன. ஆனால் வெளியாகும் திரைப்படங்களில் கிட்டதட்ட 90 சதவீதம் மொக்கைப்படங்களாக இருப்பதால் அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுப்பது ரொம்ப கடினம். இருந்தாலும் பல கடினமான சுற்றுகளையும் தாண்டி இறுதி சுற்றுக்கு வந்திருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்குள்.....!!!!!!!!!!!!!!!!! மூச்சு முட்டிருச்சி.




6. குசேலன்


கிளிய வளர்த்து பூனை கையில கொடுத்த மாதிரி, கதபறயும் போள் எனும் அருமையான கதையை டைரக்டர் வாசு கையில கொடுத்ததால இந்த படம் சிறந்த வரிசையில வர வேண்டியது, மொக்கையில வந்திடிச்சி. இந்த ஜென்மத்துல ரசினி காந்த் வாசு இருக்குற பக்கம் தல வச்சி கூட படுக்க மாட்டார். கிளைமாக்ஸை மட்டும் நம்பி திரைக்கதையை கொத்தி கூறு போட்டுட்டாரு நம்ம டைரக்டர்.ரசினி படம்னாலே பாட்டுதான் ஹிட்டாவும். ஆனா எல்லா பாட்டுமே....????/ நயந்தாரா குனிவது, சோனா வின் மேல் வச்ச நம்பிக்கையை கொஞ்சம் திரைக்கதை மேல் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பா ஹிட் ஆகியிருக்கும். சூப்பர் ஸ்டாருக்கு எந்திரனாவது எந்திச்சி நிக்கும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.


5.குருவி


என் தல விசய் படம் இந்த மொக்கையில வந்ததுக்கு என் மனசு அழுதுப்பா............அவ் அவ்வ்..என்ன பண்றது... கடப்பா மேட்டர் மட்டும் இல்லைனா படம் டப்பா ஆகியிருக்கும். படத்துல விசயின் பல சாகசங்களால் தான் இந்த இடத்துக்கு வந்திருக்கு. ஓட்டைக் காரை நல்லா ஓட்டி ஜெயிப்பது-- தலாஇக்கு ஆப்பு வச்சதா நினச்சி தனக்கே ஆப்பு வச்சிக்கிட்டார். ரெயில்வே பாலத்தை அசால்டா தாவுறதுன்னு சும்மா கில்லி மாதிரி சுத்தி சுத்தி அடிச்சாரு.. ஆனா என்ன பண்றது சரக்கு இல்லாம போச்சே.....பேசாம இந்தியா சார்பா ஒலிம்பிக்ல நீளம் தாண்டுவதில் கலந்திருந்தா கூட ஒரு பதக்கம் கிடைச்சிருக்கும்.. இல்ல பார்முலா 1 ரேஸ் ல கலந்துகிட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கலாம். இந்தியா ஒரு விளையாட்டு வீரனை மிஸ் பண்ணிடுச்சிப்பா.... வில்லு சும்மா விர்ர்ருனு வருமா??


4.சத்யம்


இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னால இன்னா பில்டப் கொடுத்தாங்கோ..வசூல்ல அப்படியே பிச்சிக்கிட்டு போகனும்னு பாத்தாங்க.. ஆனா தியேட்ட்ர வுட்டே பிச்சிக்கிட்டு போயிடுச்சி.. அண்ணன் விசாலு உடம்பை ஏத்துறேன்னு சொல்லி சும்மா சோனி பையன் மாதிரி வந்து நின்னாரு பாருங்க ... முடியல.. அதுவும் கிளைமாக்ஸ்ல ரெண்டு டுப்பாக்கிய வச்சிக்கிட்டு சும்மா டமார் டம்மர் நு சுட்டுக்கிட்டே மொட்டை தலையோட வில்லன ரணகளம் பண்றதுதான் உச்சகட்ட காமெடி. இந்த படத்துக்கு இசை ஹாரிஸ்னா யாராவது நம்புவாங்களா?.... டைரக்டருக்கு இதுதான் முதல் படமாம். அவரோட எதிர்காலத்துல விசாலு விளையாடிட்டாரு.


3.ஏகன்


அட தலயோட படம் சிரிப்பு சிரிப்பா வருதுப்பா.. மொத்தத்துல இந்த படமே சிரிப்பு படம் தான். பின்ன தல காலேஜ் பையனா வருவாரு பாருங்க... !!!!! முடியலைங்க....அவ் அவ்... ராஜூ சுந்தரம் பேசாம தன்க்கு தெரிஞ்ச வேலையவே பாத்துருக்கலாம். தலயோட டான்ஸ் தான் ஹைலைட்.. ஷாலா ஷாலான்னு தொப்பய வச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம்............. தாங்காது இந்த பூமி?????. தலைக்கு அடுத்தப்படமாவது நல்லா களையா வருமானு பாக்கலாம்.

2.பழனி



மசாலா படம் எடுக்கிறேன்னு சொல்லிட்டு காமெடிப்படமா எடுத்து தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் பணியை நல்லாவே செய்றார் பேரரசு. நம்ம பரத்து இதுல அடிக்கிற பன்ச் டயலாக்கால தான் இது ரெண்டாவது இடத்துக்கு வந்திருக்கு. போதாக்குறைக்கு டைரக்டர் பேரரசு இன்சுபெக்டரா வந்து டெரரா நடிப்புல பின்னி எடுப்பார்.நம்ம குசுபு அக்கா சென்டிமென்டுல பின்னியிருப்பார். இந்த படம் சன் டிவியில டாப் டெனல முதல் இடத்துல இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை....

1.

....
...
....
....
....
....
....
.....
.....


நாயகன்

நம்ம பதிவுலகம் எதிர்பார்த்த மாதிரியே ரொம்பக் கஷ்டப்பட்டு முதல் இடத்துக்கு வந்திருக்கு.. நம்ம வரிசையில் உள்ள படங்களை விட 0.00001 மதிப்பெண் அதிகம் பெற்று முதல் இடத்தை பிடிச்சிருக்கு. இந்த படத்த பற்றி என்ன சொல்ல நம்ம பதிவுலக மக்கள் ஏற்கனவே வீரத்தளபதி பேர்ல பிளாக் ஆரம்பிச்சி கலக்குறாங்க. இந்தபடம் முதல் இடத்துக்கு வருவதற்கு முழுமுதற்காரணம் சிங்கம் ஜேகே ரித்தீஸ்தான். இருந்தாக்கா அள்ளிக்கொடு இல்லனா சொல்லிக்கொடு பாடல் காட்சி ஒன்றே போதும்..... கிராபிக்ஸ்னா என்ன என்பதை இந்த பாடல் காட்சி மூலம் தான் கத்துக்கனும்.. நிலா நிலா ஓடி வா பாடல் காட்சியில் நம்ம சிங்கம் எல்லா எக்ஸசைசையும் செஞ்சு முடிச்சிருவார். அவர் ஆடும் போதும், டயலாக் பேசும் போதும் அவர் கண்ணில் தெரியும் தன்னம்பிக்கைதான் படத்துக்கு மிகப்பெரிய பலம். ரவுடிய ஊஞ்சல் கட்டி அடிக்கிற மேட்டர்தான் நம்ம தமிழ்நாடு காவல்துறையில ஹைலைட்டான பேச்சாம்.


முதலிடத்துக்கு வந்த வெற்றியை வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்ற போர்ப்படைத்தளபதி கார்க்கிக்கு அர்ப்பணிக்கிறேன்.( ஏதோ பரிசு கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க... அதான் ஐஸ் )


டிஸ்கி: உங்க ஓட்டை நல்லா குத்துங்கடே...

Wednesday, December 24, 2008

2008ன் சிறந்த திரைப்படங்கள்-- என் பார்வையில்

இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றியடைந்த படங்கள் மிகக்குறைவே. ஒரு சில படங்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சக்கை போடு போட்டன.அப்படி வெற்றியடைந்த படங்களில் சிலவற்றை வரிசைப்படுத்தியுள்ளேன்

சுப்ரமணியபுரம்.


எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியடைந்தப்படம். டைரக்-ஷன், இசை, நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், தெளிவான திரைக்கதையின் மூலம் வெற்றிக்கொடியை நாட்டிய படம். 1980களில் இருந்த கிராமத்து சம்பவங்களை அப்படியே கொண்டுவந்து நம் கண் முன்னால் நிறுத்தியவிதம் அருமை. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் அரசியல் செல்வாக்குக்கு ஆசைப்படும் வில்லன் சொல் கேட்டு பாதை மாறுவது தான் கதை. ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் மிக அழகாக செதுக்கி இருந்தார் டைரக்டர் சசிகுமார்.ஜேம்ஸ் வசந்தனின் இசையில் கண்கள் இரண்டால் பாடலும் சரி, அது படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.

அஞ்சாதே


மிஷ்கின் டைரக்ஷனில் இரண்டாவது படம். எதிர்ப்பார்ப்போடு வந்து வெற்றியடைந்த படம்.இரு நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை தன்னுடைய திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருந்தார் மிஷ்கின். அஜ்மல்,நரேன்,பிரசன்னா,பாண்டிய ராஜன் கதாப்பாத்திரங்கள் படத்துக்கு கூடுதல் பலம். காவல்துறையின் தெரியாத சில பக்கங்களை நன்கு காட்டியிருந்தார்கள். கத்தாழைக்கண்ணால குத்தாத,கண்ணதாசன் காரைக்குடி பாடல்கள் தாளம் போடவைத்தன.
 
தசாவதாரம்



நம்ம பதிவுலக மக்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம். படத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் கமலஹாசன் தான்.கதையை இரண்டு வரியில் சொல்லிவிடலாம்.ஆனால் கதை சொல்லிய விதத்தில் அசத்தியிருந்தார்கள். நம்பி, பல்ராம் கதாப்பாத்திரங்கள் மூலம் படம் தப்பியது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் ஆரம்பக்காட்சிகளும், இறுதிக்காட்சிகளும்.கமலின் நடிப்பு கிரீடத்தில் இந்தப்படம் ஒரு வைரக்கல்.

சந்தோஷ் சுப்ரமணியம்



ரீமேக் நாயகன் டைரக்டர் ராஜாவுக்கு 4வது வெற்றி தந்த படம். அப்பா மகன் பாசத்துக்கிடையே காதலையும் சேர்த்து சொன்ன படம். படத்துக்கு ஹாசினி கேரக்டர் தான் பலம். நிஜத்துலையும் இந்த மாதிரி பொண்ணுங்க கெடைச்சா பசங்களுக்கு சந்தோசம்தான். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் கலக்கி இருப்பார். மொத்ததில் இளமையும்,குடும்ப சென்டிமென்டும் சேர்ந்து கலக்கிய படம்.
 
யாரடி நீ மோகினி



இதுவும் ரீமேக் படம்தான். வழக்கம் போல் அப்பாவை மதிக்காத தனுஷ்,வித்தியாசமான அப்பாவாக ரகுவரன், எப்போதும் டென்சனில் இருக்கும் நயந்தாரா இவர்களை சுற்றி வரும் கதை. முதல் பாதி நகைச்சுவையிலும், இரண்டாம் பாதி சென்டிமென்டிலும் போட்டுத்தாக்கி இருப்பாங்கோ. யுவனின் இசையில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருந்தது.

இந்த மாதம் ரிலீசான படத்தையெல்லாம் கணக்கில் எடுக்கலை. இந்த சிறந்த படங்கள் வரிசையில் விடுபட்டிருக்கும் மற்றபடங்களை பற்றி அண்ணன் முரளி கண்ணன் எழுதுவார். ரொம்ப நாளா அவரைக்காணோம்.



டிஸ்கி: பதிவ படிக்கிற பயலுவ ஓட்டயும் குத்திட்டு போங்கப்பு... அடுத்த பதிவு 2008ல் சிறந்த மொக்கைப்படங்களை பற்றி

Monday, December 22, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்-- மரண அரசியல்

பல வருடங்கள் முன்பு ஹிந்து பேப்பரில் ஒரு நாள் முழுப் பக்கமும் ஒரு பெரிய புகைப்படத்துடன் வந்திருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் மகன் அது என்ன என்று கேட்டான்.அப்போது அவனுக்கு பத்து வயது. அது, இறந்துவிட்ட ஒரு தொழிலதிபருக்கு மரண அஞ்சலி விளம்பரம் என்றும் அதற்கு எத்தனை லட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்றும் அவனுக்கு விளக்கினேன். ``அப்பா, நீ செத்துப் போகும்போது நானும் உனக்காக இப்படி ஒரு முழுப் பக்கம் விளம்பரம் கொடுப்பேன்'' என்று வெள்ளந்தியாக தன் அன்பை வெளிப்படுத்தினான் அவன்.


பெரும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் மரண அஞ்சலி விளம்பரங்கள், கொஞ்சம் அன்பையும் நிறைய பணபலத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துபவை. அண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டல்களில் கொல்லப்பட்ட வர்த்தகத்துறைப் பிரமுகர்களுக்கான அஞ்சலி விளம்பரங்கள் பல நாட்கள் மும்பை ஆங்கில ஏடுகளை ஆக்கிரமித்தன. ரயிலடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி விளம்பரம் தரும் வசதியுள்ள உறவினர்கள், நண்பர்கள் குறைவு. அநேகமாக அவரவர் பகுதிகளில் 30க்கு 20 கறுப்பு சுவரொட்டிகள் சிலருக்குக் கிட்டியிருக்கலாம்.


பயங்கரவாதிகளுடன் மோதி இறந்த கமாண்டோ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலைக் காவலர்கள் ஆகியோரின் உயிர்த் தியாகத்தைப் போற்றி எந்த நட்சத்திர ஓட்டலும், எந்த பெரும் தொழில் நிறுவனமும் பெரிய அஞ்சலி விளம்பரங்களை வெளியிடவில்லை. அவர்களுக்கெல்லாம் மும்பை நகரில் அஞ்சலிப் பலகைகளை வைத்தது, மீடியாவால் கடுமையாக திட்டப்பட்ட அரசியல்வாதிகள்தான். சரத்பவாரின் காங்கிரஸ், சிவசேனை, ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவை பல சாலைச் சந்திப்புகளில் இறந்த போலீஸாரின் படங்களுடன் அஞ்சலிப் பலகைகள் வைத்தன. அவற்றிலும், பிடிபட்டிருக்கும் ஒரே ஒரு தீவிரவாதியைப் பிடிக்க உதவியாக, அவனுடைய துப்பாக்கிக் குழலையே கையில் பிடித்து குண்டுகளைத் தன் மார்பில் வாங்கி இறந்த சப்இன்ஸ்பெக்டர் துக்காராமின் படம், மிகச் சிலவற்றில்தான் இடம் பெற்றது.


மரண விளம்பரங்கள் ஒருவரின் பணபலத்தை மட்டுமே பொறுத்தவை. அதனால்தான், மறைந்த நண்பர் தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் தன் பொறுப்பில் இதழ் வந்த சமயத்தில் யாருடைய மரணச் செய்தியையும் வெளியிடலாம் என்ற ஒரு நடைமுறையைச் செயல்படுத்தினார். இறந்தவர் பிரபலமாகவோ, பிரபலத்தின் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எண்ணற்ற சாமான்யர்களின் மரணச் செய்திகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.மரணச் செய்தியை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஓர் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது, போகிற போக்கில் தெரிவிப்பது, விரிவாக பெரிய படங்களுடன் வெளியிடுவது, விமர்சனங்களுடன் வெளியிடுவது என்று பலவிதங்களில் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் அணுகுகின்றன.


எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜாதி, மத, வர்க்க, வணிக அரசியல் சார்ந்துதான் பிறப்பு முதல் மரணம் வரை செய்தி வெளியிடுகின்றன.
இறந்த ஒரு பிரபலத்தைப் பற்றி மிக இழிவாக மரணச் செய்தி வெளியிடப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்த்தேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஏறத்தாழ இருட்டடிப்பே செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். என்ன செய்வது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் செத்துப் போனது அவருடைய தப்புதானே. அது கூட ஒரு சாக்குதான்.தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட் செய்தி விரிவாகவே காட்டப்படத்தான் செய்தது.


இந்தியா டுடே இதழில் அதன் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பிரசன்னராஜன், வி.பி.சிங் பற்றி எழுதியது மிகவும் ரசக்குறைவானது. `இந்திய சமூகத்தையே சீர்குலைத்தவன் செத்து ஒழிந்தான், அப்பாடா!' என்பதுதான் அந்த சிறு கட்டுரையின் தொனி. வி.பி.சிங்கை இப்போது தகனம் செய்த தீ நமக்கு, அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்த (போதும் செத்து தியாகியாக முடியாமற்போன) ராஜீவ் கோஸ்வாமியைச் சுட்ட தீயை நினைவுபடுத்த வேண்டும் என்று வலிந்து எழுதுகிறார் பிரசன்னராஜன். ஆங்கில மொழியின் நயங்களைப் பயன்படுத்தி வி.பி.சிங்கை பிரசன்னராஜன் செய்த நக்கல், நையாண்டியெல்லாம், அதே இதழின் தமிழ் மொழிபெயர்ப்பில் நயங்களையும் இழந்து, அப்பட்டமான குரோதமாகப் பல்லிளிக்கிறது. இந்திய சமூகத்தை வி.பி.சிங் பிளவுபடுத்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய். அவரா ஜாதிகளைக் கண்டுபிடித்தார்? வர்ணாசிரமத்தை உருவாக்கினார்? ஏற்கெனவே பிளவுபட்டும் ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கும் ஜாதீய சமூகத்தில், சம நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தவரா, பிளவுபடுத்துபவர்?ஜாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் இவற்றில் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும் எவரும் வி.பி.சிங் மீது வெறுப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் எந்தப் பதவியை வகித்தபோதும் இவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தார். நடவடிக்கைகள் எடுத்ததால், பதவி பறிபோகும் என்றால் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் பதவிகளை இழந்தார்.


அவர் உ.பி. முதலமைச்சராக இருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டுதலில் சம்பல் கொள்ளைக்காரர்களை சரண் அடையச் செய்ய முயற்சி எடுத்தார். அது பிடிக்காதவர்கள் அவர் சகோதரரையே கொன்றார்கள். அதற்காக அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள் கிர்லோஸ்கர், லலித் மோகன் தாப்பர் ஆகியோரை துணிச்சலாகக் கைது செய்தார். அதனால் துறை மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். அங்கே நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், பீரங்கி பேர ஊழல்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதனால் ஆட்சியை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று. பி.ஜே.பி., இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்ததில் அவர் பிரதமரானபின், அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் சில மாநிலங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் சுதந்திரம் பெற்று 40 வருடங்களாகியும் மத்திய அரசில் அது இருக்கவில்லை. மண்டல் கமிஷன் அடிப்படையில் அதை அறிமுகப்படுத்தினார். இதனால் பி.ஜே.பி. ஆதரவை திரும்பப் பெற்றதில் பிரதமர் பதவி போயிற்று.


வி.பி.சிங் கவலைப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த கலவரங்களையடுத்து மத நல்லிணக்கத்துக்காக அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததில் அவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. ரத்தப் புற்று நோயும் இருந்தது. அன்றாட கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்க அரசியலில் இயங்கிவந்தார். மறுபடியும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்ததால்தான் குஜ்ராலும் தேவ கவுடாவும் பிரதமராக முடிந்தது.பதவிகளைப் பொருட்படுத்தாமல் கொள்கை அடிப்படையில் மட்டுமே இயங்கிய அபூர்வமான மனிதர் அவர். அதனால்தான் அவர் தேசிய முன்னணி அமைத்து அதன் வழியே பிரதமரானபோது, தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபா எம்.பி.கூட தேர்தலில் கிட்டாதபோதும், ஃபெடரலிசக் கொள்கை அடிப்படையில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கினார்.

கவிஞராகவும் ஓவியராகவும் நுட்பமான உணர்வுகளுடன் இயங்கிய அவர், தனி வாழ்க்கையில் மிக எளிமையானவர் என்பதை அவருடைய மொழிபெயர்ப்பாளனாக தேசிய முன்னணி தொடக்க கால மேடைகளில் செயல்பட்டபோது நேரில் நான் அறிந்தேன். நண்பர் ஜெகவீரபாண்டியன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதால் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் என் வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் முக்கியமானவை. மேடைகளில் அவர் சொன்ன குட்டிக்கதைகள் தொகுக்கப்பட்டால் அருமையான வாசிப்பு அனுபவமாக இருக்கும்.தமிழகத்தில் பெரியார் பணியாற்றி இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது போல வடக்கே யாரும் செய்யவில்லை என்பதால்தான் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்கு எதிர்ப்பை வி.பி.சிங் சந்திக்க வேண்டி வந்தது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரியார் முழுமையாக மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.


பெரியார் பார்வையும் லோஹியா பார்வையும் கலந்த ஓர் சமூக அரசியலை வடக்கே பரப்ப அவர் முயற்சித்தார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது _ அவர் காலத்துக்குப் பின் இன்று பி.ஜே.பி உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிராகரித்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தியதுதான். ராஜீவ் கொலையும் உடல் நலிவும் நிகழ்ந்திராவிட்டால். வி.பி.சிங் 1991_ல் மீண்டும் பிரதமராகியிருப்பார். இந்திய அரசியல் மிக ஆரோக்கியமான வழியில் சென்றிருக்க முடியும்.வாரிசு அரசியல், குடும்ப நலன், ஊழல் செய்து சொத்துக் குவிப்பு எதையும் செய்யாத நேர்மையாளரான வி.பி.சிங்குக்கு இவற்றில் திளைக்கும் தி.மு.க.வும் பெரியாரை தனிச் சொத்தாக பாவிக்கும் தி.க.வும் வி.பி.சிங்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செலுத்தும் அஞ்சலிகளை விட, அவருடைய எதிரிகளின் சார்பாக இந்தியா டுடே பிரசன்னராஜன் எழுதியிருக்கும் கண்டனம்தான், வி.பி.சிங் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த புகழுரையாக அமைகிறது..


இந்த வார பூச்செண்டு

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் வேளையில், அப்படி மறுப்பது தொழில் தர்மத்துக்கு முரணானது என்றும் கசாப் கேட்டுக் கொண்டால் தான் ஆஜராவேன் என்றும் ராம் ஜெத்மலானி அறிவித்திருப்பதற்காக இ.வா.பூச்செண்டு. கசாப் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதால் தண்டனை நிச்சயம்; மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையை கோரிப் பெற தான் வாதாட இயலும் என்று ராம்ஜெத் மலானி தெரிவித்திருக்கிறார்.


இந்த வார கேள்வி


திருச்சி பகுதியில் சிறு தொழிற்சாலைகள் 55 சதவிகித மின்வெட்டில் திணறிக் கொண்டிருக்கையில், ஸ்டாலின் உறையூரில் பேசும் பொதுக் கூட்டத்துக்காக ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை நெடுக டியூப் லைட்டும் அலங்கார விளக்குகளுமாக செய்திருக்கும் அட்டகாசத்தை நேரில் கண்டேன். அருவருப்பாக இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா?

நன்றி குமுதம்

Sunday, December 21, 2008

ம்ம்ம்... லக்கியின் கருத்தை ஆமோதிக்கிறேன்....

தமிழக அரசியல் களம் வரும் ஜனவரி முதல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.. முக்கியமா திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தங்களுடைய பலம் என்ன என்பதை அரிய ஒரு வாய்ப்பாக இருப்பதை எண்ணுகின்றன..பிஜேபி போட்டி இடப்போவதில்லை என்று பெருந்தன்மையாக விலகிகொண்டது.?????. அதிமுக தங்களுடந்தான் கூட்டணி சேரும் என்ற எண்ணம் இலவு காத்த கிளி போல் ஆயிடிச்சி.இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவே இல்லை.

கேபடன் வழக்கம் போல தனியாக போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தல்தான் தேமுதிக தனியாக போட்டியிடும் தேர்தலாக இருக்கும்.. கண்டிப்பா நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் சேருவார். எவ்ளோ நாளுக்குத்தான் தனியா நிக்கிறேன்னு பிலிம் காட்டமுடியும்.


இரன்டு நாட்களுக்கு முன் சென்னை ராமாபுரத்தில் வெள்ள நிவாரணநிதி வழங்கப்பட்டது. முதல் நாள் கொஞ்சம் பிரச்சினை ஆச்சு. அன்று மதியமே கூட்டத்திற்கு தகுந்தவாறு கவுண்டர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கினார்கள்.ரேஷன் கார்டுகளுக்கு டோக்கன் நம்பர் கொடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் உடன்பிறப்புகள் தான் செய்துகொண்டிருந்தனர்.மேலும் வெள்ள நிவாரண பட்டியலை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தனர்.அங்கிருந்த காவல்துறையினரும் சரி, அரசு அதிகாரிகளும் சரி மிக கச்சிதமாக த்ங்களுடைய வேலையை செய்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது மக்களவை தேர்தல் ஞாபகம் வந்தாலும்... இதை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்..

இது குறித்து லக்கி சொன்னதைப்பாருங்கள்.


///மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். . இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.////

நடப்பதையெல்லாம் பார்த்தால் லக்கி சொல்லுவதில் நூற்றுக்கு நூறு உண்மை என்றே படுகிறது.தினசரி ஆர்ப்பாட்டம் நடத்தினால் போதும் என்ற அதிமுகவின் எண்ணம் மிகுந்த பரிதாபத்துக்குரியது.. அரசின் எதிர்ப்புகளை மிக கவனமாக கையாண்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த விசயத்தில் அவர்களாகவே முடிவெடுக்கிறார்கள். இதுவே ஆட்சியாளர்களுக்கு நிம்மதியை கொடுக்கும்...


 

Friday, December 19, 2008

கனமான ஷூ வேண்டும்????

இதப்பத்தி நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். தங்களுடைய மேலான் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லவும்.மறக்காம ஓட்டு போட்டு சூடாக்கிருங்கப்பு.



உங்க தொகுதி எம் எல் ஏவை பாக்கனும்னா ஒரு வாரம் கழிச்சி திருமங்கலம் போங்க. அங்க கண்டிப்பா பாக்கலாம்..

நன்றி குமுதம்.com பாலா

Thursday, December 18, 2008

அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் --திமுக அரசின் சோதனைகள்

அரசு கேபிளுக்கு சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக ஹிந்து நாளிதழ் செய்தி வெளிவந்துள்ளது.அரசு கேபிளின் இயக்குனர் திரு உமா சங்கர் "டிடிசாட் ஆணைப்படி சன் குழுமம் தனது சேனல்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சன் சேனல்கள் இல்லாமல் இவ்வளவு நாளும் அரசு கேபிள் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

வேலூரில் ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிளின் சிக்னலை எந்த கேபிள் ஆப்பரேட்டரும் வாங்க வில்லை என்பது 100 சதவீத உண்மை. இவ்வளவுக்கும் வேலூர் மாவட்டத்தில் செயல் படும் கேபிள் நிறுவனம் திமுக எம் எல் ஏவினுடையது... . நெல்லையில் ஒரு சில ஆப்பரேட்டர்கள் மட்டும் அரசு கேபிள் சிக்னலை பயன்படுத்துகின்றனர். அரசு கேபிளில் சன் குழும சேனல்கள் இல்லையென்ற ஒரே காரணத்திற்காகத்தான் ஆப்பரேட்டர்கள் வாங்க மறுத்துள்ளனர். இனிமேல் அரசு கேபிள் காட்டில் மழைதான்...


சென்னையில் ஜனவரி மாதம் தொடங்கப்போவதாக அரசு கேபிள் அறிவித்துள்ளது. இப்போது சென்னையில் கேபிள் சேவையை வழங்கி வரும் எஸ் சி வி மற்றும் ஹாத்வே நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகின்றனவோ??


திமுக அரசின் சாதனைகளை நண்பர் செந்தழல் ரவி அவருடைய பதிவில் ஆதாரங்களோடு சொல்லியிருந்தார்..உண்மையிலே பலவித அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இது கலைஞரின் சாதனைதான். ஆனனல் சென்ற வாரம் கலைஞர் தந்து பேட்டியில் மின்வெட்டை சமாளிக்க மத்திய அரசு மேலும் 1000மெகாவாட் மின்சாரத்தை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.மின்வெட்டு இன்னும் தமிழ்நாட்டில் அமலில் இருக்கு.. அன்னா இப்போதைக்கு அதை பத்தி யாரும் கண்டுக்கிறதில்லை..ஏன்னா அந்த விசயத்தை மூழ்கடிச்சி ஏகப்பட்ட விசயம் முன்னாடி நிக்குது.

செந்தழல் ரவி அவருடைய பதிவில் டாக்டர் புருனோ " நகர மக்களின் மத்தியில் தான் திமுக ஆட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும், கிராமங்களில் செல்வாக்கு அப்படியே உள்ளதாகவும்" கூறியுள்ளார். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எப்படினா நகர்ப்புறபகுதிகளில் மின் வெட்டு 2மணி நேரமாக இருக்கும்போது கிராமங்களில் 12மணி நேரத்திற்கும் அதிகமாக அமல்படுத்தப்பட்டது.நகர்புறத்தில் மின்வெட்டு என்று அலறிய மீடியாக்கள், கிராமங்களில் அமல்படுத்திய மின்வெட்டை ஒரு தலைபட்சமாகவே சொல்லி வந்தன..அதாவது மின்வெட்டின் காரணமா கிராம மக்கள் சாலை மறியல் மாதிரியான போராட்டம் நடத்திய உடன் தான் மீடியாக்கள் வேறு வழியில்லாமல் அந்த செய்திகளை வெளிக்கொண்டு வந்தன.

என்னுடைய பார்வையில் திமுக அரசின் சோதனைகள்


1.மின்வெட்டில் முதலிடம்

2.டாஸ்மாக் விற்பனையில் முதலிடம்.
3.மறைமுக பஸ் கட்டண உயர்வில் முதலிடம்
4.சிறு,குறு தொழில்களை கைவிடுவதில் முதலிடம்.
5.இலவசங்களை வாரி வழங்குவதில் முதலிடம்.
6.அமவுண்ட் ரவுண்டா வாங்குவதில் முதலிடம்.
7. தம்முடைய வாரிசுகளை திருப்திபடுத்துவதில் முதலிடம் ( ஸ்டாலின் தவிர)

Monday, December 15, 2008

இந்தியாவின் ஆச்சரிய வெற்றி

சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி. சென்னை பிச்சில் 4வது இன்னிங்சில் நிலைத்து ஆடுவது சவாலான விசயம். ஆனால் அதை பொய்யாக்கி விட்டது டெண்டுல்கர்+ யுவ்ராஜ் கூட்டணி. டெண்டுல்கரின் வின்னிங் ஷாட் அவரது 41 வது சததை தந்தது.

உண்மையிலே டோனி அதிர்ஷ்டக்காரர்.ஷேவாக், கம்பீரின் ஆட்டமும் இந்தியாவுக்கு நிறைவை தந்தது.சேஸிங்கில் 4வது அதிகமான ஸ்கோர் ஆகும். சென்னையில் இது 4வதுஇன்னிங்க்ஸில் அதிகபட்ச ஸ்கோர்,

டெண்டுல்கர்-- 103 ரன்கள்

யுவ்ராஜ்-- 85 ரன்கள்
பீட்டர்சன் சரியான் ஸ்கோர்ல தான் டிக்ளேர் செய்தார். ஆனா இந்தவாட்டி நம்ம பக்கம் அதிர்ஷ்ட காத்து வீசிடிச்சிப்பா

நமது பயிற்சியாளர் சொன்னது போலே நடந்துவிட்டது.

ஆட்ட நயகன் விருது-- ஷேவாக்


பாவம் பீட்டர்சன்

கலைஞர் தொலைக்காட்சியின் புதிய தெலுங்கு சேனல்?????????????????//

தமிழ் தொலைக்காட்சிகளில் கஷ்டப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றிகரமா போய்க்கிட்டு இருக்கு நமது கலைஞர் தொலைக்காட்சி. கலைஞரும் மாறன் சகோதரர்களும் சேர்ந்தபிறகு அப்படியே சைலன்டா போவுது.

கலைஞர் தொலைக்காட்சியின் அலைவரிசையில் "R" டிவி எனும் தெலுங்கு சேனல் ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் கலைஞர் தொலைக்காட்சியை சேர்ந்ததா? இல்லை வேறு யாரோடதுனு தெரியல. இந்த தெலுங்கு சேனலை பற்றி கலைஞர் தொலைக்காட்சியின் வெப் சைட்டிலும் ஒரு தகவலும் இல்லை.


இந்த டிவி சேனல் யாருடையது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.........

"R" டிவி சேனல் RVML (Rayudu Vision Media Ltd) .கலைஞரோடது கிடையாதாம்பா.. தகவல் தந்த பெயரில்லாதவருக்கு நன்றி
http://www.rvml.co.in./

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்- பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா?

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள்.என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா?


ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை!பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம்.


இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.


ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது. ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.


பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.


காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம்.

பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான்.

இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.


பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது. ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல. ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.

இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.

அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.


தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?.

நன்றி குமுதம்

Sunday, December 14, 2008

பதிவுலக மாவீரன் பட்டம்-- சென்னை பதிவர் சந்திப்பில்

பதிவுலகுக்கு வந்து ஒரு 6 மாசம் ஆகிப்போச்சு. இந்த 6 மாசத்துல தமிழ்மணத்துல வாரத்துல ஒரு தடவையாவது நம்ம பதிவருங்க முகம் தெரியாத யாரோடவாவது சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி எழுதுற பதிவும் சில நிமிடங்களில் சூடான பகுதிக்கு போயிடும். ஒரு வேளை தங்களை எல்லோரும் கவனிக்கனும்னு சண்ட போடுறாங்களோ என்னவோ?

இப்படி வாரா வாரம் முகம் தெரியாதவங்களோட சண்ட போடுறவங்களுக்கு நேரடியா சண்ட போடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதிஙக. தமிழனுக்கு அடுத்தவனோட மறைமுகமா சண்ட போடுறாதுன்னா ரொம்ப பிடிக்கும்.அதுவும் பதிவுலகில கேக்கவே வேணாம். எப்படினாலும் திட்டிக்கலாம். கண்டிப்பா நேர்ல வரமுடியாதுன்ற தைரியம்தான். எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது.

அதனால இந்த அரிய வாய்ப்பை பதிவர்கள் முக்கியமா மாவீரன்னு பேரெடுக்க வெறியா இருக்கும் பதிவர்கள் இதை பயன்படுத்திக்கலாம்.
அதாவது வருகிற சென்னை பதிவர் சந்திப்புல இந்த வீரவிளையாட்டு அறிமுகப்படுத்தப்போறோம்.என்கிட்ட ஒரு நாலஞ்சு அருவா சும்மாத்தான் இருக்கு. அதை எடுத்துக்கிட்டு வர்றேன். ஒரே நேரத்தில் இருவர்தான் சண்டையிட முடியும். ஜெயிக்கிறவங்களுக்கு 5 அடி திருப்பாச்சி அருவாவும், 5 கிலோ அல்வாவும் பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்துக்கனும்னா போட்டி அமைப்பாளர் அதிஷாவை தொடர்பு கொள்ளவும்.

நடுவர்களா மாறவர்மன் நர்சிம்மும்,அக்னிபார்வையும் இருப்பாங்கோ.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி தாமிரா, முரளி கண்ணன்


பரிசுகள் வழங்வோர் : வீரத்தளபதி ஜே.கே. ரித்தீஸ் ரசிகர் மன்ற பொருளாளர் திரு. புதுகை அப்துலா அண்ணாச்சி


போட்டி நடைபெறும் இடம்: மெரினா பீச் காந்தி சிலைக்கு பின்னால்.

போட்டி நடைபெறும் நாள் : அதிஷா,லக்கி, முரளி கிட்ட கேளுங்க.


பின்குறிப்பு : அருவாளை கையில வச்சி தான் சண்ட போடனும்.

Tuesday, December 9, 2008

நடுநிலை -- தமிழ்த்தொலைக்காட்சிகளின் பார்வையில்

சன் டிவி--

(ஒன்னு கூடுவதற்கு முன்னால்)
தமிழகமெங்கும் மின்வெட்டு, ஆர்ப்பாட்டம், அமைச்சர்களின் ஊழல்
கலைஞரின் அறிக்கை 1நிமிடம்
அம்மாவின் அறிக்கை 4நிமிடங்கள்!!!!!
விசயகாந்த், சரத் அறிக்கை
தலைவர் கலைஞருக்கு கட்டுப்படுவேன்!!!!
அழகிரியின் அக்கிரமம்!!!
தளபதி ஸ்டாலின்


(ஒன்னு கூடியதற்கு பின்னால்)
மின்வெட்டை அரசு சமாளிக்கிறது.???
தாத்தா கலைஞர்,மாமா அழகிரி,மாமா ஸ்டாலின்??!!!
கலைஞரின் அறிக்கை 4நிமிடங்கள்
ஜெயாவின் அறிக்கை 1நிமிடம்???
விசயகாந்து, சரத்தை காணோம்
மதுரை தமிழ்நாட்டுல எங்க இருக்கு???

கலைஞர் டிவி-
(அமொவுன்ட் ரவுண்டா வருவதற்கு முன்னால்)
சன் டிவி,தினகரன் பொய் விஷம பிரச்சாரம்
மின்வெட்டா? கழக ஆட்சியில் தமிழகம் செழிக்கிறது.
காடுவெட்டி குரு கூட்டணி காண்டில் கைது.
வளர்த்த கடா மார்பில் பாயுது.


(அமொவுன்ட் ரவுண்டா வந்ததுக்கு அப்புறமா)
நெஞ்சம் இனித்தது, கண்கள் பணித்தன,கைகள் எண்ணியது.
அன்பு, புகழ்
சமுதாய செம்மல் குருவே வருக


ஜெயா டிவி--
மைனாரிட்டி திமுக அரசு, ஆர்ப்பாட்டம்,
கருணாநிதி ராஜிநாமா
இருண்ட தமிழகம் கருணாநிதி ஆட்சியில்
இந்தியாவுல பூகம்பமே வந்தாலும்
அம்மா அறிக்கை தான் முதலில்
புதுசா கம்யூனிஸ்ட் தோழர்கள்


மக்கள் டிவி--
( கூட்டணியில் இருக்கும் போது)
அய்யாவின் வழிகாட்டுதலில் தமிழகம் முன்னேறுது.
( கூட்டணியிலிருந்து தூக்கியெரிந்த பிறகு)
அய்யோ மின்வெட்டு, விலைவாசி, குடியில் தமிழகம் தடுமாறுது
சமூக நீதிக்காவலன் குரு கைது.
மாநில அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி


ராஜ் டிவி--
தங்கத்தலைவன் கலைஞரின் ஆட்சியில் தமிழகம் பூத்து குலுங்குது.
(இப்போது)
ஒன்னுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது,
மர்மமா இருக்குது,
இருந்தாலும் கலைஞர் ஆட்சி நல்லா இருக்கு.





இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்கடே சேத்துக்கிறேன்

Sunday, December 7, 2008

என் சந்தேகங்கள்- ஏய் இந்த பசங்க-- இன்னும் பல கேள்விகள்

போன வாரத்துல நல்ல காமெடி நாடகமெல்லாம் நடந்திச்சி. முத்தமிழ் அறிஞரும் மாறன் சகோதரர்களும் மீன்டும் தமிழ்நாட்டின் நன்மைக்காக??!@!!! இணைஞ்சிட்டாங்க போல.இந்த இணைப்புக்கு பின்னால ஏகப்பட்ட மேட்டர் இருக்குதாம்.


போன புதன்கிழமை மதியம் விஜய நகர் பஸ் ஸ்டாப்புல பஸ்க்கு காத்திருக்கும் போது


5பள்ளிக்கூட பசங்க அரட்ட அடிச்சிட்டு இருந்தாங்கோ. திடீர்ன்னு அதுல ஒருத்தன் கொஞ்சம் அதிகமா சவுன்டு குடுத்தான். என்னன்னு பாத்தா ரெண்டு புள்ளைங்க வந்திட்டு இருந்திச்சிங்க. புன்னகையோட வந்திட்டு இருந்தாங்கோ. அந்த பையன் கலாய்ச்சிட்டே இருந்தான். இவங்களும் பதிலுக்கு. ரென்டு புள்ளைங்களும் பஸ்ல ஏறிட்டாங்க. பசங்க அதுக்கு முன்னாடியுள்ள பஸ்ல ஏற்ரதுக்கு போனாங்க. ரெண்டு புள்ளைங்கள்ல் ஒன்னு சொல்லிச்சி"ஏய் இப்ப பாரேன் அந்த பசங்க இங்க வருவாங்க" ந்னு சொல்லிச்சி. அதே மாதிரி பசங்களும் இந்த புள்ளைங்க ஏறின பஸ்ல ஏறிட்டானுக.இதே ஒரு பத்து வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு கிட்ட பேசனும்னாலே அவ்ளோதான்.


" எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன்"
" இனிமே என் பின்னாடி வராதிங்க"
" அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்"


சொல்லிடுவாங்களோன்னு பயந்து எஸ்கேப் ஆனதும்,பின் அதேபெண்ணை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவுல வந்திச்சிப்பா.எந்த விசயத்துல பசங்களும்,பொண்ணுகளும் தெளிவா இருக்காங்களோ இல்லையோ இந்த விசயத்துல தெளிவா இருக்காங்க.


ஏதொ ஒரு பெயருக்கு பெட்ரோல் டீசல் விலைய கொஞ்சம் கம்மி பண்ணியிருக்கு மத்திய அரசு. ஆனா இப்படி கம்மி பண்ணியும் எண்ணெய் நிறுவங்களுக்கு லிட்டருக்கு 10ரூபா லாபம் கிடைக்குதாம். அரசுக்கு வரி விதிப்பின் மூலமா 25ரூபா லாபம் கிடைக்குதாம்.


என்னத்த சொல்ல.


கேள்விக்கு பதில் சொல்லுங்கடே
1.பிஜேபி நிலைமை என்னவாகும் தமிழ்நாட்டில்?
2.விசயகாந்தை இன்னும் காணோமே?
3.தேர்தலுக்கு அப்பறமும் அதிமுக கம்யூனிஸ்ட் கூட்டணி இருக்குமா?
4.ஆற்காட்டார் இனி என்ன செய்வார்?


இந்த பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் போது மத்திய அரசு வரியெல்லாம் கம்மி பண்ணியிருக்காங்கன்னு செய்தி வருது.. பின்னாடியே தேர்தல் வருதுப்பா>>>>>


ஜோக்


"டாக்டர் என் பையன் சரியா வளரமாட்டுக்கான் என்ன செய்ய"
"விலைவாசின்னு பேர் வைங்க அப்புறம் பாருங்க"


ஏகப்பட்ட மேட்டர் வச்சிருந்தேன். தாமிரா பதிவுல போய் கும்மி அடிச்சதுல மறந்துபோய்டிச்சு.

Saturday, December 6, 2008

இவ்வாரம் ஞாநியின் பார்வையில்--உள்ளூர் பயங்கரம்

நூறு பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு நிகரான பயங்கரவாதிகள் இருக்க முடியுமா? ஆங்கில டி.வி சேனல்கள்தான் அப்படிப்பபட்டவர்களாக எனக்கு இப்போது தெரிகிறார்கள். மழையில் மூழ்கிய சென்னைக்குத் திரும்புவதை விட மும்பையில் இருப்பதே பாதுகாப்பானது என்று சென்னை நண்பர்கள் எச்சரித்ததால், மும்பை வீட்டிலேயே மேலும் ஒரு வாரம் இருந்தபோது தொடர்ந்து 60 மணி நேர மீடியா பயங்கரவாதத் தாக்குதலை நான் அனுபவிக்க நேர்ந்தது.திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி நம் தலைக்குள் அதைப் பதியவைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தன இந்த டி.வி சேனல்கள். இந்தியாவின் அடையாளச் சின்னமான ஹோட்டல் தாஜ் தாக்கப்பட்டுவிட்டது என்று இன்னமும் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த இந்தியாவில் யாருடைய அடையாளச் சின்னம் ஹோட்டல் தாஜ் ?


மும்பையில் முதலில் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தான் மும்பையின் உண்மையான அடையாளச் சின்னம். இங்குதான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக பீஹார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு முதலியவற்றிலிருந்து சக இந்தியர்கள் தினசரி வந்து இறங்கி மும்பையையும் தங்களையும் கடும் உழைப்பால் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த ரயில் நிலையத்தின் நடை மேடையில்தான் அறுபது பிணங்கள் முதலில் விழுந்தன. ஆனால் இன்று வரை ஒரு சேனலும் இந்த ரயில் நிலையக் காட்சிகளைக் காட்டவில்லை. நட்சத்திர ஓட்டல்களான தாஜ், ஓபராய் இரண்டிலும் உடைந்த சோபாக்கள், எரிந்த திரைச் சீலைகளைக் காட்டுவதற்கு இந்தியாவின் நம்பர் ஒன் பெண் டி.வி அறிவிப்பாளர் பர்க்கா தத் முண்டியடித்துக் கொண்டு காமராவுடன் அலைகிறார். ஆனால் அரசு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் தெரியாமல் கிடந்துகொண்டிருக்கும் ரயில் நிலையப் பிணங்களையோ, அடையாளம் தெரிந்த பிணங்களைப் பெற்றுச் செல்ல சாதாரண மக்கள் படும் பாட்டையோ எந்த டி.வி சேனலும் கண்டுகொள்ளவே இல்லை.


பயங்கரவாதத் தாக்குதல்களினால் மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்த சேனல்கள் ஏற்படுத்தின. அப்படி எதுவும் நடக்கவில்லை. சிவாஜி ரயில் நிலையம் மறு நாள் விடியற்காலையிலிருந்து இயங்கத் தொடங்கிவிட்டது. பயங்கரவாதிகளின் முற்றுகை நீடித்த இடங்களான ஹோட்டல் தாஜ், ஓபராய், நாரிமன் பவன் என்ற யூதர் குடியிருப்புக் கட்டடப் பகுதிகளைத் தவிர மீதி மும்பை சகஜமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது.மும்பையின் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாஜ், ஓபராய் ஹோட்டல்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மும்பையின், இந்தியாவின், உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் இடங்கள் அவை. தாக்குதலைப் பதிவு செய்ய 60 மணி நேரம் தாஜ் ஓட்டலுக்கு வெளியே முகாமிட்டிருந்த சுமார் 300 டி.வி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்களில் பத்துப் பதினைந்து பேரைத் தவிர வேறு யாரும் சாதாரண நாட்களில் அந்த ஹோட்டலுக்குள் போய் ஒரு காபி கூடக் குடிக்க முடியாது.


தினசரி 60 லட்சம் பயணிகளை காலையும் மாலையும் சுமந்து சென்று வரும் மும்பையின் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடித்தபோது, அதில் நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இறந்தபோது, மும்பை நகரமே தாக்கப்பட்டுவிட்டதாகவோ, இந்தியாவே தாக்கப்பட்டுவிட்டதாகவோ கூக்குரல் எழுப்பாத இந்த சேனல்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீதான தாக்குதல்களின் போது மட்டும் ஓவராக புலம்பி வருவது ஏன் ?


இந்தியாவை ஆட்டிப் படைக்கும் அதிகார சக்திகளின் சந்திப்பு இடம் இவை. பெரும் தொழிலதிபர்கள், உலக வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள், சினிமா நட்சத்திரங்கள், சினிமா, அரசியல், பயங்கரவாதம் அத்தனைக்கும் நிதியுதவி வழங்கும் மாஃபியா ரவுடி கும்பல் தலைவர்கள் தினசரி இந்த ஹோட்டல்களில்தான் சந்திக்கிறார்கள். நடைபாதையில் தூங்கும் சாதாரண மக்கள் மீது கார் ஏற்றிக் கொன்றுவிட்டு, காரை ஓட்டியது தானல்ல, டிரைவர்தான் என்று இன்னொரு சாதாரண மனிதனைச் சிறைக்கு அனுப்பி வைக்கும், பணக்கார வீட்டுப் பொறுக்கி வாரிசுகள்தான் லியோபோல்ட் கிளப்புகளின் முக்கிய வாடிக்கையாளர்கள்.
அதிகாரத்தின் சின்னம் இந்த ஹோட்டல். தேசத்தின் சின்னமோ, மக்களின் சின்னமோ அல்ல.


அதனால்தான் பயங்கரவாதிகள் இந்த முறை இதைத் தேர்ந்தெடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். சாதாரண மக்களைத் தாக்கி எந்தப் பயனும் இல்லை என்பது பயங்கரவாதிகளுக்கும் புரிந்து விட்டது. மார்க்கெட்டில், பஸ்களில், ரயிலில் குண்டு வைத்தால், சாதாரண மக்கள் சாகிறார்கள். ஆனால், மறு நாளே சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்கள். எதுவுமே நடக்காதது போல அவரவர் வேலைக்குப் போகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், சாதாரண மக்கள் சாகும்போது, எதுவுமே நடக்காதது போல தங்கள் ஊழல் அராஜக ஆட்சிப் பணிகளைத் தொடர்கிறார்கள். நட்சத்திர ஓட்டல்களை தாக்கிய வுடன்தான் அதிகார சக்திகளுக்கு பதற்றம் ஏற்படுகிறது. அவர்களை அண்டிப் பிழைக்கும் டி.வி சேனல்கள் எல்லாம் ஒப்பாரி வைக்கின்றன. `பொறுத்தது போதும். பொங்கி எழு' என்கின்றன.


பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகளில் மறு நாளே நகரம் சகஜ நிலைக்குத் திரும்பியபோது, அதை `ஸ்பிரிட் ஆஃப் மும்பை', `விழ விழ, எழுவோம்' என்றெல்லாம் கொண்டாடியவர்கள் இவர்கள். ஏனென்றால் அடுத்த நொடியிலேயே சாதாரண மனிதன் சகஜ நிலைக்குத் திரும்பியதால்தான், இந்தப் பணக்காரர்களுடைய ஆலைகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா படப்பிடிப்புகள் எல்லாம் தடையின்றி இயங்க முடிந்தது. தங்கள் தொழிலுக்கு பாதிப்பு வராதவரை அது `ஸ்பிரிட் ஆஃப் மும்பை.'


இப்போது இந்தப் பெரும் பணக்காரர்களே நேரடியாகத் தாக்கப்படும்போது, பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சாதாரண மக்களைத் தூண்டி விடுகிறார்கள். தங்கள் நீச்சல் குளங்களுக்கும், குடித்து கும்மாளம் போடும் ரெஸ்டாரண்ட்டுகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று அதை நெருக்குகிறார்கள். திவாலாகும் வரை லாபம் எல்லாம் தங்களுடையது. திவாலானால், காப்பாற்றவேண்டியது அரசின் பொறுப்பு என்று சிட்டி பேங்க் முதல் ஜெனரல் மோட்டார்ஸ் வரை சொல்லும் அதே அணுகுமுறை.


காவல் அதிகாரிகள் முதல் கமாண்டோக்கள் வரை பலர் உயிரிழந்தது பெரும் தியாகம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அறிவைப் பயன்படுத்தாத தியாகத்துக்கு ஒரு அர்த்தமும் இல்லை. மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கர்காரேவும் இன்னும் இரு உயர் போலீஸ் அதிகாரிகளும் ஒரே ஜீப்பில் சென்று பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானது முட்டாள்தனமானது. உயர் தலைமையில் இருப்பவர்கள் நெருக்கடியான நேரங்களில் ஒன்றாகப் பயணம் செய்வது கூடாது என்பது அடிப்படை விதி. பிரதமரும் ஜனாதிபதியும் ஒரே காரில் வருவதில்லை. இந்த சாதாரண அடிப்படை விதிகளைக் கூடப் பின்பற்றாமல் உயிர்த் தியாகம் செய்வதில் என்ன பயன்?


பேட்டி தந்த கடற்படை கமாண்டோவின் தலைவர், முகம் தெரியக்கூடாது என்று ஒரு துணி கட்டியிருக்கிறார். சினிமா கதாநாயகிகள் போடுகிற மாராப்பு மாதிரி; உள்ளே இருப்பதெல்லாம் தெரிவதற்கென்றே போடுகிற மறைப்பு போல. தாஜ் ஓட்டலின் உட்புற அமைப்பு எப்படி இருக்கும் என்று கமாண்டோக்களுக்குத் தெரியாதாம். அதனால் கடுமையாகப் போராட வேண்டியிருந்ததாம். ஆனால் பயங்கரவாதிகளுக்கு ஒட்டலின் அத்தனை பகுதிகளும் அத்துப்படி என்று அவரே சர்ட்டிஃபிகேட் தருகிறார்.
பல மணி நேரம் போட வேண்டிய சண்டை என்று தெரிந்தே செல்கிற கமாண்டோக்கள், ஏன் மேலும் ஒரு மணி நேரம் ஓட்டலின் வரைபடத்தைப் பார்த்துப் படித்து திட்டமிட்டுவிட்டு நுழைந்திருக்கக்கூடாதா ? ஓட்டல் அதிபர் ரத்தன் டாட்டா நினைத்தால் அரை மணி நேரத்தில் ஓட்டலின் வரைபடத்தை வரவழைத்துத் தரமுடியாதா ? பயங்கரவாதிகளிடம் சேட்டிலைட் படங்களெல்லாம் இருந்ததாம். ஏன், அதெல்லாம் இந்திய அரசிடம் கிடையாதா ?


இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பாத டி.வி.சேனல்கள், வசதியாக எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிதான் காரணம் என்று குற்றம் சாட்டுவதை, ஒரு இயக்கமாக ஒரு வாரமாக செய்து வருகின்றன. தேசத்துக்கே நெருக்கடியான இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் மும்பைக்கு சேர்ந்து வரக்கூடாதா, தனித்தனியாக வரவேண்டுமா என்று ராஜ்தீப்பும் அர்னாபும் கேட்கிறார்கள். தேச நெருக்கடி என்றால் அரசியல்வாதிகள் கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு ஒன்று சேரவேண்டுமாம். அந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாதாம். சரி. சேனல்கள்? அவை எப்படி நடக்க வேண்டும்? அவையும் ஒவ்வொரு இடத்துக்கும் தனித் தனி கேமரா, தனித் தனி நிருபர் அனுப்பாமல், ஒளிப்பதிவை, பேட்டிகளை பகிர்ந்துகொள்ளலாமே. மிச்சப்படும் நிறைய பேரை இன்னும் அதிக இடங்களுக்கு அனுப்பலாமே. மாட்டார்கள். சேனல்களில் பத்து நிமிடத்துக்கொரு முறை என்ன சொன்னார்கள் தெரியுமா? `இந்த செய்தி எங்கள் சேனலின் பிரத்யேக செய்தி. இதை முதலில் சொன்னது நாங்கள்தான்.'


தேச நெருக்கடியில் நீங்கள் இப்படி வியாபாரம் செய்யலாமென்றால், அரசியல்வாதி அரசியல் செய்யக் கூடாதா ?உண்மையில் அரசியல் செய்வது சேனல்கள்தான். இந்த நாட்டின் பெரும் பணக்காரர்கள் சார்பான அரசியல். சாதாரண மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சொல்லாதவர்கள், நட்சத்திர ஓட்டல் தாக்கப்பட்டதும் பொங்கி எழச் சொல்லி தூண்டுகிறார்கள். அமிதாப், அமீர்கான் எல்லாரும் இணையத்தில் புலம்புகிறார்கள்.


சேனல்களின் தொடர் பிரசார அரசியல் வெற்றி பெறுகிறது என்பது இன்னொரு வேதனை. பாபர் மசூதி இடிப்புக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்டதற்கு, பஸ், ரயில் குண்டு வெடிப்புகளுக்கு, குஜராத் கோவில் தாக்குதலுக்கு, முஸ்லிம்கள் படுகொலைக்கு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்கு ராஜினாமாக்கள் இல்லை. ஆனால் நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்கு ஒரு மத்திய உள்துறை அமைச்சர், மாநில முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று மூன்று தலைகள் உருட்டப்பட்டிருக்கின்றன.எல்லா அரசியலும் எல்லா அரசியல்வாதியும் மோசம் என்ற கருத்தை இந்த சேனல்கள் பரப்புகின்றன. ஒரு சர்வாதிகாரி நாட்டுக்குத் தேவை என்ற மனநிலையை மறைமுகமாகப் பரப்புகின்றன. சர்வாதிகாரிகளும் பயங்கரவாதிகளும்தான் பணக்காரர்களுக்கு உகப்பானவர்கள். ஏனென்றால் பேரம் பேச வசதியானவர்கள் அவர்கள்தான். ஜனநாயகத்தின் அரசியல்வாதிகள் ஒரு கட்டத்துக்கு மேல் மக்களுக்கு பயந்தாக வேண்டும். மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு அரசியல்வாதிகளின் மீதான ஒட்டுமொத்த அவ நம்பிக்கையை ஏற்படுத்துவது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது. எல்லை கடந்த பயங்கரவாதத்தை விட ஆபத்தானது இந்த உள்ளூர் பயங்கரவாதம். கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்படும் இந்த யுத்தம் நம் உடல் மீது அல்ல, உள்ளத்தின் மீது, சிந்தனை மீது. உஷாராக இருப்போம்.

நன்றி குமுதம்.

Thursday, December 4, 2008

அப்போ இனிமே ஸ்பெக்ட்ரம், சன் டிவியின் நடுநிலைமை--முகமூடி


இப்போதைக்கு பதிவுலகில் கலைஞர்--மாறன் சேர்ந்ததை பற்றி பின்னி பெடலெடுக்கிறார்கள். இதையெல்லம் அவுங்க படிச்சாங்கன்னா??


இவர்கள் சேர்ந்ததால் பல விசயங்கள் மூழ்கிப்போகலாம். அதில் முக்கியமானது.
1. அரசு கேபிள் கார்ப்பரேசன்.
2. ஹாத்வே கேபிள்
3. சன்னின் நடுநிலையான செய்திகள்.?????
4. ஸ்பெக்ட்ரம், மின்வெட்டு
5. தினகரன் சம்பவம்.

அரசு கேபிள் மாறன் சகோதரர்களின் கேபிள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. கோடிக்கணக்கில் மக்க்ளின் வரிப்பணம் இதில் செலவிடப்பட்டுள்ளது. இதன் நிலைமை????????
தினகரன் சம்பவத்திற்கு பிறகு சென்னையில் திமுகவின் ஆதரவுடன் ஹாத்வே நிறுவனம் இரவோடு இரவாக எஸ்சிவி லைனை துண்டித்துவிட்டு அவர்கள் லைனை மாற்றினார்கள். இப்போது மாறிய ஆப்பரேட்டர்களின் நிலை. தற்போது பெரம்பூர் முழுவதும் மறுபடியும் எஸ்சிவி லைன் கொடுக்கப்போவதாக நியூஸ் வருது.

கடந்த ஒருவருடத்திற்கு மேல் சன் டிவி தாங்கள் நடுனிலைமையுடன் செய்திகளை வெளியிடுவதாக சொல்லி எல்லோருக்கும் திமுகவை தவிர அனைவருக்கும் தோள் கொடுத்தார்கள்!!!!!. இப்பவே ரெண்டு நாளா நமுத்து போன அப்பளம் மாதிரி ஆயிற்று சன் செய்திகள்.
இனிமே அமைச்சர்கள் ஆற்காட்டார், ராசா போன்றவர்கள் நிம்மதியா இருப்பாங்கோ....
இவ்வளவு நடந்தும் சிலபதிவர்கள் தினகரன் சம்பவத்துக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் தொடர்பில்லை எனக் கூறுவது மனசாட்சியோடு எழுதுகிறார்களா எப்படின்னே தெரியல.
எல்லா கட்சிக்காரவுகளுக்கும் அவங்க தலைவரோ, அல்லது அவர்களது அடிவருடிகளோ செய்யும் கொலைகளுக்கு அவங்க சொல்லும் காரணம் அவங்க ஆட்சில நடக்கலையா/இவங்க ஆட்சில நடக்கலையான்னு எதிர் கேள்வி கேக்குறாங்கோ?
அடப்பாவி மக்கா உன் குண்டியிலே பீ.................. யேண்டா மத்தவங்களை குறை சொல்றீங்கோ?
முதல்ல அடுத்தவனை குறை சொல்லுவதைவிட்டு உங்கிட்ட என்னனு பாரு..